Pages

Monday, 14 December 2015

சம்பவங்கள் சில

புதிதாக என் அலுவலகத்தில் ஒரு பையன் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். ராஜஸ்தான்காரன்.   மனித வளத்துறையைச் சார்ந்த பெண் ஒருத்தி உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவள்.  எனவே அவளுக்கு பெறுகின்ற வேலை தொடர்பான ஆட்கள் எல்லாம் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.  அவனுடன் பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டேன்.  அவனும் அவன் நண்பனும் ஒன்றாகத் தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அவன் தமிழ்க்காரன்.  பேசிக்கொண்டிருக்கும் போது , ‘நம் அலுவலகத்தில் நிறையப் பேர் ஹிந்திக்காரர்கள்தான் ஆனாலும் ஏன் பெரும்பாலானவர்களுக்கு ஹிந்தி தெரியவில்லை’ என்றான் ஆங்கிலத்தில்.  நான் சீண்டப்பட்டதாய் உணர்ந்தேன்.  சரட்டென எழுந்த ஒரு நியாமான வன்மம், அவனை ஏதாவது கேட்க வேண்டும் என்று என்னைத் தூண்டியது.  

‘நீ எந்த ஊர்’, என்றேன். 

‘ராஜஸ்தான்’, என்றான்.

‘உன் மொழி எது?’

‘ஹிந்தி’ என்றான் பிரகாசமாக.

‘உண்மையிலேயே ஹிந்திதானா? பிராந்திய மொழி இல்லையா? இருக்கவேண்டுமே?’.

‘ஓ… அதுவா…’, என்று ஒரு இழுவை இழுத்தபின், ‘ராஜஸ்தானி’ என்றான்.

‘பிறகு ஏன் ஹிந்தி என்றாய்?’

‘இரண்டு மொழிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.  இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.’

‘பிறகு ஏன் ராஜஸ்தானி என்று ஒரு தனி மொழி வைத்திருக்கிறீர்கள்?’

‘இல்ல… பெரிய வித்தியாசமெல்லாம் ஒன்றும் இல்லை.’, என்றான் பீதியுடன்.  மலங்க மலங்க விழித்த அவன் கண்கள் என் வெற்றியை உறுதி செய்தது.  

‘அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.  ஏன்னா, கிட்டத்தட்ட தமிழும் மலையாளமும் ஒன்றுதான்.  ஆனால் எந்த மலையாளியும் உன் மொழி என்ன என்று கேட்டால் தமிழ் என்று சொல்ல மாட்டான். மலையாளம் என்று தான் சொல்வான். அதுதான் சரியும் உண்மையும்.’.

இதற்கு அவன் எந்த மறுப்பும் சொல்லமாட்டான் என, அவன் விழிகள் எனக்கு முன்னமே சமிக்ஞை காட்டிவிட்டன.  மிக வேகமாக ஏற்றுக் கொண்டதாய் தலையை அசைத்தான்.  எனக்கு ஒரு மாபெரும் திருப்தி.  அதன்பின் அவனுடன் ஒரே காரில் ஒரு மீட்டிங்கிற்குச் செல்ல வேண்டியிருந்தது.  அப்போது என்னோடு பேசும் போது அவன் மிக மிக கவனமாய் பேசினான்.  அதை நான் உணர்ந்தாலும், சகஜமாகவே பேசி வந்தேன்.

எக்காரணத்துக்காகவும் எவனொருவனும் தன் தாய்மொழியை மாற்றிச் சொல்லலாகாது.  ஆனாலும், தன் தாய்மொழியைப் பற்றி உயர்வான எண்ணம் இல்லாதவனுக்கு, வேறு எந்த மொழியின் மீதும் மதிப்போ, அதன் பெருமிதங்களை அறிவது குறித்தோ எந்த பிரக்ஞையும் இருக்க வாய்ப்பு வெகு குறைவு.  ஆனால், என்னை தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுத்துத் திமிறும் ஒருவனாகவே அவன் என்னைப் பார்த்தான்.  அவனைப் போல் என் தாய்மொழி என்ன என்று கேட்டால் ஹிந்தி என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தானா? அல்லது நான், அப்படி அவன் நினைத்ததாக எண்ணிக் கொண்டேனா? இரண்டிலும் உண்மை இருக்கிறது.

இன்னொரு சம்பவம்.  மதுரைக்கு என் அப்பாயியின் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்தேன்.  சென்னையில் மழை வலுக்கத் தொடங்கிய நாளன்று.  டிசம்பர் ஒன்று.  சென்னை - மதுரை அரசுப் பேருந்து.  மழையாகையால் பெரும் கூட்டம் ஒன்றும் இல்லை.  முன்னிருக்கைகளில் சில பதுவைப் பெண்களும், சில அங்கிள்களும்.  வழக்கமாக நான் பின்னிருக்கைகளில் தான் அமர்வேன்.  எந்த இருக்கையில் அமரலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தேன்.  கடைசியில் சென்று பார்த்தால், சற்று முன்னர் போடப்பட்டிருந்த வாந்தியில் செம்மண்ணை அள்ளிப் போட்டுக் கழுவி விட்டதன் வடு இருந்தது.  எனவே, எனக்கு அங்கே அமர ஒப்பவில்லை.  மூன்று இருக்கைகள் தள்ளி வந்தமர்ந்தேன்.  எனக்கு முன் 5-6 வடஇந்திய இளைஞர்கள்.  பொருள் வேண்டி இடம்பெயரும் சமுத்திரம் ஒன்றின் சில துளிகள் அவர்கள்.  அப்போது எனக்கு திடீரென்று அவர்கள் மேல் பேரிரக்கம் வந்தது.  எனக்கு இது பொன்ற பயணப் பொழுதகள் இளகிய மனம் படைத்தவனாகிப் போகிறேன்.  பேச மறுத்துப் போய், என் மனத்தின் ஈரப் பகுதிகளில் மோப்பம் பிடித்துப் பார்த்த வண்ணம் இருக்கிறேன்.  அப்படியான பொழுதுகளை பெரும் ஆசையுடன் எதிர் பார்க்கிறேன்.  ஆனால், அதன்பின் என்னைப் பீடிக்கப் போகும் வெறுமை குறித்தும் பயம் கொள்கிறேன்.  அதனால் தானோ என்னவோ, இதுபோன்ற சந்தர்ப்பங்களை நான் ஒருசேர ஏக்கத்தோடும் வெறுப்போடும் எதிர்பார்க்கிறேன்.

புத்தகம் ஒன்றை எடுத்துப் போயிருந்தேன்.  ஜெயமோகனின் ‘நினைவின் நதியில் - சுந்தர ராமசாமி’.  படித்துக் கொண்டிருந்தேன்.  வடஇந்தியர்கள் தான் எப்போதும் பான்பராக் மென்று கொண்டு இருப்பார்களே.  என் முன்னால் அமர்ந்திருந்த ஒருவன், மழை பெய்து கொண்டிருந்த சமயத்திலும் அடிக்கடி ஜன்னலை திறந்து திறந்து எச்சிலைத் துப்பிக் கொண்டிருந்தான்.  எனக்கு நேரம் ஆக ஆக கோபம் ஏறிக் கொண்டே இருந்தது.  வழக்கமாக பயணங்களில் நான் தான் பக்கத்திலிருப்போரை வெறுப்பேற்றுவேன், தூங்கி விழுந்து.  இது புதிதாக இருந்தது.   ஒருமுறை அவன் ஜன்னலைத் திறந்து எச்சிலைத் துப்பிய போது, ஒரு துளி திரவம் என் கைகளில் வந்து பட்டது.  அது எச்சலா, தண்ணீரா என்றெல்லாம் எனக்கு அக்கறை இல்லை.    எழுந்து அவன் முதுகில் பலத்த அறை ஒன்றை வைத்தேன்.  பெரும் சத்தம்.  என்னை விட பெரிய உடலும் வலுவும் கொண்டிருந்த அவன், என்னை நோக்கி அதிர்ச்சயும் கருணையை எதிர்பார்க்கும் கண்களையும் என்னிடம் காட்டினான். ‘கியா பய்யா?’ என்றான், மெல்லிய குரலில்.  ‘எச்சி துப்பறதா இருந்தா வெளிய போய் துப்புடா’ என்று கத்தினேன்.  அக்கத்தல் வெறுப்பில் உச்சத்தில் இருந்ததை நான் உணர்ந்தேன்.  திடீரென்று ஒரு பதட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது.  அவன் திருப்பி அடித்தால்?  அதை வெளிக்காட்டாமல் இருக்க, சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னேன்.  அவனுக்கு முதலில் புரியவில்லை.  பின் அவர்களோடு இருந்த தமிழ்க்காரன் ஒருவன், அவனை சைகையால் விளக்க, அவன் லேசாக நகர்ந்து அடுத்த இருக்கையில் அமர்ந்தான்.

சில கணங்களுக்குப் பின் யோசித்துப் பார்த்தேன்.  அவன் ஏன் அவன் சொந்த ஊரை விட்டு விட்டு இங்கு வந்தான்?  அவன் ஊரில் மிக மதிக்கத்தக்க ஒருவனாக இருப்பானோ?  அப்படி என்றால் இந்த அவமானத்தை அவன் எங்ஙனம் எடுத்துக் கொள்வான்?  சொந்த ஊரில் இருந்திருந்தால் இப்படி எல்லாம் அவமானப்படத் தேவையில்லையே என்று நினைத்திருப்பானோ? 
இன்னும் நினைத்துப் பார்த்துக் கொண்டேன்,  அவன் நிலையில் நானும் என் நிலையில் அவனும் இருந்தால் என்ன ஆகும் என்று.  நான் எதுவும் செய்திருக்க மாட்டேன். அவனைப் போலவே அமைதியாய் நகர்ந்து சென்றிருப்பேன்.  ஆனால், என்னால் திருப்பி என்ன என்று கூட கேட்க முடியவில்லையே என்று, என் இயலாமையை எண்ணி நொந்திருப்பேன்.  கண்கள் கட்டாயம் சில துளிகளையாவது சிந்தியிருக்கும்.
ஏன் அப்படி ஒரு கோபம் கொண்டேன் என்று எனக்கே, என் மேல் கடுப்பு.  அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் ஒன்று, நம் ஈகோவைக் கொல்வது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை.  மூன்று இருக்கைகள் தள்ளித் தான் அமர்ந்திருந்தான்.  கடைசிவரை அவன் கண்களைக் கூட சந்திக்க முடியவில்லை.  குற்றவுணர்வுள்ள எனக்கே இப்படி என்றால், அடிபட்ட அவன் எப்படி இருந்திருப்பான்.



மேற்கண்ட இரு சந்தர்ப்பங்களிலும், என் பிழை மிக மிக வெளிப்படையானது.  என் தரப்பை இன்னும் என் மென்மையாகச் சொல்லியிருக்க வேண்டும்.  சொல்லப் போனால் இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும்.  இந்நேரம் அவர்கள் இருவருக்கும் நம் சூழலைப் பற்றி என்னால் ஒரு எதிர்மறையான உண்டாகியிருக்கும்.  இது உண்மையோ இல்லையோ? ஆனால், என்னால் அவர்கள் சங்கடப் பட்டிருப்பார்கள்.  இனி நான் எப்போதும் இப்படித் தவறியேனும் செய்வதில்லை.

Friday, 11 December 2015

அட்ரிலினும் - அன்பும்

என் அலுவலகத்தில் பிராமணர்கள் அதிகம்.  இதைக் கண்டறிய தனியாக மெனக்கெட வேண்டியதில்லை. எப்போதும் போல அவர்கள் தங்கள் தனித்துவத்தை அடையாளம் காட்டும் விதமாக, தனித்துவமான மொழியைப் பேசுவதாகட்டும், ‘அய்யோ, நான்-வெஜ்ஜா’ என்பதாகட்டும், இப்படி வெளிப்படுத்திய வண்ணம் இருப்பர்.  எல்லோரையும் போல் எனக்கும் அது அசூயையாகவே இருக்கும்.  இன்னொன்றையும் சொல்லியே ஆக வேண்டும்.  ஒருபோதும் துவேஷத்தைக் காட்டுவதில்லை.

தங்களின் உணவுப் பழக்கத்தை அதிகமும் சிலாகித்துப் பேசிய வண்ணம் இருப்பர்.  எங்களிடம் ஒரு புராஜக்ட் ஒன்று உண்டு, ஆன்லைன் கறிக்கடை.  அதன் மேலாளர் அய்யர் பெண்மணி.  கேட்கவும் வேண்டுமோ?  கிடைக்கிற இடைவெளியிலெல்லாம் தன் ஒவ்வாமையை, மாமிச உணவின் மீதான தன் ‘உவ்வே’யை காட்டுவார்.  எனக்காகட்டும், அதில் வேலை செய்யும் என் நண்பனாகட்டும் சடாரென வெறுப்பு ஒன்று வந்து தொலைக்கும்.  நியாயம்தானே? இப்போதெல்லாம் அது கொஞ்சம் கொஞ்சமாக சரியில்லையோ என்று தோன்றியவாறு உள்ளது.  காரணம் இருக்கிறது.  

இடையில் ஒருநாள், அலுவலகத்திலிருந்து சாப்பிட வெளியே ஒரு ஜப்பானிய கடைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.  கடையின் பெயர் - மொமோ யொமா.  உள்ளே நுழைந்ததும் ஒரு வாசம்.  அது உணவுப் பொருள்களின் வாசம் என்பதை சாப்பிட ஆரம்பித்தபின் தான் தெரிய வந்தது.  நான், கிடைத்த எல்லா அசைவத்தையும் ஆர்ட்ர் செய்தேன், பன்றி, மாடு, மீன்(சுசி, டூனா) மற்றும் சிக்கன்.  அங்கு எனக்கு சில ஆச்சரியங்கள் இருந்தன.  தேநீர் குளர்ந்திருந்தது. அதுவும் துளி கூட இனிப்பின்றி, வெளிர் பச்சை வண்ணத்தோடு, சுவையும் மிக மிக மென்மையான கசப்பு.  அசைவ உணவுப் பதார்த்தங்கள் எல்லாம் அரைவேக்காடுதான். மாட்டுக்கறி நன்றாக இருந்தது.  பன்றிக்கறி இதுவரை நான் சாப்பிட்டதில் மிக மிக மென்மையான பன்றிக்கறி.  செம்பருத்தி இதழ்களைத் தின்பதைப் போல இருந்தது.  மீனை சமைக்கக் கூடாதாம், பச்சை மீனை இரண்டு விரல் அளவு  பிரட் துண்டின் இடையில் வைத்து இருந்தனர்.  வேகவைக்காதது என்று சொல்லியிருந்தனர். ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை, மாடு மற்றும் பன்றிக்கறையைப் போல, அரைகுறையாக வேகவைத்திருப்பார்கள் என்று.  பிறகுதான் தெரிந்தது, சுத்தமாக வேகவைக்கப் படவில்லை.  பச்சை மீன் அப்படி இருக்கும் என்று நான் நினைத்ததே இல்லை.  கவிச்சை அடித்தது.  ஆனாலும் அதெல்லாம் அப்படியொன்றும் பெரிய விஷயமில்லை. சாப்பிடும் போது என் நாக்கை நானே சாப்பிடுவது போல ஒரு ருசி.  உப்பின் சுவை சமைக்கப் படாத இறைச்சியில் அதிகம் இருக்கும் போல.  மொத்தம் ஆறு மீன் துண்டுகள்.  இரண்டுக்கு மேல் என்னால் சாப்பிட முடியவில்லை.  மூன்றாவது துண்டை வாயில் வைத்தபோது, குமட்டிவிட்டது.  கவிச்சையெல்லாம் ஒரு பொருட்டல்ல, ஆனால் பச்சைக் கறியின் சுவையை என்னால் ஏற்கமுடியவில்லை.  எனக்கெல்லாம் உணவுப் பொருளும் குமட்டும் என்று கண்டுகொண்டேன்.  ‘நானெல்லாம் சாக்கடைக்குள்ளேயே கூடுகட்டி வாழ்ந்தவன்’ என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு பெரிய இடிதான்.

இதன்பின் ஒன்றை யோசிக்க ஆரம்பித்தேன், என் அருகே அமர்ந்திருந்த நான்கு சைவ பக்கிங்களின் நிலையை. ரொம்பக் கஷ்டம் தான்.  பாவம்.  அன்று முதல், அவர்களுடைய மாமிச உணவின் ஒவ்வாமையை என்னால் உணர முடிகிறது.  ஆனால், இன்னொரு முக்கியமான விஷயம், தமிழ்த் திரைப்படங்களில் அய்யர்களை துக்கடாக்களாக, No: 1 காமெடிப் பீஸுகளாகக் காட்டியபடி தான் இருக்கிறோம்.  அது ஒரு பெரிய விஷயமாக தெரிந்ததில்லை.  ஆனால் இப்போது அதே போல மாமிசம் உண்பவர்களை, அவர்களின் கூட்டத்தில் இருந்து என்னைச் சொல்லும் போது புரிகிறது.  அன்றுமுதல் நான் வெறுமனே அவர்களை எள்ளல் செய்வதை விட்டொழித்துவிட்டேன்.  ஆனாலும் அவர்கள் தங்கள் தனித்துவத்தை பேணும் பொருட்டு அதை விடுத்த பாடும் இல்லை, சீண்டலின் போது நானும் மடக்குவதற்கான பேச்சுக்களைப் பேசியிருக்கிறேன்.  பிழைதான்.  செய்வதற்கு ஒன்றும் இல்லை.

நிற்க.

மாமழை ஒன்று எம்மைச் தழுவிச் சென்றிருக்கிறது.  அது ஏற்படுத்திய விளைவுகள் பலவேறு மனக்குழப்பங்களையும் மனத்தெளிவுகளையும் எல்லோரிடத்திலும் உண்டாக்கியிருக்கிறது.  குழப்பங்களாக சொல்வதென்றால், அரசியல் நடவடிக்கைகளும், மீடியா குவிந்ததும், வட இந்திய ஊடகங்களின் செயல்பாடுகளும், நம்முடைய நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளும், அதனால் நாம் அடைந்த விளைவுகளும், வெள்ளத்தின் முதல் இரண்டு நாட்களில் சில கடைக்காரர்கள் கொள்ளை விலைக்கு விற்றதும் மற்றும் இன்னபிற.

இதுபோன்ற இக்கட்டான சூழல்களினால் தான் நம் கீழ்மைகளும் மேன்மைகளும் ஒருசேர வெளிப்படும்.  அனைவரின் மனச்சாட்சியோடும் இம்மழை ஒரு மாபெரும் உரையாடல் நிகழ்த்தியிருக்கிறது.  அதை தினந்தோறும் வந்து கொண்டிருக்கும் செய்திகளும், களப்பணியார்களின் பேட்டிகளும் காட்டிய வண்ணம் உள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லா மக்களும் இருந்திருப்பார்கள் தானே?  வீட்டில் சமைக்க இயலாத பல ஏரியாக்களில் முதலில் வீதியில் அடுப்பை ஏற்றியது அய்யர்கள் தானாம்.  கேள்விப்பட்ட போது ஒருவகை நெகிழ்ச்சி ஏற்பட்டது.  பொதுவாக பொதுப் பிரச்சினைகளுக்கு தெருவிலிறங்கிச் செயல்படுவது ஒருவகை பொறுக்கித் தனம் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு என்பது என் கணிப்பு.  

நாய் விரட்டம் போது, தாண்ட முடியாத பள்ளத்தையும் தாண்டி விடுவோம்.  அதுபோன்ற அசாதாரண சம்பவங்களின் போது நம்முடைய சுரப்பிகளில் ஒன்றான ‘அட்ரலின்’ சுரந்து அப்படி ஒரு வேகத்தையும் ஒரு  உச்சகட்ட விழிப்புத் தன்மையையும் நமக்குள் உண்டாக்கிவிடும்.  அப்படி ஒரு விழிப்புத் தன்மையை கடந்த சில வாரங்களாக நம்மில் பலர் இருந்து கொண்டு, மீட்புப் பணிகளேயும் நிவாரணப் பணிகளையும் மேற்கொள்வதைப் பார்க்கையில் சிறு நெருப்பும் ஒளியும் தென்படுகிறது. பாரதி பிறந்தநாளான இன்று, அந்நெருப்பை அணையாமல் காத்து, சுயநலக் காட்டில் வைப்போம். வெந்து தணியட்டும் அக்காடு.  இப்பதிவை ஆரம்பித்த போது, இன்று பாரதியின் பிறந்தநாள் என்பதே என் நினைவில் இல்லை.  ஆகவே யாரும் இப்பதிவின் தொடக்கத்தைக் கொண்டு பாரதியை இணைப்பதாக எண்ண வேண்டாம்.  அவர் அமைப்புகளுக்குள்ளும் வீண் ஜம்பத்துக்குள்ளும் அடங்காதவர்.


வாழ்க பாரதி.

Sunday, 29 November 2015

தேங்கிவிட்டோமா?





நொபுரு கரோஷிமா - இந்தப் பெயரை நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.  யாரென்று தெரய வந்த பின் வெட்கத்தால் வெம்முகிறேன். இம்மாதம் 26-ல் இறந்து போயிருக்கிறார்.  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர்.  பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.

ஜப்பானியர்.  24 ஏப்ரல் 1933-ல் பிறந்திருக்கிறார்.  வரலாற்றுத் துறைப் பேராசிரியராக்ப் பணியாற்றிருக்கிறார்.  இவருடைய ஆய்வுகள் தென்னிந்தியாவைச் சார்ந்து அதிலும் தமிழக வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார் என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.  நானும் அவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலைப் பார்த்தேன்.  எல்லாம் நம் வரலாறே.  தெற்காசிய வரலாற்றாசிரியர் என்று அவர் குறிப்பிடப்பட்டாலும், பண்டைய தமிழக வரலாறு சார்ந்தே அமைந்திருக்கிறது அவருடைய ஆய்வுகள்.  வரலாறு எப்போதும் கடந்த காலத்தின் தரவுகளின் மூலம், எதிர்காலத்தைக் கண்டடைய முயல்வதின்றி வேறில்லை. எனவே வரலாற்றினை அரசியலுக்காக படிக்காமல், சரிவரச் செய்வோர் எப்போதும் சமரசமில்லாத ஆட்களாகவே இருப்பர்.  எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களில் சிலர் அப்படி இருந்துள்ளனர்.  கல்லூரியில் ‘Religious Docotorine’ எடுத்த பாதிரியார் தம்புராஜ் அப்படிப் பட்டவர்களில் ஒருவர்.  திருச்சபையின் வரலாற்றைத் தெளிவுறச் சொன்னவர்.  அப்படிப் பார்க்கையில், நொபுரு கரோஷிமா இன்றைய நம் அரசியல்வாதிகள் சொல்லும் வரலாற்றைக் கிழித்துத் தொங்கவிட்டிருப்பார் போலும், தன் தரவுகளால்.  தீவிரமான மாற்றுப் பார்வை ஒன்றை வைத்திருந்திருக்கிறார்.  எவரும் மறுத்தது போல் தெரியவில்லை.  ஆனால், மௌனமாக, காரணமின்றி நிராகரிக்கப்பட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.  

நான் சொல்லப் போகின்றனவற்றை நீங்கள் இணையத்தில் படித்துக் கொள்ளலாம்.  ஏன், மேலதிகத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.  நானும் அங்கிருந்தே தெரிந்து கொண்டேன்.  ஆனாலும், என் தெளிவுக்காக பின்வருமாறு தொகுத்துக் கொள்கிறேன்.

  1. உலகத் தமிழாராய்ச்சிக் நிறுவனம்(IATR - உ.த.நி) பல தமிழ் அறிஞர் பெருமக்களின் பெருமுயற்சியால் 1964-ல் நியூ டெல்லியில் தொடங்கப்பட்டிருக்கிறது.  அதன் முதல் அமர்வு 1966-ல் கோலாலம்பூரில் நடந்திருக்கிறது.
  2. உ.த.நி. தொடக்கத்தில், முக்கிய ஆளாக இருந்தவர், தனிநாயகம் அடிகளார்.  இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பாதிரி.
  3. 1967-ல் தி.மு.க. தேர்தலில் வென்று அண்ணாத்துரையின் தலைமையில் ஆட்சிப் பீடம் ஏறுகின்றது.  1968-ல் சென்னை(மதராஸ்)யில் நடப்பதாக முன்னமே திட்டமிடப்பட்டிருந்த உ.த.நி.ன் அடுத்த அமர்வு, ஆட்சி மாற்றத்தால், அரசியல் சாயம் சற்றே பூசப்பட்டு விடுகிறது.  ஆனால், அதன் வீச்சு வெறுமனே அரசியலாக மட்டும் இல்லை என்பது மட்டும் தெளிவு.
  4. அதன் அடுத்தடுத்த அமர்வுகளும் அவ்வாறே.  1981-ல் மதுரை(அ.இ.அ.தி.மு.க - எம்.ஜி.ராமச்சந்திரன்), வரும் தேர்தலுக்கான விளம்பரமாக, ‘பாரு என் வெயிட்ட’ என்பது போலவே நடந்திருக்கிறது.  1985-ல் கோலாலம்பூர்(அ.இ.அ.தி.மு.க-எம்.ஜி.ராமச்சந்திரன்) - அதே வேலை.
  5. ஏழாவது அமர்வு, 1989-ல் மொரீஷியஸில் நடந்திருக்கிறது.  நொபுரு கரோஷிமா, இதில் கலந்து கொள்ளவில்லை.  இந்த அமர்வில் அவர் உ.த.நி.ன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
  6. எட்டாவது அமர்வு, 1995(அ.இ.அ.தி.மு.க - ஜெயலலிதா)-ல் தஞ்சாவூரில் நடந்திருக்கிறது.  உ.த.நி. ஒருங்கிணைத்திருக்கிறது, நொபுரு கரோஷிமாவின் தலைமையில்.  அரசியல் நிகழ்வுகளையும், அமைப்பின் நிகழ்வுகளையும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்க முயன்றதாகச் சொல்லியிருக்கிறார்.  நமக்குத் தெரியாதா என்ன நடந்திருக்கும் என்று?
  7. ஒன்பதாவது அமர்வு, ஜூலை, 2010(தி.மு.க.- கருணாநிதி)-ல் கோயம்புத்தூரில் வைத்துக் கொள்ளலாம் என்று அரசின் சார்பில், நொபுரு கரோஷிமாவுக்கு, நான்கு மாதங்களுக்கு முன் கடிதம் அனுப்பப் படுகிறது.  அதற்கு பதிலாக, மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும் என கேட்டிருக்கிறார். அவை,
    1. நான்கு மாதங்கள் என்பது வெகு குறைவு.  இன்னும் ஒரு ஆறு மாதங்கள் சேர்த்துக் கொண்டு, 2010 டிசம்பர் அல்லது 2011 ஜனவரியில் ஏற்பாடு செய்வது சிறந்தது.
    2. அரசியல் நிகழ்வுகளும், தமிழ் சார்ந்த நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று கலக்கக் கூடாது.
    3. 1995-ல் நடந்த எட்டாவது அமர்வில் முடிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் வெளியிடத் தயாராக 2005 முதல், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய, அதாவது 2010-ன் தமிழக அரசு, வெளியிடுவதற்கான அனுமதியைக் கொடுக்கவில்லை.  மீண்டும் மீண்டும் கேட்கப் பட்டுக் கொண்டிருந்த போதும்.
நொபுரு கரோஷிமாவின் முதல் கோர்க்கையைத் தவிர மற்றவை ஏற்கப்பட்டன.  காரணம் நமக்குத் தெரியாதா என்ன? 2011-ல் தேர்தல்.  ஏற்கனவே இலங்கைப் பிரச்சினையில் மூக்கடி பட்டாயிற்று.  அந்த வலிக்கு, இவ்விழாவினைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க முயன்றிருப்பார்கள் போல. 

நிற்க.

நொபுரு கரோஷிமா, தமிழுக்கான ஆராய்ச்சியில் புதுப்போக்குகளை திறந்து விட்டிருக்கிறார்.  நான் இன்னும் படித்து அவரை அறியவில்லை.  அவர் தலைமைப் பொறுப்பேற்றது முதல், அரசியல் அழுத்தங்கள் அதிகரித்த வண்ணம் இருந்திருக்கிறது.  எம்.ஜி.ஆர். மதுரை அமர்வை, தன் அடுத்த தேர்தலுக்கான பலம் காட்டும் போட்டியாகவே எண்ணி நிகழ்த்தியிருக்கிறார்.  கருணாநிதியும் அஞ்ஞனம்,  ஆட்சி முடிவதற்குள், தான் முன்னின்று, அவ்விழாவினை தன் வாழ்வில் ஒருமுறை நிகழ்த்த ஆசைப்பட்டு நிகழ்த்தியிருக்கிறார்.  கருணாநிதி, விழாவுக்கு முன், தன்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என்று சொன்னார்.  அதையே சொல்லி லியோனி புகழ்ந்ததையும் காணும் பேறு பெற்றவர்கள், நாம்.

நொபுரு கரோஷிமா, 2010-ல் தான் பதவி விலகியிருக்கிறார்.  காரணம் என்னவென்று சொல்லத்தான் வேண்டுமோ?  மனம் வெறுத்து, இயன்றதைச் செய்வோம் என்று இருந்தவர், போதும்டா சாமி என்று போயிருக்கிறார்.  இன்னொரு மனம் வருந்தச் செய்யும் செய்தி, அவருடைய நூல்களில் ஒன்று கூட இன்று வரை மொழிபெயர்க்கப் படவில்லை.

ஒரு மொழிக்கு, அதன் நிலவியல், பண்பாடு, அரசியல், மற்றும் கருத்துத் தளம் சார்ந்து ஆய்வுகள் அமையப் பெற வேண்டும்.  ஏனெனில், ஆய்வுகள் மறுப்பாய்வுகளை உண்டாக்கும். ஆய்வுகளும் - மறுப்பாய்வுகளும், உரையாடல் மூலம் கருத்தை உண்டாக்கும்.  அது, நாம் இனி செல்ல வேண்டிய பாதையைத் தெளிவுறக் காட்டும்.  அதுசரி, பெரும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரின் ஆய்வு நூல்களே இன்னும் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கும் போது, மறுப்பாய்வு எப்போது? உரையாடல் எப்போது?

என் எளிய வினாக்கள் சில.  நொபுரு கரோஷிமாவின் மரணச் செய்தி, ஏன் என்னைப் போன்ற சாமானியனைச் சென்றடையவில்லை? நாளேடுகள் செய்திகள் வெளியிட்டிருக்கலாம்.  சாமானிய நாளேடுகளாக அறியப்படும், தினத்தந்தி போன்றவற்றில் இதன் வீச்சு அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஏன் இல்லை?  எதற்கெடுத்தாலும் கூட்டம் போடும்/நடைபயணம் மேற்கொள்ளும்/அறிக்கை விடும்/கடிதம் எழுதும், நம் நலத்தை நம்மை விட அதிகம் விரும்பும், நம் அரசியல்வாதிகள் எங்கே? அல்லது, இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதை நாம் நிறுத்திக் கொண்டுவிட்டோமா? ஆர்வமில்லையோ?

என் பயங்கள் சில.  
தமிழ், இதே வீச்சோடு எம் தமிழ் நிலத்தில் வாழுமா? இல்லை, தமிழின் எதிர்காலம், தமிழகம் அல்லாத, தமிழர் வாழும் நாடு / பகுதியா?  அரசியல் கலக்காத தமிழ் இருக்க வாய்ப்பில்லை, ஆனால், அரசியலால் தமிழ் அழுக்கடையாமல் / மங்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறதா?  
தமிழ் மொழியின் வளர்ச்சி பாதிக்கப் பட்டிருக்கலாம்.  ஆனால், பாதிக்கப்படவில்லை என்று சொல்வதற்கான முகாந்திரம் இல்லை என்று என் உள்மனம் சொல்கிறது.  இருக்கலாம்.  தமிழ் தவிர்த்து, ஆங்கிலம் மட்டும் உரையாடல் மொழியாக இருக்கும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க துடிக்கும், எம் இனம் தேடுவது எதை?  இரண்டாம் மொழியாகக் கூட, தாய்மொழியை எடுக்காமல் பிற மொழியை தேர்வு செய்யும் கூட்டம் சொல்ல வருவது என்ன?  மொழியும் ஒரு அடையாளம் என்பதை மறந்துவிட்டோமா?

நிற்க.

பின்னகரவில்லை நாம்.  அதே நேரம், நாம் முன்னோக்கியும் நகரவில்லை.  ஓடும் வரை தான் நீரும், மொழியும் சுத்தமாக இருக்கும். தேங்கினால்?  சகதி. பின் சதுப்பு. சதுப்பிலிருந்து காலை எடுப்பது அவ்வளவு எளிதில்லை. அவ்வப்போது யோசித்துப் பார்ப்போம். தேங்கிவிட்டோமா நாம்?

நொபுரு கரோஷிமாக்கு அஞ்சலி.  ஆங்கிலத்தில் அவர் பேட்டி ஒன்று உள்ளது.  அது சொல்லட்டும் அவர் வாழ்நாள் கருத்தை. http://www.thehindu.com/opinion/op-ed/iatr-and-the-world-classical-tamil-conference/article528744.ece


உதவிய இணைப்புகள்:

  1. http://www.jeyamohan.in/81216
  2. https://en.wikipedia.org/wiki/Noboru_Karashima
  3. http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=180&Itemid=253
  4. http://www.thehindu.com/opinion/op-ed/iatr-and-the-world-classical-tamil-conference/article528744.ece
  5. http://www.bbc.com/tamil/global/2015/11/151126_noburuobit

Wednesday, 25 November 2015

தோல்வாடன்



அப்போது நான் இரண்டாம் வகுப்பு. எங்கள் பள்ளிக்கூடம் ஊரின் மந்தைக்காட்டை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது.  கல்வியையும் கழிவு என்று எண்ணியிருப்பர் போலும்.  என் வீட்டிலிருந்து ஐந்து தெரு தூரம்.  அதைக்கூட கடக்க குறுக்கு வழி ஒன்றை வைத்திருந்தான் சுந்தரம்.  மூன்றாவது தெருவில் உப்புக் கேணி ஒன்று உண்டு. அதை யாரும் புழங்குவதில்லை.  எனவே அதை ஒட்டிய சந்தும் ஆளரவமற்று இருக்கும்.  இளவட்டக் கூட்டம் ஏதாவது ஒன்று அங்கே மதுவருந்திக் கொண்டிருக்கும்.  என் அம்மா, ‘உப்புக் கேணி வழியா, அந்தப் பய சொன்னான், இந்தப் பய சொன்னான்னு போக்கூடாதுடா’ என்று சொல்லியிருந்தாள்.  நானும் போவதில்லை.  சுந்தரம் அதைத்தான் குறுக்கு வழியாக்கியிருந்தான்.  

நான் தொத்தலாக பாவம் போல் இருப்பேன். எனவே, பள்ளியில் பலரும் என்னைச் சீண்டியவண்ணம் இருப்பர்.  வினோத் ஒருநாள் நான் அமரும் இடத்தில் சாக்பீஸால் வட்டம் போட்டு வைக்க, அதில் நான் அமர்ந்தெழ, என் டிரவுசரின் பின்பக்கம் சாக்பீஸ் அச்சு விழுந்துவிட்டது.  அது எனக்குத் தெரியாது.  நான் எழுந்து நடக்கும்போது மொத்த வகுப்பும் ‘க்ளுக்’கென்று சிரித்தது. அன்று ஜட்டி போடவில்லை. எனவே டிரவுசரின் பட்டனைப் போட்டோமா? என்று சரிபார்த்துக் கொண்டேன். சரியாகத்தான் இருந்தது.  எப்படிப்பட்ட ஜோக்குக்கும் சிரிக்காத, போதும் பொண்ணு ‘ஓட்டைக் குண்டி’ என்று சிரித்துக் கொண்டே கத்தினாள்.  அதற்காகவே காத்திருந்தது போல மொத்தப் பேரும் ‘ஓட்டைக் குண்டி’, ‘ஓட்டைக் குண்டி’ என்று கத்த ஆரம்பித்தனர்.  எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.  இது எதிலும் பங்கெடுக்காமல், தன் பொன்வண்டோடு விளையாடிக் கொண்டிருந்த சுந்தரம், என்னிடம் இரங்கி ‘அழுவாதடா’ என்றான்.  எங்கள் எல்லோருக்கும் அவன்மேல் ஒரு பயம்.  எங்களை விட அவன் மூன்று, நான்கு வயது மூத்தவன்.  பிரச்சினை என்னவென்று என்னிடம் கேட்டு, வினோத்துக்கு ஒரு அறையும், போதும் பொண்ணுக்கு ஒரு பலத்த கொட்டும் வைத்தான். அவள் அழுதுகொண்டே பக்கத்து வகுப்பு ஆசிரியரிடம் புகார் செய்து விட்டாள்.  அவர் வந்து எதையும் விசாரிக்காமல், சுந்தரத்தை பிரம்பால் பலமாக அடித்துவிட்டார். அன்றுமுதல் அவன் என் நெருக்கமான நண்பனாகினான். குறுக்கு வழியில் நானும் அவனோடு சேர்ந்து வரத்தொடங்கியிருந்தேன்.

சுந்தரம் பீடி குடிப்பான் என்பதை அப்போதுதான் அறிந்தேன்.  ஆழமாக இழுத்து அநாயாசமாக வெளிவிடுவான், ஒரு தேர்ந்த சமயற்கலைஞன் கரண்டியை பயன்படுத்துவதைப் போல.  அப்படியான நாளொன்றில் என்னையும் குடித்துப் பார்க்கச் சொன்னான்.  முதலில் பயத்தில் மறுத்தாலும், எனக்கும் புகைத்துப் பார்க்க ஆசைதான்.  வாயில் பீடியை வைத்தேன்.  சுந்தரம் எனக்கான தீக்குச்சியை கொளுத்தி என் வாயருகே கொண்டு வந்தான்.  நான் பத்த வைப்பதற்காக என் தலையை முன்னகர்த்தினேன்.  அப்போது முரட்டுக் கை ஒன்று என் வாயிலிருந்த பீடியைப் படுங்கிப் போட்டது.  நிமிர்ந்து பார்த்தால் கருத்த உதடு வெளுத்துப் போன நெடிய மனிதர்.  காரைப்பற்கள் தெரிய, சிரித்தபடி நிற்கும் பயமுறுத்தும் உருவம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.  அவரை நான் பலமுறை அச்சந்துக்குள் பார்த்திருக்கிறேன்.  கிட்டத்தட்ட அவரை அங்கிருந்த எல்லா மதுவருந்தும் குழுவுடனும் பாரத்திருக்கிறேன்.  ‘பீடியெல்லாம் குடிக்கக் கூடாது சாமி, செத்துப்போவோம்’  என்றார்.  சுந்தரம் ‘நீ மட்டும் சாராயம் குடிக்கிற, போயல போடுற’, என்று ஒரு தோரணையோடு கேட்டான். அதற்கு அவர், ‘அதனாலெல்லா உசுரு போகதுய்யா. ஏன்னா போயல, சராயம்லா நம்மகூட பத்து ஆள் இருக்கமாதிரி  பெலங்கொடுக்குமப்பா.  ஆனா, பீடி அப்பிடி இல்ல. மூச்சப் புடிச்சுப்புடும்.  மனுஷனோட உசுரு மூச்சுக்குள்ள தாஞ்சாமி இருக்கு. பொணம் மூச்சு விடாது பாத்திருக்கீல.  பீடி குடிக்கும்போது மூச்சடைச்சு இரும வரும் பாத்திருக்கீல’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  ‘போடா புடுக்கு, போடா புடுக்கு ’  என்று கத்திக் கொண்டு எல்லோரும் ஓடிவிட்டோம்.  கொஞ்ச தூரம் துரத்தி வந்தபின், சிரித்துக் கொண்டே, வேட்டி மடிப்பிலிருந்து நழுவிய புகையிலையை வாயில் அதக்கிய வண்ணம் திரும்பிச் சென்றார். 

அடுத்தநாள் சுந்தரத்திடம் அவர் சொன்னதைப் பற்றிக் கேட்டேன். அவன், ‘பொய் சொலரான்டா’ என்றான். ‘பெயர் என்ன?’ என்றேன். ‘தோல்வாடன், ஆனா நம்ம புடுக்குன்னு வச்சுக்குவோம்’ என்றான். அதைக் கேட்டு கெக்கபிக்கே கெக்கபிக்கேவென்று சிரித்தோம். அந்த வார்த்தைக்குள் தாளலயம் இருப்பதாய்ப்பட்டது அப்போது. ‘தோல்வாடன்’. அது காரணப் பெயரா இல்லை இடுகுறிப்பெயரா என்று யாருக்கும் அக்கறை இல்லை. தோல்வாடன் என்றே அவன் அழைக்கப்பட்டான்.  உரமேறிய கை கால்களுடன் சராசரிக்கும் சற்றும் அதிகமான உயரத்துடன் இருப்பான்.  கொத்தன் அவன். புகையிலையால் காரையேரிய பற்களுடன், கிராமத்து எளிய மனிதனின் சிரிப்போடு இருப்பான். அப்போது அவனுக்கு நாற்பதை ஒட்டிய வயது.  யாரும் மரியாதயையாய் அழைத்துப் பார்த்தில்லை என்பதாலோ என்னவோ இப்போது வரை ‘அர்’ விகுதி வரமாட்டேன் என்கிறது.  ஜாதியின் காரணமாக அவன் எள்ளளோடு பார்க்கப் பட்டாலும், வேலைத் திறமையில் அவன் ஓர் சக்கரவர்த்தியாகவே அனுகப்பட்டான், சம்பளத்தைத் தவிர.  

அவன் திறமையைக் கேள்விப்பட்ட பின் அவன் போக்குகளை கவனிக்கத் தொடங்கினேன்.  அடிக்கடி டீக்கடையில் அமர்ந்து, வாய் பார்த்துக் கொண்டோ அல்லது உரத்துப் பேசிக்கொண்டோ இருப்பான்.  சின்னப்பன் சித்தப்பாவும் நடராசு மாமாவும் தான் அவனோடு கொஞ்சம் சகஜமாகப் பேசும் ஆட்கள்.  இன்னொன்றையும் அப்போது தான் கவனித்தேன்.  ஒருபோதும் அவன் சம்மனங்காலிட்டோ, காலைத் தொங்கப் போட்டு அமர்ந்ததில்லை.  குத்துக் காலிட்டே அமர்ந்திருப்பான், சாப்பிடும்போது கூட. அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். எப்படி இவன் வெளிக்கிருப்பது போல் அமர்ந்து கொண்டு சாப்பிடுகிறான் என்று.  பின்னாட்டகளில் தான் தெரிய வந்தது அவனும் அவன் தெருவைச்சேர்ந்தவர்களும் அப்படியே அமரப் பழக்கபட்டிருந்தனர்.  ஆனால், என்னுடன் படித்த பாண்டி அப்படி அமர்வதில்லை.  யாரையும் சாமி என்றும் அழைப்பதில்லை.  நான் வெளியூர் சென்று படிக்க ஆரம்பித்தபின், ஒருநாள் டீக்கடைக்கு டீ வாங்கச் சென்றேன்.  ‘குஞ்சு, வெளியூரில் படிக்குதா?’ என்றென்னை விசாரித்தார். குஞ்சு என்பது என் வீட்டுப் பெயர்.  ஆமென்றேன்.  அப்போதும் குத்துக்காலிட்டு, புகையிலையை வாயில் அதக்குவதற்கு ஏதுவாக கையில் கசக்கிக் கொண்டிருந்தார்.  அப்போது ஒரு முப்பத்தைந்து வயதுப் பெண், தன் இரண்டு பிள்ளைகளோடு டீக்காக காத்திருந்தாள்.  கோமதி. எனக்கு அத்தை முறை.  தோல்வாடன் கசக்கிக் கொண்டிருந்த புகையிலையைக் கீழே போட்டுவிட்டு கையிலிருந்த பிளாஸ்டிக் காகிதத்தில் இருந்த ஆசைச் சாக்லைட்டை அப்பிள்ளைகளிடம் நீட்டினார்.  குழந்தைகள் ஆவலாய் கையை நீட்டின.  அதைத் தட்டிவிட்ட அதன் தாய், ஏசத்தயங்கும் வாரத்தை ஒன்றை அவனை நோக்கி வீசிவிட்டு, வெடுக்கென தன் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போய்விட்டாள்.  எந்த ஏச்சுக்கும் சிரித்தபடி இருக்கும் தோல்வாடன், சரட்டென அவ்விடத்தை காலி செய்துவிட்டான்.  இறுகிய வாயை அவன் வைத்திருந்தான் அப்போது. 

சில நாட்களுக்குப் பின் தெரிய வந்தது, அப்பெண் அவனை இளமைக்காலத்தில் அவனைச் சுற்றி வந்தவள் என்று.  திரட்சியான கை கால்களைக் கண்டால் எவர் பார்வையையும் கவரத்தானே செய்யும்.  தோல்வாடனை கோமதி கண்டது அப்படித்தான்.  வன்னியர்களும் சக்கிலியர்களும் அவ்வப்போது இழுத்துக் கொண்டு ஓடுவது அங்கே வழக்கம் தான் என்றாலும், சென்றவர்கள் திரும்பி வருவதில்லை.  வந்தவர்கள் மதிக்கப்படுவதில்லை என்பதும் காரணம்.  அவள் வன்னியச்சி.  அதெல்லாம் பிரச்சினையாய் இல்லை.  அவள் வீட்டில் கட்டிடம் கட்டும் வேலை ஒன்று வந்தபோது, அவர்களுக்குள் ஓர் ஈர்ப்பு வந்திருக்கிறது.  அவள் தான் சீண்டியிருக்கிறாள்.  சாரத்தில் அவன் நிற்கும் போது, அடிக்கட்டையை ஆட்டி கிலியூட்டுவது, தண்ணீர் சொம்பை கொடுப்பது போல் கொடுத்து தண்ணீரை மேலே கொட்டுவது இப்படி.  அவனுக்கும் அவள் மேல் இஷ்டம் தான்.  காப்பு காய்த்த கைகள் மலரின் ஸ்பரிசத்தை நாடுவது இயல்புதானே.  அவனை அவள் அண்ணியும் நோக்கியது அவளுக்குத் தெரியாது.  இருவரும் ஒருநாள் படுக்கையில் கிடப்பதைக் கண்ட கோமதி, கத்தி ஊரைக் கூட்டிவிட்டாள்.  அண்ணி தற்கொலை செய்து கொண்டாள்.  ஊர்க்கூட்டத்தில் தோல்வாடனுக்கு கால்களுக்கிடையில் தான் அடி அதிகம் விழுந்தது.  அன்றோடு அவனுக்கி ஆண்மை போய் விட்டதாகவும் பேச்சு.  கோமதி வெளியூர்க்காரனைக் கட்டிக் கொண்டு போனாள்.

தோல்வாடனுக்கு உள்ளூரில் வேலை அதிகமும் வரவில்லை.  வெளியூர்க் கூட்டாளிகளும் மதிக்கவில்லை.  கூப்பிட்டவர்களும் பிச்சை போடுவது போலவே அவனை நடத்தினார்கள்.  அவனும் அதனால் வேலைக்கு ஆர்வம் காட்டவில்லை.  வயிறுதான் எப்பேர்ப்பட்ட வைராக்கியத்தையும் அசைத்துப் பார்த்துவிடுமே. உள்ளூரில் ஏவிய வேலையெல்லாம் செய்து வந்தான்.  நாங்கள் இப்போது இருக்கும் வீட்டைக் கட்டலாமென்று என் அப்பா சொன்னபோது, கொத்தனாக தோல்வாடனை முடிவு செய்திருந்தார்.  புண்ணியமாய் போகட்டும் என்று சொல்லிக் கொண்டார்.  பெரும் உற்சாகத்துடன் வேலை செய்தான்.  இடையிடையே, ‘குஞ்சுக்கு எப்புடிப் பட்ட வீட்டக் கட்டுறேன்னு பாத்துக்க’ என்று என்னிடம் சொல்லிக் கொண்டான்.  செம்மண் குழைத்துக் கட்டும் வீடு.  கூரையிலிருந்து ஓட்டுக்கு மாற இந்த வீடு.  அப்போதுதான் பார்த்தேன், வேலையில் அவன் உண்மையில் அரசன் அவன்.  சித்தாள்களை அவன் விரட்டும் தொணி சொல்லிவிடும் அவன் யாரென்று.  செம்மண்ணோடு மணலோடு நான்குக்கொன்றாய் கலக்கச் சொல்வான்.  வாயாடிச் சித்தாள் ஒருத்தி, பேச்சு சுவாரசியத்தில் அதிக மணலைக் கலந்துவிட, கலவைச் சட்டியை எட்டி உதைத்தான்.  ‘என்டி, ஐஸ்வரியம் பெருகனும்ன்னு சாமியக் கும்பிட்டுட்டு வீடு கட்டுறேன்.  சனியனாட்டம் கலவயக் கொண்டுவாற’ என்று கத்தினான்.  ஊரில் எல்லோரும் வாயைக் கொடுக்க பயப்படும் அவள், தோல்வாடனின் ஏச்சுக்கு ஒரு வார்த்தை கூடப் பேசாதது எல்லோருக்கும் ஆச்சரியம்.  என் அம்மா ஒருவாரம் இதை சுவாரசியமாக சொல்லிக் கொண்டு திரித்தாள்.  கூலி கொடுக்கும் நாளொன்றில், என் அப்பா ’80 தான்டா தர முடியும்’ என்றார்.  தோல்வாடன், ‘சாமி, கொத்தனுக்கான கூலி உனக்குத் தெரியாததில்ல’ என்றான். அப்பா, ‘போனப் போவுதுன்னு, அஞ்சு ரூவா சேத்துத் தர்ரேன்’, என்றார் கறாராக.  அவன் மேற்கொண்டு பேசவில்லை.  கொத்தனுக்குக் கூலி 140 ரூபாய் அப்போது.  என் அப்பாவின் மேல் எப்போதும் இல்லாத அளவு வெறுப்பைக் கொண்டேன்.  எச்சிலைக் காறி அவர் முகத்தில் துப்ப வேண்டும் போல் இருந்தது.

மேற்கொண்டு, என் படிப்புக்காய் வெளியூர் போய் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஊருக்கு வந்தேன்.  திருச்சியில் மின்வாரியத்தில் வேலை.  அசிஸ்டன்ட் ஜூனியர் இன்ஜினியர்.  கையில் பணப்புழக்கம்.  ஓட்டு வீட்டை மச்சு வீடாகக் கட்ட வேண்டுமென என் மனைவி ஆசைப்பட்டாள்.  அதுவுமில்லாமல், அம்மா, அப்பா, மனைவி மற்றும் பையன் என ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் அந்த முடிவு.  போதிய இடம் காலியாக இல்லாததால், பழைய வீட்டை இடித்தாக வேண்டிய நிலை.  வீட்டை இடிக்கும் நாள் அன்று, தோல்வாடன் அதிகாலையிலேயே வீட்டுக்கு, எதிர்ப்பக்கம் உள்ள வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்தான்.  கிழட்டுத் தோல்வாடன்.  தொங்கிய தாடையும், ஆர்வமற்ற விழிகளும் கொண்டு ஒரு பரதேசி போல அமர்ந்திருந்தான்.  நான் சிரித்தபடி, ‘புது வீடு கட்டப் போறேன்.’ என்றேன்.  அவன் என்னைப் பார்க்கவுமில்லை.  நான் சொன்னதைக் கவனித்ததாகவும் தெரியவில்லை.  எரிச்சல் வந்தது.  ‘டேய் புடுக்கு’ என்று கூப்பிட வேண்டும் போல் இருந்தது.  ஆனால், செய்யவில்லை.  பார்ப்பதற்கு யாரோ போல் தான் இருந்தான்.  இதைப் பார்த்த என் அப்பா, ‘இப்பல்லாம் இப்புடித்தான்.  பேசுறது எதுக்கும் பதிலக் கணாம்.  சாப்பிட எதும் குடுத்தா வாங்குறதும் இல்ல.  குப்பய தான் பொறுக்கித் தங்கிறது. நெனவு தப்பிப் போச்சு.  அவே கட்டுன வீடு இடிக்கறதா இருந்தா மட்டும் எப்புடி தான் தெரியுமோ, போயிடுறான் இப்பல்லாம். அதான் நம்ம வீட்ட பாக்க வந்திருப்பான்.’, என்றார். 

வீட்டை இடிக்க ஆரம்பித்தோம்.  என் மகன் அவர் அருகில் அமர்ந்து விளையாண்டு கொண்டிருந்தான்.  மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். செம்மண் வீதி எங்களுடையது.  தண்ணீர் ஊற்றிக் குழப்பி மேல் காலெல்லாம் அழுக்காக்கியிருந்தான்.  ஏனோ நான் அவனை அதட்டவில்லை.  ‘குஞ்சு வீடுகட்டுதா?’ என்றார் தோல்வாடன் என் மகனிடம்.  அவன் பதிலேதும் சொல்லாமல் அவரைப் பார்த்து  பல்லைக் காட்டினான்.  தரையிலிருந்த வேப்பங்குச்சியை பீடி குடிப்பது போல் வாயில் வைத்தான்.  பிடுங்கிக் கீழே போட்ட தோல்வாடன், ‘குஞ்சு, பீடிலாம் குடிக்கக் கூடாது. மூச்சப் புடிச்சுப்புடும்.  மனுஷனோட உசுரு மூச்சுக்குள்ள தாஞ்சாமி இருக்கு. பொணம் மூச்சு விடாது பாத்திருக்கீல.  பீடி குடிக்கும்போது மூச்சடைச்சு இரும வரும் பாத்திருக்கீல’. நான் எனக்குத் தெரிந்த தோல்வாடனைக் கண்டு கொண்டேன்.  வீட்டை இடிக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தனர்.  இடிக்க முடியாமல், சைக்கிள் செயினைக் கொண்டு இரண்டு பேர் சுவரை அறுத்துக் கொண்டிருந்தனர்.  ‘ஒக்காளி, சிமுண்ட விடக் கஷ்டமா இருக்கேடா’ என்ற உரையாடலுடன். வீடு முழுமையாக இடிக்கப் படும் வரை பார்த்து விட்டு, தன் புகையிலைப் பையைக் கையில் பிடித்தபடி போய் விட்டார்.


பின் என் மகனிடம், ‘அந்த தாத்தாட்ட பேசுனியாடா?’ என்றேன். அவன், ‘ஆமாப்பா, அவருக்கு ஒரு பேர் எழுதச் சொல்லிக் குடுக்கச் சொன்னார்ப்பா’ என்றான். ‘என்ன பேர்டா’ என்றேன். ‘கோமதி’ என்றான்.  நான் என் மனைவிக்குத் தெரியாமல் புகைபிடிக்க, வீட்டை ஒட்டிய சந்துக்குள் புகுந்தேன்.

Monday, 23 November 2015

சென்னையின் தேநீர்



எனக்கென, ஒவ்வொரு ஊருக்கும், தனிப்பட்ட மணமும் சுவையும் உண்டு.  ஈரநெடி அற்ற மணமும், புளிப்பின் காய்ந்த சுவையும் திண்டுக்கல்லுக்கு.  பழவாடையும் பேச்சின் சுவையும் மதுரைக்கு.  சுகந்த மணமும் மண் வாசனையும் திருச்சிக்கு. சென்னைக்கு?  எவ்வளவு நீ…………..ண்ட சிந்தைக்குப் பின்னும் என்னால் வகைப்படுத்த முடியவில்லை.

எல்லாவற்றிலும் ஒரு கலவையும் அதனால் உண்டான தனித்துவமும் கொண்ட அற்புதமான ஊர், சென்னை.  இதில் என்னை பெரிதும் கவர்ந்தது, தேநீர்க் கடை.  ‘மாஸ்டர், ஒரு டீ’ என்ற சத்தம் என் கைகளுக்கு தேநீரைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். மற்ற ஊர்களில் உள்ளூர்க்காரனானாலும் டோக்கன் வாங்காமல், நமக்கான டீக்கு உத்திரவாதமில்லை.

சென்னையில், ஒரு சத்தத்தில் எனக்கான டீயை முன்பதிவு செய்யலாம்.  அடுத்த இரண்டு நிமிடங்களில் டீ என் கையில் இருக்கும்.  அதற்கு பெரும்பாலும் சிகிரெட்டே தொட்டுக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது.  வடைகள் வைக்கப் பட்டிருந்தாலும் சமோசாக்களே பெரும்பாலும் ஆக்கிரமித்திருக்கின்றன.  அதற்கான சட்னி பெரும்பாலும் வைக்கப்படுவதில்லை.  அதன் ஆதார சுவையை அனைவரும் சுவைக்க விரும்புகின்றனர் போலும்.  அதற்கும் யாரிடமும் கேட்க வேண்டியதில்லை.  நாளிதழ்களை ஒரு ஜான் அளவுக்கு கிழித்து கத்தையாக வைக்கப்பட்டிருக்கும்,  பிஸ்கட் பாட்டில்களுக்கு இடையிலோ அல்லது வளைக்கப்பட்ட சைக்கிள் சக்கரக் கம்பியில் கோர்க்கப்பட்டோ.  

சாப்பிட்டு முடித்த பின்னர் தான் பணம் கொடுப்பது இங்கு வழக்கம்.  அதுவே என்னை ஆரம்பத்தில் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.  அதுபோக, நான் சொல்வதே கணக்கு.  இரண்டு சமோசா, ஒரு டீ, ஒரு கிங்ஸ் என்பன போன்ற சொற்கள், இங்கு கிராமத்துச் சொலவடைகள் போலப் புழங்கும்.  உரத்த சிரிப்பொலிகள் எந்நேரமும் அங்கு யாரோ ஒருவரால் எழுப்பப் பட்டுக் கொண்டே இருக்கும்.  மக்கள் கூடும் இடங்கள் என்றாலே அப்படித் தானே.  சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் டீ மாஸ்டர்களாக இருந்து நான் இதுவரை பார்த்ததில்லை.  ஸ்டைல் என்ற சொல்லுக்கான பொருளை மிக அழகாக தங்களுக்கானதாய் இவர்கள் மாற்றிக் கொண்டார்கள் போல.  சீனி போட்டு முதலில் கண்ணாடிட் டம்ளர்களை அடுக்கி வைப்பர்.  பின் பாலை ஊற்றுவார்கள். அதன்மேல் டீத்தூள் போட்டு கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீரை சரியான அளவில் கலப்பர்.  அது, தழுவிக்கொள்ளும் காதலர்கள் போல, ஒன்றோடொன்று கலந்து கடைசியில் ஒன்றாக மாறி, டீயாக உருவமெடுத்து நிற்கும்.  மேலே நுரை நிற்காததெல்லாம் ஒரு டீயா?.  நுரைதான் டீக்கு கிரீடம்.  மாஸ்டர் அதற்காக இரண்டு மூன்று முறை ஆற்றி பக்கத்திலிருக்கும் ஒரு ஜானுக்கும் குறைவான திண்டில், கையால் ஒரு சுழற்று சுழற்றிவிடுவார்.  பம்பரம் போல அதுவும் திண்டிலிருந்து வழுவாமல்(இதுவும் வழுவமைதியா?) மூன்று சுற்று சுற்றி நிற்கும்.  பரிசாரகன் ஒருவன் இருப்பான்.  அவனைத் தீண்டி அது நம்மை வந்து சேரும்.  பெரும்பாலும் அவன் சின்னப் பையனாக இருப்பான். அவன் அடுத்த டீ மாஸ்டர் ஆவதற்காக அவ்வேலையைச் செய்து கொண்டிருப்பான்.

சமோசாக்கள் வான்கோழியின் முட்டைக்கு மூக்கு முளைத்து போல, பெருத்த அடிப்பாகம் கொண்டிருக்கிறது.  எனக்கு, வெகுநாள் வரை முக்கோணமாக இல்லாத அதை சமோசா என்றழைக்கவே ஒரு மாதிரி இருந்தது.  ஊட்டி, கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விளையாவிட்டால் இந்த சமோசாவிலிருந்து எடுத்துப் பயன்படுத்தலாம்.  அந்த ஒரு அம்சமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.


சென்னையில் ஐம்பது அடிக்கு ஒன்றிரண்டு டீக்கடை இருக்கும்.  சென்னையின் வீதிகள் எல்லாம் டீக்கடைகள் என்ற சரடால் கோர்க்கப்பட்டிருப்பதாகத் தோன்றும்.  அது ஒரு சமூகக் கூடம்.  ஒரு டீக்கடையில் ஒருநாள் அமர்ந்தால் போதும், மொத்தத் தமிழ் நாட்டின் வட்டார வழக்கையும் கேட்டுவிடலாம். அவ்வகையில் அது தமிழ்நாட்டின் முகம்.

Saturday, 21 November 2015

தன் வரலாறு

ஊர், கோவில், சாதி வரலாறு, என் பூர்வீகம் போன்றவை குறித்து எனக்கு எந்தவித ஆர்வமோ ஈடுபாடோ இருந்ததில்லை.  ஒருநாள் முத்துவின் தம்பி கொடுத்தாக அற்புதராஜ் புத்தகம் ஒன்றைக் கொடுத்தான்.  மொழிபெயர்ப்பு புத்தகம்.  பொதுவாக மொழிபெயர்ப்பு நூல்கள் எனக்கு ஆர்வத்தை தூண்டாதவை.  இத்தனைக்கும் அதுவரை ஒரு மொழிபெயர்ப்பு நூலைக்கூட வாசித்ததில்லை என்பது முரண்நகை.  அப்புத்தகத்தின் முகப்பில் ஒரு கருப்பினத்தவர் காயம்பட்ட தன் முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்தார்.  அவர் முகத்தில் அப்பியிருந்த சோகமும் இயலாமையும் என்னை அப்புத்தகத்தை தொடவிடாமல் செய்தது.  மற்றொரு காரணம்,  மொழிபெயர்ப்பு நூல்களில் அந்நியத்தன்மை அதிகம் இருக்கும் என்று நம்பியமை. இதுவரை நான் புத்தகத்தின் தலைப்பைக்கூட படிக்கவில்லை.  

தனிமை ஒரு ஆலகால விஷம்.  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.  சமயங்களில், அளவுக்கு மிஞ்சின நஞ்சும் அமிர்தமாவதுண்டு.  அப்படியான சந்தர்ப்பமொன்றில் தனிமையைப் போக்கவேண்டி, ‘ஏழு தலைமுறைகளை’ எடுத்தேன்.  ஆங்கிலத்தில் அலெக்ஸ் ஹேலி(Roots) எழுதியது.   தமிழில் மொழிபெயர்த்தவரின் பெயரை மறந்துவிட்டேன்.  மன்னிக்க.  முதல் மூன்று அத்தியாயங்களை, நேரம் கடந்து விட்டதா நேரம் கடந்து விட்டதா என்று கடிகாரத்தை சரிபார்த்தபடியே படித்து முடித்தேன். அதன்பின் தான், ‘குண்ட்டா கிண்டே’ வை எனக்கு நெருக்கமாக அறிந்தேன். சொல்ல மறந்துவிட்டேனே, ‘குண்ட்டா கிண்டே’ தான் கதை நாயகன்.

நாகரீகத்தின் அழுக்கால் தீண்டப் படாமல், இயற்கையோடு இயந்து வாழ்கிறான், ஆப்பிரிக்க கிராம்மொன்றில். தன் தந்தையுடனான உரையாடலில் தன் பூர்விகத்தைப் பற்றி அறிந்து கொள்கிறான். அந்த கிராம மக்களிடம் ஒரு கதை உண்டு.  நம் ஊர் ஒத்தைக் கண்ணன் போல,  காடுகளுக்குச் செல்லும் போது வெள்ளை பூதங்களால் கடத்தப் படுவதாக.  ஒருநாள் விறகு பொறுக்கச் செல்லும்போது, அக்கதை இவனுக்கு நிஜமாகிப் போகின்றது.  கடத்தப்படும் பலரில் ஒருவனாக கப்பலில் ஏற்றப்படுகின்றான்.  அங்கு மாட்டுக் கொட்டிலினும் கீழான இடத்தில், பெருங்கூட்டத்தோடு அடைக்கப்படுகிறான்.  அவன் பட்ட காயத்திலிருந்து கசியும் ரத்தத்தின் வீச்சம், அவன் பேண்ட பீயின் வீச்சத்தோடு சேர்ந்து எழுகிறது.  அவ்வீச்சத்தை என்னால் நுகர முடிந்தது.  அவ்வீச்சம் என் உச்சந்தலை மயிரைச் சொண்டியது.

அவன் அமெரிக்காவின் அடிமைச் சந்தைகளில் விற்கப்படுகிறான்.  அடிமைகளுக்குண்டான அத்தனை கொடுமைகளையும் அனுபவிக்கிறான்.  தப்பிக்க முயன்று, பிடிபட்டு, கால் நரம்பு அறுக்கப்படுகிறான்.  திருமணம் செய்கிறான்.  பிள்ளைகள் பெறுகிறான்.  கடுமையான உடல் உழைப்பைக் கொடுக்கிறான்.  பல தலைமுறைகளாக அவன் சந்ததி வாழ்கிறது.  அவன் தன் பூர்வீகத்தைப் பற்றி, தான் இங்கே வந்ததைப் பற்றி, சில ஆப்பிரிக்க வார்த்தைகளையும் தன் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்கிறான்.  அப்படியே அவர்களும் தங்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்கிறார்கள்.  அப்படி வந்தவர்களின் கடைசிக் கண்ணிதான் நூல் ஆசிரியர் ‘அலெக்ஸ் ஹேலி’.  வாளியின் தண்ணீரை கையில் அள்ளிக் கடத்தினால், பல கைகள் தாண்டி வரும் போது, கடைசியில் அளவு குறையத்தானே செய்யும். அப்படி அலெக்ஸ் ஹேலிக்கு வந்து சேர்ந்தது, சில பொருள் புரியா ஆப்பிரிக்க வார்த்தைகள் தான்.  அதைவைத்துக் கொண்டு அவர் தேடி கண்டெடுத்த வரலாறு தான் இப்புத்தகம்.  அதற்காக அவர் பயன்படுத்தியது, அமெரிக்கா அரசு பராமரித்து வரும் ஆவணக்காப்பகம் ஒன்றும். அடிமைகளாக வந்தவர்களைப் பற்றி தொகுத்து வைத்துள்ளது. பழையீடு போலும்.


இங்கே நான் பேச வந்தது, மேற்சொன்னவை அல்ல.  ‘உரையாடல்’.  வீட்டின் பெருசுகளின் பேச்சு பெரும்பாலும் சலிப்பையும் அயர்ச்சியையும் ஏற்படுத்துபவையாகத் தோன்றும்.  ஆனால், அதில் தான் நம் பூர்வீகம் பற்றிய எச்சங்களைப் பெற முடியும். இன்றைய நம் குடும்பத்தில் பெரியவர்களுடனான உரையாடல் வெறும் மேம்போக்கான ஒன்றாகவே உள்ளதென்பது என் எண்ணம்.  நம் முன்னோர்கள் எத்தனை இடப்பெயர்வைச் சந்தித்திருப்பார்கள்? எத்தனை மதங்களைப் பின்பற்றியிருப்பார்கள்? எத்தனை சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் செய்திருப்பார்கள்? உணவுப் பழக்கங்கள் என்னென்னவாக இருந்திருக்கும்?  ஜாதீய அடுக்குமுறைகளினால் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றங்கள் என்னென்ன?  ஜாதி அவர்களுக்கு முக்கியமாகப் பட்டிருக்குமா?  

இவைகளில் நமக்கு எத்தனை வினாக்களுக்கு விடை தெரியும்.  எனக்கு தெரியாது. ஆக, நான் மேற்கண்ட வினாக்களுக்கு விடை தேடலாமென்று இருக்கிறேன், இன்னும் சில வாரங்களில்.




Thursday, 19 November 2015

சும்மா...


  1. இளையராஜா, ஒரு கூரான மயிலிறகு . தேம்பிக் கொண்டே சிணுங்கும் வயலின், இளம் பெண்ணின் எச்சில் முத்தம் போல் இருக்கிறது. இளையராஜாவும் காதலைப் போலத்தான் , சடாரென ஒருநாள்  போட்டுத்தாக்கும்.
  2. வரலாறு -உண்மையையும் பொய்யையும் சரிவிகித்தில் உண்டு செரித்த பேரழகுப் பன்றி ...
  3. கடவுளின் சாந்தத்தை விட பேயின் ஆக்ரோஷம் வலிமையானதாய் தோன்றுவதாலோ என்னவோ, உன்னை பேரழகுப் பேய் என்றே வர்ணிக்கத் தோன்றுகிறது ...
  4. எந்த ஒரு பெண்ணையும் சற்று உற்றுப்பார்த்தால், அழகுக்கான ஏதாவது ஒரு அம்சமாவது பிடிபட்டுவிடுகிறது ...
  5. நீரைச் சுத்திகரிக்கும் மீனுக்கு, சளியை உணவாக அளிப்பது போல் இருக்கிறது, பெருநகர வாழ்க்கை...
  6. பாவ ஆன்மாக்கள் அனைத்தும் , தூய்மையான அன்பின் நுனி விரலின் தீண்டலுக்காகவாவது காத்திருப்பவைதான் ...
  7. ரகுமானில் தொடங்கி ஹாரிஸை ரசித்து யுவனைப் பிடித்து வித்யாசாகரை வியந்து இறுதியில் வந்ததென்னவா இளையராஜாவிடம் தான் ...
  8. மென்னுணர்வுகளை கீறிவிடுவதுதான் இரவுகளின் இயல்பு போலும் ...
  9. சிக்னலில் காத்திருந்த நேரத்தை சேமித்தால் இன்னொரு வாழ்க்கைக்கான நேரம் கிடைத்துவிடும் போல ...
  10. என்னை நான் அந்தரங்கமாக உணரும் நேரம் இரவு மட்டுமே ...
  11. நான் எச்சில் விழுங்கும் சப்தம் எனக்கே கேட்க வைக்கும் உணர்வே என்னை ஒருசேர அற்பனாகவும் உன்னதனாகவும் எண்ணச் செய்கிறது ...
  12. நிர்பந்தத்திற்காய் ஓடிப்பழக்கப்பட்ட நாய்க்கு சுயமாய் நடக்கக் கூடத் தெரியாதுதான்.
  13. அரவணைப்புக்காய் ஏங்கும் இதயங்களெல்லாம் கொஞ்சம் கரடுமுரடாய்த்தான் இருக்கும் போல...
  14. சாவைப் போல எளிதானதில்லை அதைப்பற்றி சிந்திப்பது.
  15. அர்த்தம் புரிந்த சொற்களை விட, அர்த்தம் உணர முடிந்த சொற்கள் ஆழமானவை.
  16. கருவாச்சிகளின் அழகைச் சொல்வதற்கான வார்த்தைகள் இன்னும் முழுமையாய் கண்டுபிடிக்கப்படவில்லை போலும்.
  17. தோளில் புரளும் கூந்தலை கை கொண்டு ஒதுக்காமல், ஒரு சிறு தலைச் சிலுப்பலில சரி செய்யும் கருவாச்சிகள்தான் எவ்வளவு அழகு.
  18. இரவு, கனிவையும் காயத்தையும் ஒருசேரச் சொரிந்து விட்டு விடுகிறது...
  19. கற்பனையிலும் கனவிலும் வரும் பெண்களுக்கு இணையான அழகை நிஜத்தில் கண்டிலன் :(
  20. புத்தன் தன்னை கௌதம சித்தார்த்தனாகவும், நாம் கௌதம சித்தார்த்தனை புத்தனாகவும் கண்டோம் #அவ்ளோதான் வாழ்க்க