Pages

Friday, 11 December 2015

அட்ரிலினும் - அன்பும்

என் அலுவலகத்தில் பிராமணர்கள் அதிகம்.  இதைக் கண்டறிய தனியாக மெனக்கெட வேண்டியதில்லை. எப்போதும் போல அவர்கள் தங்கள் தனித்துவத்தை அடையாளம் காட்டும் விதமாக, தனித்துவமான மொழியைப் பேசுவதாகட்டும், ‘அய்யோ, நான்-வெஜ்ஜா’ என்பதாகட்டும், இப்படி வெளிப்படுத்திய வண்ணம் இருப்பர்.  எல்லோரையும் போல் எனக்கும் அது அசூயையாகவே இருக்கும்.  இன்னொன்றையும் சொல்லியே ஆக வேண்டும்.  ஒருபோதும் துவேஷத்தைக் காட்டுவதில்லை.

தங்களின் உணவுப் பழக்கத்தை அதிகமும் சிலாகித்துப் பேசிய வண்ணம் இருப்பர்.  எங்களிடம் ஒரு புராஜக்ட் ஒன்று உண்டு, ஆன்லைன் கறிக்கடை.  அதன் மேலாளர் அய்யர் பெண்மணி.  கேட்கவும் வேண்டுமோ?  கிடைக்கிற இடைவெளியிலெல்லாம் தன் ஒவ்வாமையை, மாமிச உணவின் மீதான தன் ‘உவ்வே’யை காட்டுவார்.  எனக்காகட்டும், அதில் வேலை செய்யும் என் நண்பனாகட்டும் சடாரென வெறுப்பு ஒன்று வந்து தொலைக்கும்.  நியாயம்தானே? இப்போதெல்லாம் அது கொஞ்சம் கொஞ்சமாக சரியில்லையோ என்று தோன்றியவாறு உள்ளது.  காரணம் இருக்கிறது.  

இடையில் ஒருநாள், அலுவலகத்திலிருந்து சாப்பிட வெளியே ஒரு ஜப்பானிய கடைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.  கடையின் பெயர் - மொமோ யொமா.  உள்ளே நுழைந்ததும் ஒரு வாசம்.  அது உணவுப் பொருள்களின் வாசம் என்பதை சாப்பிட ஆரம்பித்தபின் தான் தெரிய வந்தது.  நான், கிடைத்த எல்லா அசைவத்தையும் ஆர்ட்ர் செய்தேன், பன்றி, மாடு, மீன்(சுசி, டூனா) மற்றும் சிக்கன்.  அங்கு எனக்கு சில ஆச்சரியங்கள் இருந்தன.  தேநீர் குளர்ந்திருந்தது. அதுவும் துளி கூட இனிப்பின்றி, வெளிர் பச்சை வண்ணத்தோடு, சுவையும் மிக மிக மென்மையான கசப்பு.  அசைவ உணவுப் பதார்த்தங்கள் எல்லாம் அரைவேக்காடுதான். மாட்டுக்கறி நன்றாக இருந்தது.  பன்றிக்கறி இதுவரை நான் சாப்பிட்டதில் மிக மிக மென்மையான பன்றிக்கறி.  செம்பருத்தி இதழ்களைத் தின்பதைப் போல இருந்தது.  மீனை சமைக்கக் கூடாதாம், பச்சை மீனை இரண்டு விரல் அளவு  பிரட் துண்டின் இடையில் வைத்து இருந்தனர்.  வேகவைக்காதது என்று சொல்லியிருந்தனர். ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை, மாடு மற்றும் பன்றிக்கறையைப் போல, அரைகுறையாக வேகவைத்திருப்பார்கள் என்று.  பிறகுதான் தெரிந்தது, சுத்தமாக வேகவைக்கப் படவில்லை.  பச்சை மீன் அப்படி இருக்கும் என்று நான் நினைத்ததே இல்லை.  கவிச்சை அடித்தது.  ஆனாலும் அதெல்லாம் அப்படியொன்றும் பெரிய விஷயமில்லை. சாப்பிடும் போது என் நாக்கை நானே சாப்பிடுவது போல ஒரு ருசி.  உப்பின் சுவை சமைக்கப் படாத இறைச்சியில் அதிகம் இருக்கும் போல.  மொத்தம் ஆறு மீன் துண்டுகள்.  இரண்டுக்கு மேல் என்னால் சாப்பிட முடியவில்லை.  மூன்றாவது துண்டை வாயில் வைத்தபோது, குமட்டிவிட்டது.  கவிச்சையெல்லாம் ஒரு பொருட்டல்ல, ஆனால் பச்சைக் கறியின் சுவையை என்னால் ஏற்கமுடியவில்லை.  எனக்கெல்லாம் உணவுப் பொருளும் குமட்டும் என்று கண்டுகொண்டேன்.  ‘நானெல்லாம் சாக்கடைக்குள்ளேயே கூடுகட்டி வாழ்ந்தவன்’ என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு பெரிய இடிதான்.

இதன்பின் ஒன்றை யோசிக்க ஆரம்பித்தேன், என் அருகே அமர்ந்திருந்த நான்கு சைவ பக்கிங்களின் நிலையை. ரொம்பக் கஷ்டம் தான்.  பாவம்.  அன்று முதல், அவர்களுடைய மாமிச உணவின் ஒவ்வாமையை என்னால் உணர முடிகிறது.  ஆனால், இன்னொரு முக்கியமான விஷயம், தமிழ்த் திரைப்படங்களில் அய்யர்களை துக்கடாக்களாக, No: 1 காமெடிப் பீஸுகளாகக் காட்டியபடி தான் இருக்கிறோம்.  அது ஒரு பெரிய விஷயமாக தெரிந்ததில்லை.  ஆனால் இப்போது அதே போல மாமிசம் உண்பவர்களை, அவர்களின் கூட்டத்தில் இருந்து என்னைச் சொல்லும் போது புரிகிறது.  அன்றுமுதல் நான் வெறுமனே அவர்களை எள்ளல் செய்வதை விட்டொழித்துவிட்டேன்.  ஆனாலும் அவர்கள் தங்கள் தனித்துவத்தை பேணும் பொருட்டு அதை விடுத்த பாடும் இல்லை, சீண்டலின் போது நானும் மடக்குவதற்கான பேச்சுக்களைப் பேசியிருக்கிறேன்.  பிழைதான்.  செய்வதற்கு ஒன்றும் இல்லை.

நிற்க.

மாமழை ஒன்று எம்மைச் தழுவிச் சென்றிருக்கிறது.  அது ஏற்படுத்திய விளைவுகள் பலவேறு மனக்குழப்பங்களையும் மனத்தெளிவுகளையும் எல்லோரிடத்திலும் உண்டாக்கியிருக்கிறது.  குழப்பங்களாக சொல்வதென்றால், அரசியல் நடவடிக்கைகளும், மீடியா குவிந்ததும், வட இந்திய ஊடகங்களின் செயல்பாடுகளும், நம்முடைய நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளும், அதனால் நாம் அடைந்த விளைவுகளும், வெள்ளத்தின் முதல் இரண்டு நாட்களில் சில கடைக்காரர்கள் கொள்ளை விலைக்கு விற்றதும் மற்றும் இன்னபிற.

இதுபோன்ற இக்கட்டான சூழல்களினால் தான் நம் கீழ்மைகளும் மேன்மைகளும் ஒருசேர வெளிப்படும்.  அனைவரின் மனச்சாட்சியோடும் இம்மழை ஒரு மாபெரும் உரையாடல் நிகழ்த்தியிருக்கிறது.  அதை தினந்தோறும் வந்து கொண்டிருக்கும் செய்திகளும், களப்பணியார்களின் பேட்டிகளும் காட்டிய வண்ணம் உள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லா மக்களும் இருந்திருப்பார்கள் தானே?  வீட்டில் சமைக்க இயலாத பல ஏரியாக்களில் முதலில் வீதியில் அடுப்பை ஏற்றியது அய்யர்கள் தானாம்.  கேள்விப்பட்ட போது ஒருவகை நெகிழ்ச்சி ஏற்பட்டது.  பொதுவாக பொதுப் பிரச்சினைகளுக்கு தெருவிலிறங்கிச் செயல்படுவது ஒருவகை பொறுக்கித் தனம் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு என்பது என் கணிப்பு.  

நாய் விரட்டம் போது, தாண்ட முடியாத பள்ளத்தையும் தாண்டி விடுவோம்.  அதுபோன்ற அசாதாரண சம்பவங்களின் போது நம்முடைய சுரப்பிகளில் ஒன்றான ‘அட்ரலின்’ சுரந்து அப்படி ஒரு வேகத்தையும் ஒரு  உச்சகட்ட விழிப்புத் தன்மையையும் நமக்குள் உண்டாக்கிவிடும்.  அப்படி ஒரு விழிப்புத் தன்மையை கடந்த சில வாரங்களாக நம்மில் பலர் இருந்து கொண்டு, மீட்புப் பணிகளேயும் நிவாரணப் பணிகளையும் மேற்கொள்வதைப் பார்க்கையில் சிறு நெருப்பும் ஒளியும் தென்படுகிறது. பாரதி பிறந்தநாளான இன்று, அந்நெருப்பை அணையாமல் காத்து, சுயநலக் காட்டில் வைப்போம். வெந்து தணியட்டும் அக்காடு.  இப்பதிவை ஆரம்பித்த போது, இன்று பாரதியின் பிறந்தநாள் என்பதே என் நினைவில் இல்லை.  ஆகவே யாரும் இப்பதிவின் தொடக்கத்தைக் கொண்டு பாரதியை இணைப்பதாக எண்ண வேண்டாம்.  அவர் அமைப்புகளுக்குள்ளும் வீண் ஜம்பத்துக்குள்ளும் அடங்காதவர்.


வாழ்க பாரதி.

No comments:

Post a Comment