Pages

Wednesday, 25 November 2015

தோல்வாடன்



அப்போது நான் இரண்டாம் வகுப்பு. எங்கள் பள்ளிக்கூடம் ஊரின் மந்தைக்காட்டை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது.  கல்வியையும் கழிவு என்று எண்ணியிருப்பர் போலும்.  என் வீட்டிலிருந்து ஐந்து தெரு தூரம்.  அதைக்கூட கடக்க குறுக்கு வழி ஒன்றை வைத்திருந்தான் சுந்தரம்.  மூன்றாவது தெருவில் உப்புக் கேணி ஒன்று உண்டு. அதை யாரும் புழங்குவதில்லை.  எனவே அதை ஒட்டிய சந்தும் ஆளரவமற்று இருக்கும்.  இளவட்டக் கூட்டம் ஏதாவது ஒன்று அங்கே மதுவருந்திக் கொண்டிருக்கும்.  என் அம்மா, ‘உப்புக் கேணி வழியா, அந்தப் பய சொன்னான், இந்தப் பய சொன்னான்னு போக்கூடாதுடா’ என்று சொல்லியிருந்தாள்.  நானும் போவதில்லை.  சுந்தரம் அதைத்தான் குறுக்கு வழியாக்கியிருந்தான்.  

நான் தொத்தலாக பாவம் போல் இருப்பேன். எனவே, பள்ளியில் பலரும் என்னைச் சீண்டியவண்ணம் இருப்பர்.  வினோத் ஒருநாள் நான் அமரும் இடத்தில் சாக்பீஸால் வட்டம் போட்டு வைக்க, அதில் நான் அமர்ந்தெழ, என் டிரவுசரின் பின்பக்கம் சாக்பீஸ் அச்சு விழுந்துவிட்டது.  அது எனக்குத் தெரியாது.  நான் எழுந்து நடக்கும்போது மொத்த வகுப்பும் ‘க்ளுக்’கென்று சிரித்தது. அன்று ஜட்டி போடவில்லை. எனவே டிரவுசரின் பட்டனைப் போட்டோமா? என்று சரிபார்த்துக் கொண்டேன். சரியாகத்தான் இருந்தது.  எப்படிப்பட்ட ஜோக்குக்கும் சிரிக்காத, போதும் பொண்ணு ‘ஓட்டைக் குண்டி’ என்று சிரித்துக் கொண்டே கத்தினாள்.  அதற்காகவே காத்திருந்தது போல மொத்தப் பேரும் ‘ஓட்டைக் குண்டி’, ‘ஓட்டைக் குண்டி’ என்று கத்த ஆரம்பித்தனர்.  எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது.  இது எதிலும் பங்கெடுக்காமல், தன் பொன்வண்டோடு விளையாடிக் கொண்டிருந்த சுந்தரம், என்னிடம் இரங்கி ‘அழுவாதடா’ என்றான்.  எங்கள் எல்லோருக்கும் அவன்மேல் ஒரு பயம்.  எங்களை விட அவன் மூன்று, நான்கு வயது மூத்தவன்.  பிரச்சினை என்னவென்று என்னிடம் கேட்டு, வினோத்துக்கு ஒரு அறையும், போதும் பொண்ணுக்கு ஒரு பலத்த கொட்டும் வைத்தான். அவள் அழுதுகொண்டே பக்கத்து வகுப்பு ஆசிரியரிடம் புகார் செய்து விட்டாள்.  அவர் வந்து எதையும் விசாரிக்காமல், சுந்தரத்தை பிரம்பால் பலமாக அடித்துவிட்டார். அன்றுமுதல் அவன் என் நெருக்கமான நண்பனாகினான். குறுக்கு வழியில் நானும் அவனோடு சேர்ந்து வரத்தொடங்கியிருந்தேன்.

சுந்தரம் பீடி குடிப்பான் என்பதை அப்போதுதான் அறிந்தேன்.  ஆழமாக இழுத்து அநாயாசமாக வெளிவிடுவான், ஒரு தேர்ந்த சமயற்கலைஞன் கரண்டியை பயன்படுத்துவதைப் போல.  அப்படியான நாளொன்றில் என்னையும் குடித்துப் பார்க்கச் சொன்னான்.  முதலில் பயத்தில் மறுத்தாலும், எனக்கும் புகைத்துப் பார்க்க ஆசைதான்.  வாயில் பீடியை வைத்தேன்.  சுந்தரம் எனக்கான தீக்குச்சியை கொளுத்தி என் வாயருகே கொண்டு வந்தான்.  நான் பத்த வைப்பதற்காக என் தலையை முன்னகர்த்தினேன்.  அப்போது முரட்டுக் கை ஒன்று என் வாயிலிருந்த பீடியைப் படுங்கிப் போட்டது.  நிமிர்ந்து பார்த்தால் கருத்த உதடு வெளுத்துப் போன நெடிய மனிதர்.  காரைப்பற்கள் தெரிய, சிரித்தபடி நிற்கும் பயமுறுத்தும் உருவம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.  அவரை நான் பலமுறை அச்சந்துக்குள் பார்த்திருக்கிறேன்.  கிட்டத்தட்ட அவரை அங்கிருந்த எல்லா மதுவருந்தும் குழுவுடனும் பாரத்திருக்கிறேன்.  ‘பீடியெல்லாம் குடிக்கக் கூடாது சாமி, செத்துப்போவோம்’  என்றார்.  சுந்தரம் ‘நீ மட்டும் சாராயம் குடிக்கிற, போயல போடுற’, என்று ஒரு தோரணையோடு கேட்டான். அதற்கு அவர், ‘அதனாலெல்லா உசுரு போகதுய்யா. ஏன்னா போயல, சராயம்லா நம்மகூட பத்து ஆள் இருக்கமாதிரி  பெலங்கொடுக்குமப்பா.  ஆனா, பீடி அப்பிடி இல்ல. மூச்சப் புடிச்சுப்புடும்.  மனுஷனோட உசுரு மூச்சுக்குள்ள தாஞ்சாமி இருக்கு. பொணம் மூச்சு விடாது பாத்திருக்கீல.  பீடி குடிக்கும்போது மூச்சடைச்சு இரும வரும் பாத்திருக்கீல’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  ‘போடா புடுக்கு, போடா புடுக்கு ’  என்று கத்திக் கொண்டு எல்லோரும் ஓடிவிட்டோம்.  கொஞ்ச தூரம் துரத்தி வந்தபின், சிரித்துக் கொண்டே, வேட்டி மடிப்பிலிருந்து நழுவிய புகையிலையை வாயில் அதக்கிய வண்ணம் திரும்பிச் சென்றார். 

அடுத்தநாள் சுந்தரத்திடம் அவர் சொன்னதைப் பற்றிக் கேட்டேன். அவன், ‘பொய் சொலரான்டா’ என்றான். ‘பெயர் என்ன?’ என்றேன். ‘தோல்வாடன், ஆனா நம்ம புடுக்குன்னு வச்சுக்குவோம்’ என்றான். அதைக் கேட்டு கெக்கபிக்கே கெக்கபிக்கேவென்று சிரித்தோம். அந்த வார்த்தைக்குள் தாளலயம் இருப்பதாய்ப்பட்டது அப்போது. ‘தோல்வாடன்’. அது காரணப் பெயரா இல்லை இடுகுறிப்பெயரா என்று யாருக்கும் அக்கறை இல்லை. தோல்வாடன் என்றே அவன் அழைக்கப்பட்டான்.  உரமேறிய கை கால்களுடன் சராசரிக்கும் சற்றும் அதிகமான உயரத்துடன் இருப்பான்.  கொத்தன் அவன். புகையிலையால் காரையேரிய பற்களுடன், கிராமத்து எளிய மனிதனின் சிரிப்போடு இருப்பான். அப்போது அவனுக்கு நாற்பதை ஒட்டிய வயது.  யாரும் மரியாதயையாய் அழைத்துப் பார்த்தில்லை என்பதாலோ என்னவோ இப்போது வரை ‘அர்’ விகுதி வரமாட்டேன் என்கிறது.  ஜாதியின் காரணமாக அவன் எள்ளளோடு பார்க்கப் பட்டாலும், வேலைத் திறமையில் அவன் ஓர் சக்கரவர்த்தியாகவே அனுகப்பட்டான், சம்பளத்தைத் தவிர.  

அவன் திறமையைக் கேள்விப்பட்ட பின் அவன் போக்குகளை கவனிக்கத் தொடங்கினேன்.  அடிக்கடி டீக்கடையில் அமர்ந்து, வாய் பார்த்துக் கொண்டோ அல்லது உரத்துப் பேசிக்கொண்டோ இருப்பான்.  சின்னப்பன் சித்தப்பாவும் நடராசு மாமாவும் தான் அவனோடு கொஞ்சம் சகஜமாகப் பேசும் ஆட்கள்.  இன்னொன்றையும் அப்போது தான் கவனித்தேன்.  ஒருபோதும் அவன் சம்மனங்காலிட்டோ, காலைத் தொங்கப் போட்டு அமர்ந்ததில்லை.  குத்துக் காலிட்டே அமர்ந்திருப்பான், சாப்பிடும்போது கூட. அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். எப்படி இவன் வெளிக்கிருப்பது போல் அமர்ந்து கொண்டு சாப்பிடுகிறான் என்று.  பின்னாட்டகளில் தான் தெரிய வந்தது அவனும் அவன் தெருவைச்சேர்ந்தவர்களும் அப்படியே அமரப் பழக்கபட்டிருந்தனர்.  ஆனால், என்னுடன் படித்த பாண்டி அப்படி அமர்வதில்லை.  யாரையும் சாமி என்றும் அழைப்பதில்லை.  நான் வெளியூர் சென்று படிக்க ஆரம்பித்தபின், ஒருநாள் டீக்கடைக்கு டீ வாங்கச் சென்றேன்.  ‘குஞ்சு, வெளியூரில் படிக்குதா?’ என்றென்னை விசாரித்தார். குஞ்சு என்பது என் வீட்டுப் பெயர்.  ஆமென்றேன்.  அப்போதும் குத்துக்காலிட்டு, புகையிலையை வாயில் அதக்குவதற்கு ஏதுவாக கையில் கசக்கிக் கொண்டிருந்தார்.  அப்போது ஒரு முப்பத்தைந்து வயதுப் பெண், தன் இரண்டு பிள்ளைகளோடு டீக்காக காத்திருந்தாள்.  கோமதி. எனக்கு அத்தை முறை.  தோல்வாடன் கசக்கிக் கொண்டிருந்த புகையிலையைக் கீழே போட்டுவிட்டு கையிலிருந்த பிளாஸ்டிக் காகிதத்தில் இருந்த ஆசைச் சாக்லைட்டை அப்பிள்ளைகளிடம் நீட்டினார்.  குழந்தைகள் ஆவலாய் கையை நீட்டின.  அதைத் தட்டிவிட்ட அதன் தாய், ஏசத்தயங்கும் வாரத்தை ஒன்றை அவனை நோக்கி வீசிவிட்டு, வெடுக்கென தன் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போய்விட்டாள்.  எந்த ஏச்சுக்கும் சிரித்தபடி இருக்கும் தோல்வாடன், சரட்டென அவ்விடத்தை காலி செய்துவிட்டான்.  இறுகிய வாயை அவன் வைத்திருந்தான் அப்போது. 

சில நாட்களுக்குப் பின் தெரிய வந்தது, அப்பெண் அவனை இளமைக்காலத்தில் அவனைச் சுற்றி வந்தவள் என்று.  திரட்சியான கை கால்களைக் கண்டால் எவர் பார்வையையும் கவரத்தானே செய்யும்.  தோல்வாடனை கோமதி கண்டது அப்படித்தான்.  வன்னியர்களும் சக்கிலியர்களும் அவ்வப்போது இழுத்துக் கொண்டு ஓடுவது அங்கே வழக்கம் தான் என்றாலும், சென்றவர்கள் திரும்பி வருவதில்லை.  வந்தவர்கள் மதிக்கப்படுவதில்லை என்பதும் காரணம்.  அவள் வன்னியச்சி.  அதெல்லாம் பிரச்சினையாய் இல்லை.  அவள் வீட்டில் கட்டிடம் கட்டும் வேலை ஒன்று வந்தபோது, அவர்களுக்குள் ஓர் ஈர்ப்பு வந்திருக்கிறது.  அவள் தான் சீண்டியிருக்கிறாள்.  சாரத்தில் அவன் நிற்கும் போது, அடிக்கட்டையை ஆட்டி கிலியூட்டுவது, தண்ணீர் சொம்பை கொடுப்பது போல் கொடுத்து தண்ணீரை மேலே கொட்டுவது இப்படி.  அவனுக்கும் அவள் மேல் இஷ்டம் தான்.  காப்பு காய்த்த கைகள் மலரின் ஸ்பரிசத்தை நாடுவது இயல்புதானே.  அவனை அவள் அண்ணியும் நோக்கியது அவளுக்குத் தெரியாது.  இருவரும் ஒருநாள் படுக்கையில் கிடப்பதைக் கண்ட கோமதி, கத்தி ஊரைக் கூட்டிவிட்டாள்.  அண்ணி தற்கொலை செய்து கொண்டாள்.  ஊர்க்கூட்டத்தில் தோல்வாடனுக்கு கால்களுக்கிடையில் தான் அடி அதிகம் விழுந்தது.  அன்றோடு அவனுக்கி ஆண்மை போய் விட்டதாகவும் பேச்சு.  கோமதி வெளியூர்க்காரனைக் கட்டிக் கொண்டு போனாள்.

தோல்வாடனுக்கு உள்ளூரில் வேலை அதிகமும் வரவில்லை.  வெளியூர்க் கூட்டாளிகளும் மதிக்கவில்லை.  கூப்பிட்டவர்களும் பிச்சை போடுவது போலவே அவனை நடத்தினார்கள்.  அவனும் அதனால் வேலைக்கு ஆர்வம் காட்டவில்லை.  வயிறுதான் எப்பேர்ப்பட்ட வைராக்கியத்தையும் அசைத்துப் பார்த்துவிடுமே. உள்ளூரில் ஏவிய வேலையெல்லாம் செய்து வந்தான்.  நாங்கள் இப்போது இருக்கும் வீட்டைக் கட்டலாமென்று என் அப்பா சொன்னபோது, கொத்தனாக தோல்வாடனை முடிவு செய்திருந்தார்.  புண்ணியமாய் போகட்டும் என்று சொல்லிக் கொண்டார்.  பெரும் உற்சாகத்துடன் வேலை செய்தான்.  இடையிடையே, ‘குஞ்சுக்கு எப்புடிப் பட்ட வீட்டக் கட்டுறேன்னு பாத்துக்க’ என்று என்னிடம் சொல்லிக் கொண்டான்.  செம்மண் குழைத்துக் கட்டும் வீடு.  கூரையிலிருந்து ஓட்டுக்கு மாற இந்த வீடு.  அப்போதுதான் பார்த்தேன், வேலையில் அவன் உண்மையில் அரசன் அவன்.  சித்தாள்களை அவன் விரட்டும் தொணி சொல்லிவிடும் அவன் யாரென்று.  செம்மண்ணோடு மணலோடு நான்குக்கொன்றாய் கலக்கச் சொல்வான்.  வாயாடிச் சித்தாள் ஒருத்தி, பேச்சு சுவாரசியத்தில் அதிக மணலைக் கலந்துவிட, கலவைச் சட்டியை எட்டி உதைத்தான்.  ‘என்டி, ஐஸ்வரியம் பெருகனும்ன்னு சாமியக் கும்பிட்டுட்டு வீடு கட்டுறேன்.  சனியனாட்டம் கலவயக் கொண்டுவாற’ என்று கத்தினான்.  ஊரில் எல்லோரும் வாயைக் கொடுக்க பயப்படும் அவள், தோல்வாடனின் ஏச்சுக்கு ஒரு வார்த்தை கூடப் பேசாதது எல்லோருக்கும் ஆச்சரியம்.  என் அம்மா ஒருவாரம் இதை சுவாரசியமாக சொல்லிக் கொண்டு திரித்தாள்.  கூலி கொடுக்கும் நாளொன்றில், என் அப்பா ’80 தான்டா தர முடியும்’ என்றார்.  தோல்வாடன், ‘சாமி, கொத்தனுக்கான கூலி உனக்குத் தெரியாததில்ல’ என்றான். அப்பா, ‘போனப் போவுதுன்னு, அஞ்சு ரூவா சேத்துத் தர்ரேன்’, என்றார் கறாராக.  அவன் மேற்கொண்டு பேசவில்லை.  கொத்தனுக்குக் கூலி 140 ரூபாய் அப்போது.  என் அப்பாவின் மேல் எப்போதும் இல்லாத அளவு வெறுப்பைக் கொண்டேன்.  எச்சிலைக் காறி அவர் முகத்தில் துப்ப வேண்டும் போல் இருந்தது.

மேற்கொண்டு, என் படிப்புக்காய் வெளியூர் போய் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஊருக்கு வந்தேன்.  திருச்சியில் மின்வாரியத்தில் வேலை.  அசிஸ்டன்ட் ஜூனியர் இன்ஜினியர்.  கையில் பணப்புழக்கம்.  ஓட்டு வீட்டை மச்சு வீடாகக் கட்ட வேண்டுமென என் மனைவி ஆசைப்பட்டாள்.  அதுவுமில்லாமல், அம்மா, அப்பா, மனைவி மற்றும் பையன் என ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் அந்த முடிவு.  போதிய இடம் காலியாக இல்லாததால், பழைய வீட்டை இடித்தாக வேண்டிய நிலை.  வீட்டை இடிக்கும் நாள் அன்று, தோல்வாடன் அதிகாலையிலேயே வீட்டுக்கு, எதிர்ப்பக்கம் உள்ள வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்தான்.  கிழட்டுத் தோல்வாடன்.  தொங்கிய தாடையும், ஆர்வமற்ற விழிகளும் கொண்டு ஒரு பரதேசி போல அமர்ந்திருந்தான்.  நான் சிரித்தபடி, ‘புது வீடு கட்டப் போறேன்.’ என்றேன்.  அவன் என்னைப் பார்க்கவுமில்லை.  நான் சொன்னதைக் கவனித்ததாகவும் தெரியவில்லை.  எரிச்சல் வந்தது.  ‘டேய் புடுக்கு’ என்று கூப்பிட வேண்டும் போல் இருந்தது.  ஆனால், செய்யவில்லை.  பார்ப்பதற்கு யாரோ போல் தான் இருந்தான்.  இதைப் பார்த்த என் அப்பா, ‘இப்பல்லாம் இப்புடித்தான்.  பேசுறது எதுக்கும் பதிலக் கணாம்.  சாப்பிட எதும் குடுத்தா வாங்குறதும் இல்ல.  குப்பய தான் பொறுக்கித் தங்கிறது. நெனவு தப்பிப் போச்சு.  அவே கட்டுன வீடு இடிக்கறதா இருந்தா மட்டும் எப்புடி தான் தெரியுமோ, போயிடுறான் இப்பல்லாம். அதான் நம்ம வீட்ட பாக்க வந்திருப்பான்.’, என்றார். 

வீட்டை இடிக்க ஆரம்பித்தோம்.  என் மகன் அவர் அருகில் அமர்ந்து விளையாண்டு கொண்டிருந்தான்.  மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். செம்மண் வீதி எங்களுடையது.  தண்ணீர் ஊற்றிக் குழப்பி மேல் காலெல்லாம் அழுக்காக்கியிருந்தான்.  ஏனோ நான் அவனை அதட்டவில்லை.  ‘குஞ்சு வீடுகட்டுதா?’ என்றார் தோல்வாடன் என் மகனிடம்.  அவன் பதிலேதும் சொல்லாமல் அவரைப் பார்த்து  பல்லைக் காட்டினான்.  தரையிலிருந்த வேப்பங்குச்சியை பீடி குடிப்பது போல் வாயில் வைத்தான்.  பிடுங்கிக் கீழே போட்ட தோல்வாடன், ‘குஞ்சு, பீடிலாம் குடிக்கக் கூடாது. மூச்சப் புடிச்சுப்புடும்.  மனுஷனோட உசுரு மூச்சுக்குள்ள தாஞ்சாமி இருக்கு. பொணம் மூச்சு விடாது பாத்திருக்கீல.  பீடி குடிக்கும்போது மூச்சடைச்சு இரும வரும் பாத்திருக்கீல’. நான் எனக்குத் தெரிந்த தோல்வாடனைக் கண்டு கொண்டேன்.  வீட்டை இடிக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தனர்.  இடிக்க முடியாமல், சைக்கிள் செயினைக் கொண்டு இரண்டு பேர் சுவரை அறுத்துக் கொண்டிருந்தனர்.  ‘ஒக்காளி, சிமுண்ட விடக் கஷ்டமா இருக்கேடா’ என்ற உரையாடலுடன். வீடு முழுமையாக இடிக்கப் படும் வரை பார்த்து விட்டு, தன் புகையிலைப் பையைக் கையில் பிடித்தபடி போய் விட்டார்.


பின் என் மகனிடம், ‘அந்த தாத்தாட்ட பேசுனியாடா?’ என்றேன். அவன், ‘ஆமாப்பா, அவருக்கு ஒரு பேர் எழுதச் சொல்லிக் குடுக்கச் சொன்னார்ப்பா’ என்றான். ‘என்ன பேர்டா’ என்றேன். ‘கோமதி’ என்றான்.  நான் என் மனைவிக்குத் தெரியாமல் புகைபிடிக்க, வீட்டை ஒட்டிய சந்துக்குள் புகுந்தேன்.

No comments:

Post a Comment