Pages

Wednesday, 14 September 2016

மலையில் தொலைதல்

கடந்த வாரம், ஆகஸ்ட் 25 அன்று பெங்களூர் அலுவலகத்திலிருந்து, இரண்டு நாள் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.  அதற்கு சில மாதங்களுக்கு முன்னரே அதைப் பற்றி மிகுந்த உற்சாகத்துடன் பேசிக் கொண்டு இருந்தனர் எல்லோரும்.  மிகப் பெரிய கூட்டம்.  மொத்தம் அறுபது பேர் செல்வதாக இருந்தது.  கடைசியில் 28 பேர் மட்டுமே செல்வது உறுதியானது.  முன்னரே இது பற்றி என் அம்மாவிடம் சொல்லிவிட்டால் தினமும் ஒரே அறிவுரையாக இருக்கும்.  எனவே கடைசி நாள் தான் இதைப் பற்றிச் சொன்னேன்.  அலைபேசி வேலை செய்யாது எனவும் சொன்னேன்.  மலைப்பகுதி ஆதலால் அப்படித் தான் இருக்கும் என ஊகித்திருந்தேன்.  அப்படித்தான் ஆனது.  இடத்தைத் சொல்ல மறந்துவிட்டேனே, இடத்தின் பெயர் 'சக்லேஷ்பூர்'.

வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கெல்லாம் அலுவலகத்திலிருந்து நேரடியாகக் கிளம்பினோம். வருகைப் பதிவேடெல்லாம் தயார் செய்யப்பட்டது.  என் பெயர் தான் அதில் முதலில்.  எல்லோரும் வந்ததும், ஒருமுறை வருகைப் பதிவு எடுக்கப் பட்டது.  பின் பேருந்து கிளம்பியது.  வருகைப் பதிவுச் சீட்டு ஒவ்வொருவரிடமாக கொடுக்கப் பட்டது.  அதில் மது எப்படி வேண்டும் என்று குறிக்க வேண்டும். அதாவது தண்ணீர் கலந்து வேண்டுமா, இல்லை குளிர்பானம் கலந்து வேண்டுமா,  அதுவும் எந்த அளவில் கலக்கப்பட வேண்டும் என்று.  எல்லோரும் அளவு குறித்துக் கொடுத்ததும், பேருந்தின் கடைசி இருக்கை, இந்த வேலைக்காக ஒதுக்கப்பட்டது.  அதுவரை நான் மிகக் கறாரான ஆளாகப் பார்த்த ஒருவர், மிகுந்த மகிழ்ச்சியுடனும் தாழ்மையுடனும் அதைச் செய்வதைப் பார்த்தபோது, அவர் முற்றிலும் வேறு ஆளாக உருமாறியிருக்கிறார் என்று நம்பத் தலைப்பட்டேன்.  தமிழ்க்காரர்.  வேலையின் போது மிகக் கடுமையாக அவருக்குக் கீழ் உள்ளவர்களிடம் நடந்துகொள்வார்.  அதனால் தான் நான் அப்படி நினைத்திருந்தேன். எனக்கான முறையில் நான் வேண்டாம் என்று சொன்னபோது, அதிர்ச்சியைக் காட்டி, பின் 'இருடா, உன்ன அப்புறம் வச்சிக்குறேன்' என்று சொல்லி நகர்ந்தார்.  நான் ஜன்னல் ஓர இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  பெங்களூரிலிருந்து சக்லேஷ்பூர் 250 கி.மீ. இருக்கும்.  பேருந்து மிக மிக மெதுவாகவே சென்றது.  அதற்கேற்றாற்போல் வண்டியின் உள்ளே சுதி ஏறத் தொடங்கியிருந்தது.

ரம், அதற்குத் தேவையான தண்ணிர், குளிர்பானப் புட்டிகள், மற்றும் திண்பண்டங்களாக பிஸ்கட், சாக்லெட், மிக்சர் என்று சகல ஏற்பாடுகளுடனும் கச்சேரி தொடங்கியது.  எனக்கு கொடுத்தார் என் மேலாளர், 'சும்மா குடிடா' என்று.  நான் புன்னகையுடன் வேண்டாம் என்றேன்.  அவரும் சிரித்தபடி சென்றுவிட்டார்.  பின்னர் பாடல்கள் போடப்பட்டன.  முதலில் ஹிந்திப் பாட்டு, பின்னர் கன்னடா, தமிழ் என்று மாறி மாறி ஒலிக்கவிடப் பட்டது.  எல்லோரையும் ஆட வைக்க முயன்று கொண்டிருந்தனர். என்னையும் ஆட வைக்க, என் மேலாளர் கேட்டார்.  அப்புறம் வருகிறேன் என்று சொல்லித் தாட்டிவிட்டேன். பின்னர் அனைவரும் ஆடுவதை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். எல்லோருக்குள்ளிருந்தும் யாரோ ஒருவர், பெரும் உற்சாகத்துடன் எழுந்து வருவதைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆகச் சிறந்த அனுபவம் என்று கூறுவேன்.  அப்படிப் பார்க்கும் போது நமக்குள் இருக்கும் வேறொருவரும் எழுந்து வர முயற்சி செய்ய வாய்ப்பிருக்கிறது.  எனக்கும் அப்படி வந்தார். பிடித்து அமுக்கிவிட்டேன் அமுக்கி.  ஐந்து பெண்களும் வந்திருந்தார்கள்.  அவர்களும் அதீத ஆச்சரியத்தை, தேவைக்கதிகமான அளவு தங்கள் கண்களையும் குரல்களையும் கொண்டு, வெளிப்படுத்திய வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தனர். 

பொழுது சரிந்து கொண்டிருந்ததே தெரியாதவாறு, பேருந்துக்கு உள்ளே உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.  இந்த அலுவலகத்தில் 80 விழுக்காடுக்கு மேல் 40-ஐ நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் அல்லது கடந்தவர்கள்.  அவர்கள் எல்லோரும் பதின்ம வயதுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.  ஒரு நான்கு பேர் நன்கு ஆடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் தான் எல்லோரையும் இழுத்து ஆட வைத்துக் கொண்டிருந்தார்கள்.  பெண்களில் இருவர் ஏற்கனவே ஆடிக் கொண்டிருந்தார்கள்.  அதில் ஒருத்தி தெலுங்கு பேசும் தமிழ்க்காரி.  அவளுக்கு சரியாக ஆட வரவில்லை என்றாலும், இரு கைகளையும் உயர்த்தி இடுப்பை பக்கவாட்டில் அசைத்து ஆடிக் கொண்டேயிருந்தாள்.  நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  இதர பெண்களை இழுத்து ஆட வைத்துக் கொண்டிருந்தாள்.  அவர்களும் ஆடினார்கள்.  கடைசியாக, உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்த தமிழ் மேலாளர் ஒருவரின் கவனம் என்மேல் விழுந்தது.  அவர்தான் மதுவை மகிழ்வுடன் எல்லோருக்கும் கலந்து கொடுக்கும் வேலையைச் செய்தது.  நான் சும்மா இருந்திருக்க வேண்டும். 'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ....' பாடல் வந்தபோது என்னால் கட்டுப்படுத்த முடியாமல், விசில் அடிக்க ஆரமித்துவிட்டேன்.  அதைக் கண்ட அவர், என்னை நோக்கி ஒடி வந்தார்.  'வாடா வாடா.... தமிழ்ப்பையா' என்று கூவிக் கொண்டே.  நான் 'அப்புறம் வருகிறேன் மணி' என்று எவ்வளவு கதறியும் பொருட்படுத்த வில்லை.  இடுப்போடு சேர்த்துப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்விட்டார். முன்வாசலுக்கு அருகில் உள்ள இருக்கைகளின் இடையில் தான் ஆடிக் கொண்டிருந்தனர்.  என்னைக் கூட்டத்தின் நடுவில் தள்ளி விட்டு, ஆடச் சொல்லி கூச்சலிட்டனர்.  நான் கூச்சப்பட்டு மறுத்துவிட்டேன். பெண்களும் இருந்ததால் கூச்சம் சற்று அதிகம் இருந்தது, தவிர்க்க முடியாததாகிப் போனது. கடைசியில் என்னை விடுவித்தனர்.  வந்து அமர்ந்தபின் என் மேலாளர் என் அருகில் வந்துவிட்டார்.  'கம், வில் டான்ஸ்' என்றார்.  'வராது, மது ப்ளீஸ் விட்ருங்க' என்றேன்.  விடவில்லை.  கூடவே அந்த தமிழ்ப்பெண்ணும் வந்துவிட்டாள்.  'வா, கூச்சப் படாத. எங்களுக்கு கூட தெரியாது.  சும்மா குதி' என்றாள்.  நான் மாட்டேன் என்று தலையசைத்துச் சிரித்தேன்.  இருவரும் என் கைகளைப் பிடித்து இழுத்து என்னை நிற்க வைத்து விட்டனர்.  நான் ஆடாமல் சிரித்தபடி நின்று கொண்டேயிருந்தேன்.   இருவரும் என் அருகே தங்கள் உடலை அசைத்துக் கொண்டு, என்னையும் 'ஆடு ஆடு' என்று அழைத்துக் கொண்டிருந்தனர்.  அப்போது என் மேலாளர் என்னிடம், 'சும்மா, ஆடுடா.  இந்தமாரி நேரத்தில் தான் டச் பண்ண முடியும்' என்று என் வலது கையை எடுத்து அந்தப் பெண்ணின் கையில் உரசிவிட்டான்.  அவள் கண்டு கொள்ளவேயில்லை.  நான் விதிர்த்துப் போனேன்.  சட்டென்று மொத்த உற்சாகமும் வற்றிப் போனது போல் தோன்றியது.  காரணம் பயம்.  ஒருவாறு தப்பித்து, வந்து இருக்கையில் அமர்ந்து உறங்கிப் போனேன்.  

இரவு 12:30-க்கு சக்லேஷ்பூரில் நாங்கள்  இறங்க வேண்டிய இடத்துக்கு 1கி.மீக்கு முன் பேருந்து வந்து சேர்ந்தது.  மலைப்பகுதி ஆதலால், அதன் பிறகான பாதை எப்படி இருக்கும் என்று தெரியாமல், பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டனர்.  அதன்பின் ஜீப்பில் செல்ல வேண்டியிருந்தது.  ஒரே ஒரு ஜீப்தான் இருந்தது.   எட்டு எட்டு பேராக ஏற்றிச் சென்று வந்து விட்டனர்.  அந்த விடுதியின் பெயர் 'ரொட்டிக் கல்லு'.  இருட்டில் எப்படி இருக்கிறது என்று பார்க்க முடியவில்லை.  எங்களுக்கு ஒரு 12 படுக்கை கொண்ட ஒரு நீண்ட அறை ஒதுக்கப் பட்டிருந்தது.  பிறருக்கு நால்வர் தங்கும் அறைகளாக ஒதுக்கப்பட்டிருந்தது.  நாங்கள் இருந்த அறையில் குளிரும் வெப்பமும் சமநிலையில் இருந்தது, நான் விரைவில் தூங்கக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.  நன்கு தூங்கினேன்.


அடுத்தநாள் காலை 6:30 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன்.  குளித்தேன்.  வெந்நீர் வருவது தெரியாமல், குளிர்நீரிலேயே குளித்து முடித்தபின் வெளியே செல்ல விரும்பினேன்.  கவி என்கிற ஆந்திர மாநிலப் பையனும் வந்தான்.  அவன்தான் என்னைப் போலவே எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்ற யோசனையோடேயே இருந்தான்.  இருவரும் அறையை விட்டு வெளியே வந்தோம். வெளியே வந்ததும் என் விழிகள் என்னையும் அறியாமலேயே விரிந்தன.  சுற்றிலும் மலைமுகடுகள் தங்கள் அழகை அப்பட்டமாகக் காண்பித்ததே காரணம்.  நாங்கள் தங்கியிருந்த அறையைச் சுற்றிலும், முழுப்பச்சை மலைமுகடுகள் விண்ணைத் துழாவிக் கொண்டிருந்தன அல்லது மேகங்கள் வந்து பசுமையின் குளிர்ச்சியைக் கடன் வாங்கிக் கொண்டிருந்தன.  மலை ஓடைகள் ஓடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.  நான் அவை எங்கோ தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன என்று நினைத்திருந்தேன்.  சுற்றிப் பார்த்தபோது தான் தெரிந்தது, எங்கள் அறையை ஒட்டியே 3-4அடி அகலம் கொண்ட ஓடை ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.  அதைப் பார்த்தபோது கிளர்ச்சிக்கு உள்ளானேன். இதற்கெல்லாம் காரணம் மர்மமானது என்று நம்புகிறேன்.  இருந்த அரைகுறை தூக்கக் மயக்கத்தையும் அது விரட்டியடித்தது.  மற்ற தங்கும் கூடங்கள் எப்படி இருக்கின்றன என்று நோட்டம் விட்டேன். மிகச்சிறிய ஓட்டு வீடைப் போல் தோற்றம் அளித்தது.  உள்ளே ஒரு நல்ல நட்சத்திர விடுதி அளவுக்கான அமைப்புடன் இருந்தது.  தொடர்ச்சியான ஈரப்பதம் அவ்விடுதிகளின் வெளிப்பகுதியில் ஒரு பழமையை அப்பியிருந்தது.  மெதுவாக ஒரு நடை சென்றோம்.  ஒரு ஓடை ஒன்றை ஒட்டித்தான் அவர்கள் அந்த விடுதியைக் கட்டியிருந்தார்கள்.  அதைப் பார்க்கச் சென்றோம்.  பதினைந்தடி அகலம் கொண்ட ஓடை. துல்லியமாக கீழே இருக்கும் கற்களையும் மண்ணையும் காட்டும் நீர்.  கூச்சமின்றி அள்ளிப் பருகத் தோன்றும் சுத்தம்.  அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அங்கேயே தங்கிவிடச் சொல்லும் பசுமைப் போர்வை.  மானசீகமாக எடுத்துப் போர்த்திக் கொண்டேன்.  கவி உற்சாக மிகுதியால் 'ஓ'வென்று கத்தினான். விடுதியில் மூன்று ஜெர்மன் செப்பர்டு நாய்களும் இரண்டு நாட்டு நாய்களும் வளர்த்து வந்தார்கள். அவன் கத்தியதும் ஒரே ஒரு நாட்டு நாயைத் தவிர்த்து அனைத்து நாய்களும் பாய்ந்து, நாங்கள் இருந்த இடத்திற்கு வந்தன.  வந்து எங்களின் நலனை முகர்ந்து நோட்டம் விட்டன.  பின் தண்ணிருக்குள் இருந்த கவியை கூர்ந்து நோக்கி, அவன் வெளியே வந்ததும் அவன் காலைச் சுற்றியே இரண்டு மூன்றுமுறை வந்து, அவன் பாதுகாப்பை உறுதி செய்தன.  பிறகு, எங்கள் கூடவே இருந்தன.

சற்று நேரம் கழித்து, பக்கத்து மலைமுகடுக்கு செல்லும் பாதை ஒன்று தென்பட்டது.  அதில் ஏறப் போனேன்.  
கவி 'வேண்டாம்' என்றான்.  'ஏதேனும் தவறான பாதையாக இருந்தால் என்ன செய்வது? பாதுகாப்பு முக்கியம்'  என்று அவன் எண்ணினான்.  

நான், 'ஏதாவது பிரச்சினைன்னா திரும்பி இதே வழில ஓடி வந்திரலாம்டா' என்றேன்.

அவனுக்கு சம்மதமில்லை என்றாலும், துணைக்கு வந்தான்.  நாய்கள் எங்கள் கூடவே இருந்தன.  ஒரு 30-40 மீட்டர் நடந்திருப்போம்.  நாய்கள் எங்களின் காலுக்குக் குறுக்காய் நடந்து வந்து, எங்களை தொடர்ந்து மேல்நோக்கி நகர விட மறுத்தன.  அதை மீறிச் செல்ல முயன்ற போது, வேண்டாம் என்று கெஞ்சுவதைப் போன்று மெல்லிய ஒலியை எழுப்பியவாறு, அண்ணாந்து அண்ணாந்து எங்கள் முகத்தைப் பார்த்தன.  மேற்கொண்டு செல்ல முடியாது என்று புரிந்து, மீண்டும் இறங்கத் தொடங்கினோம்.  குஷியாக அவையும் எங்களோடு வந்தன.


விடுதி அறைகளை நெருங்கிய போது, எல்லோரும் எழுந்திருந்திருப்பது தெரிந்தது.  சிலருக்கு புன்னகையை பதிலாகச் செலுத்திவிட்டு, தேநீர் அருந்த உணவுக் கூடத்திற்குச் சென்றோம்.  தேநீரும் காபியும் தயாராக இருந்தன. தேநீரை சில்வர் டம்ளரில் எடுத்து அருந்தத் தொடங்கினேன்.  உணவுக் கூடம் நடுவில் முற்றம் வைத்த வீடு போல இருந்தது.  இதில் முற்றம் இருக்கும் இடத்தில் ஒரு தொட்டி, அதில் நான்கு ஆமைகள் விடப் பட்டிருந்தன.  மழை பெய்தால் நீர் வந்து அதில் சேரும்.  இங்குள்ள விடுதியில் ஓடைகளின் நீரைக் கொண்டு ஒரு குளம் அமைத்திருந்தார்கள்.  அதில் ஒருபுறம் ஓடையின் நீர் வந்து விழுந்தபடி இருக்கும்.  மறுபுறம் அதே அளவு நீர் வெளியேறிக் கொண்டிருக்கும்.  அதேபோன்ற அமைப்பு தான் அந்த உணவுக் கூடத்தின் ஆமைத்தொட்டிக்கும் வைக்கப்பட்டிருந்தது.  காலை உணவு ஒன்பது மணியைப் போல ஏற்பாடு செய்யப்பட்டது.  தோசை, சட்னி, புலாவ், மற்றும் ஒரு இனிப்பு வகை. மிக நன்றாக இருந்தது.  

காலை உணவு முடிந்ததும் குழு விளையாட்டுப் போட்டி என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சின்னச்சின்ன விளையாட்டுப் போட்டிகள், வட்டத்திற்குள் சிலர் நிற்க வெளியிலிருப்போர் பந்தை எறிவர் - பந்து மேலே பட்டவர் வெளியே செல்லவேண்டும் என்பன போன்றவை.  ஆரம்பிக்கும் போது எனக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் முழு ஈடுபாட்டோடு விளையாடியது, விளையாடி முடித்தபின்தான் உணர்ந்தேன்.  அதன்பின் மதியஉணவுக்குச் சென்றோம்.  மதியஉணவுக்குப் 'மட் கேம்ஸ்' -  சேற்றில் விளையாடலாம் என்றார்கள்.


மதியஉணவாக கோழிக்கறி வைத்தனர்.  சோறு, குழம்பு, தொட்டுக்கொள்ள வைக்கப்பட்ட கோழிக்கறி, ரசம் மற்றும் பஜ்ஜி என எல்லாம் வீட்டில் தயார் செய்யப்படும் தரத்தில் இருந்தது.  ரசித்து ருசித்து சாப்பிட்டேன்.  சாப்பிட்ட போதையோடு மீண்டும் அந்த ஓடையில் சென்று என் கால்களை நனைத்து அரைமணி நேரம் அமர்ந்திருந்தேன்.  ரஞ்சித் என்னுடன் வந்தான், இங்கும் ஒரு ரஞ்சித் அமைந்துவிட்டான்.  என் ரசனைக்காரன்.  நுனிநாக்கு ஆங்கிலம் , ஹை-பை தோற்றத்தோடு இருப்பான். ஆனால் மிக மிக நல்ல பையன்.  மதியம் இரண்டு மணிக்கு மேல், சேற்றில் கையுந்து பந்து விளையாடச் சென்றோம்.  

முழங்கால் அளவு பள்ளம் வெட்டப்பட்டு அதில் தண்ணீர் விடப்பட்டு இருந்தது.  கையுந்து பந்துக்கான வலை கட்டப்பட்டிருந்தது.  முழங்கால் அளவு செந்நீர்.  பார்ப்பதற்கு எங்கள் ஊரின் செங்குளம் போல் இருந்தது.   அதில் இறங்கச் சென்றேன்.  ஏற்கனவே என் அலுவலகத்தைச் சேர்ந்த இருவர் உள்ளே இருந்தனர்.  அவர்கள் என்னை இறங்கவிடவில்லை.  அந்த திடலில், உள்ளே இறங்குவதற்கு சறுக்கல் ஒன்று அமைத்திருந்தார்கள்.  அதன்வழியாகத் தான் நான் இறங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினர்.  எனக்கு, இறங்கினால் முழுதாக நனைந்து விடுவேனே என்று தயங்கி நின்றிருந்தேன்.  பின் வேறுவழியின்றி சறுக்கலில் வந்து, உள்ளே இறங்கினேன் இல்லை விழுந்தேன்.  நெஞ்சுவரை நனைந்திருந்தேன்.  பின் என் தயக்கம் முற்றிலும் பறந்துவிட்டது.  ஒரு தேர்ந்த எருமை எப்படி நீரில் இருப்பதை விரும்புமோ, அப்படி நான் மாறிப் போனேன்.  பந்து இடப்புறம் போனால், வலப்புறம் பாய்ந்து சேற்றில் முங்கி முங்கி எழுந்து சிரித்தேன்.  மற்றோரில் பலர் குடித்திருந்தமையால் பல அழிச்சாட்டியங்கள் செய்து எல்லோருக்கும் 'கிச்சு கிச்சு' மூட்டிக் கொண்டிருந்தார்கள்.  அது முடிந்த பின் ஓடையில் விளையாடினோம்.  கால் உரசும் அளவுக்கு தண்ணீரின் மேல் செல்லுமாறு இருந்த ஊஞ்சல், பெரிய கடற்பஞ்சு மீது அமர்ந்து ஓடையின் நீரில் மிதத்தல்,  ஓடையின் மேல் கயிற்றுப் பாலத்தில் நடத்தல், 10 மீட்டர் உயரத்திலிருந்து கயிற்றில் சறுக்கி ஓடையில் விழல் என்று மாலை வரை போயிற்று. கூச்சலிட்டுக் கொண்டு, பெரும் கொண்டாட்டமாய் இது அமைந்தது.


மாலை 6:30 மணி முதல், 'பார்பிக் கியூவுக்கு வாங்க' என்று என் மேலாளர் அழைத்துக் கொண்டிருந்தான்.  குடிப்பதைத் தான் அப்படிச் சொல்கிறான் என்று, எனக்கு அங்கு போன பின்தான், ரஞ்சித் சொல்லித் தெரிந்து கொண்டேன்.  மதுக்கூடம் எல்லோரும் அமரும் வண்ணம் வட்டமாக அமைக்கப்பட்டிருந்தது.  அறையாக இல்லை.  வெளிப்புறத்தைப் பார்க்கும் வண்ணம் வெட்டவெளியில், தளம் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது.  பியர் பாட்டில்கள், ரம் பாட்டில்கள், சோடா பாட்டில்கள் என்று மேஜை நிறைந்து இருந்தது.  கூடவே விடுதியின் ஆள் ஒருவர் உணவு பரிமாறுவதற்காக நின்றிருந்தார்.  உணவு என்றால் உணவு இல்லை, சூப், சுண்டல், பொரித்த கோழிக்கறி என்று பரிமாற.  தெலுங்குப் பெண் ஒருத்தி இறுக்கமான உடை அணிந்து உலாத்திக் கொண்டிருந்தாள்.  கையில்லாத, முழங்காலுக்கு ஒரு ஜான் மேலே இருக்குமாறு உள்ள உடை.  அதை உடுத்திக் கொண்டு உலாத்திக் கொண்டிருந்தாள்.  மது பரிமாறப் பட்டது.  மெதுவாக சூழல் கொண்டாட்டத்தின் மையம் நோக்கி நகரத் தொடங்கியது.  கூடத்தின் நடுவில் விறகு போட்டு நெருப்பு மூட்டப்பட்டது.  அது நெருப்போடு சேர்ந்து புகைந்து கொண்டிருந்தது.  அவ்வப்போது அருகில் சென்று குளிர்காய்ந்து வந்தோம்.  எட்டு எட்டரை மணி அளவில், புகை சூழ் கூடத்தில், போதையின் நிழலில் கூட்டம் அசைவாடிக் கொண்டிருந்தது.  ஒரு விளையாட்டு திட்டமிடப்பட்டது.  ஐந்து ஜோடிகள் ஆடவேண்டும்.  ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும் ஆட வேண்டும் என்று யோசனை சொல்லப் பட்டது.  என் மேலாளர் என்னையும் அதனுள் இழுத்துவிட முயன்றான்.  நான் மறுத்துவிட, ஐந்து ஜோடிகள் ஆடத் தயாரான நிலையில் நின்று கொண்டிருந்தனர்.   போதையில், பெண் போல ஆட முயன்ற எல்லா ஆண்களும் கூட்டத்தின் சிரிப்புக்கான உத்திரவாதமாகத் திகழ்ந்தனர்.  நான் போயிருந்தால் இன்னும் அதிகமாக சிரிப்புக்கு உதவியிருக்கக் கூடும்.  பத்து மணிக்கு, விடுதியின் ஆள் வந்து சாப்பிடச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தான்.  யாரும் நகர்வதைப் போலத் தெரியவில்லை.  அவன் முகம் அழுவது போலவும், எரிச்சலில் இருப்பது போலவும் எனக்கு ஒருசேரத் தோன்றியது.   கடைசியில் பதினொரு மணியைப் போல எல்லோரும் சென்று உணவுக் கூடத்தில் அமர்ந்தோம்.  நான் கட்லா மீன், சோறு, ரசம் சாப்பிட்டேன்.  வழக்கம் போல மிகத் தரமாக இருந்தது.  


பின் அலுப்பில் சென்று தூங்கி, மறுநாள் காலை எழுந்தோம்.  பக்கத்தில் இருக்கும் மலைமுகடுக்கு நடை கூட்டிச் செல்ல வழிகாட்டி வந்தார்.  முந்தின நாள் நான் சென்ற அதே பாதை.  நாய்கள் என்னை நடக்கவிட மறுத்த பாதை.  இப்போதும் அதே நாய்கள் கூடவே வந்தன.  ஆனால்  வழிகாட்டி இருந்ததால் அவை எங்களைத் தடுக்கவில்லை.  மனிதனை விட விலங்குகள் நல்ல நுண்ணுர்வு கொண்டவை போலும்.  பத்து நிமிட நடைதான்.  பெயருக்காக மலையேற்றம் என்று, இது நடந்து முடிந்தது.  மேலே சென்று சில நிமிடங்கள் நின்று சுற்றிலும் வேடிக்கை பார்த்து, புகைப்படம் எடுத்து, கீழே வந்து காலை உணவு முடித்து, பின் வீடு திரும்பினோம்.

இது எனக்கு மிகவும் பிடித்த பயணம்.  காரணம் என்னவென்று யோசனை செய்ததில், அலைபேசிதான் என்று தோன்றியது.  கிளம்பும் முன் நான் சொன்னதன் படி, அங்கிருந்த ஒன்றரை நாட்களும் நான் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் இருந்தேன்.  அது என்னை மிகவும் நிதானமானவனாவும் அவ்வப்போது நடக்கும் அந்தந்த கணத்தை வாழ்பவனாவும் காட்டியது என்று தோன்றுகிறது. யாருமற்ற வெளியில் உலவுவதைப் போலக் கற்பிதம் கூட செய்து கொண்டேன்.  அதனால் தானோ என்னவோ, இப்படியான பயணங்களை நினைத்து என் உள்மனம் ஏங்கிக் கற்பனை செய்யத் தொடங்கிவிடுகிறது.  நான் நானாக இருக்க இது உதவும் என்று நினைத்துக் கொள்கிறேன். குறைந்தபட்சம் இதுபோன்ற மன திருப்திக்காகவாவது மீண்டும் மீண்டும் இதுபோல மலைகளிலோ, குகைகளிலோ, கடற்கரைகளிலோ தொலைந்துபோக ஆசைப்படுகிறேன்.