Pages

Monday, 14 December 2015

சம்பவங்கள் சில

புதிதாக என் அலுவலகத்தில் ஒரு பையன் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். ராஜஸ்தான்காரன்.   மனித வளத்துறையைச் சார்ந்த பெண் ஒருத்தி உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவள்.  எனவே அவளுக்கு பெறுகின்ற வேலை தொடர்பான ஆட்கள் எல்லாம் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.  அவனுடன் பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டேன்.  அவனும் அவன் நண்பனும் ஒன்றாகத் தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அவன் தமிழ்க்காரன்.  பேசிக்கொண்டிருக்கும் போது , ‘நம் அலுவலகத்தில் நிறையப் பேர் ஹிந்திக்காரர்கள்தான் ஆனாலும் ஏன் பெரும்பாலானவர்களுக்கு ஹிந்தி தெரியவில்லை’ என்றான் ஆங்கிலத்தில்.  நான் சீண்டப்பட்டதாய் உணர்ந்தேன்.  சரட்டென எழுந்த ஒரு நியாமான வன்மம், அவனை ஏதாவது கேட்க வேண்டும் என்று என்னைத் தூண்டியது.  

‘நீ எந்த ஊர்’, என்றேன். 

‘ராஜஸ்தான்’, என்றான்.

‘உன் மொழி எது?’

‘ஹிந்தி’ என்றான் பிரகாசமாக.

‘உண்மையிலேயே ஹிந்திதானா? பிராந்திய மொழி இல்லையா? இருக்கவேண்டுமே?’.

‘ஓ… அதுவா…’, என்று ஒரு இழுவை இழுத்தபின், ‘ராஜஸ்தானி’ என்றான்.

‘பிறகு ஏன் ஹிந்தி என்றாய்?’

‘இரண்டு மொழிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.  இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.’

‘பிறகு ஏன் ராஜஸ்தானி என்று ஒரு தனி மொழி வைத்திருக்கிறீர்கள்?’

‘இல்ல… பெரிய வித்தியாசமெல்லாம் ஒன்றும் இல்லை.’, என்றான் பீதியுடன்.  மலங்க மலங்க விழித்த அவன் கண்கள் என் வெற்றியை உறுதி செய்தது.  

‘அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.  ஏன்னா, கிட்டத்தட்ட தமிழும் மலையாளமும் ஒன்றுதான்.  ஆனால் எந்த மலையாளியும் உன் மொழி என்ன என்று கேட்டால் தமிழ் என்று சொல்ல மாட்டான். மலையாளம் என்று தான் சொல்வான். அதுதான் சரியும் உண்மையும்.’.

இதற்கு அவன் எந்த மறுப்பும் சொல்லமாட்டான் என, அவன் விழிகள் எனக்கு முன்னமே சமிக்ஞை காட்டிவிட்டன.  மிக வேகமாக ஏற்றுக் கொண்டதாய் தலையை அசைத்தான்.  எனக்கு ஒரு மாபெரும் திருப்தி.  அதன்பின் அவனுடன் ஒரே காரில் ஒரு மீட்டிங்கிற்குச் செல்ல வேண்டியிருந்தது.  அப்போது என்னோடு பேசும் போது அவன் மிக மிக கவனமாய் பேசினான்.  அதை நான் உணர்ந்தாலும், சகஜமாகவே பேசி வந்தேன்.

எக்காரணத்துக்காகவும் எவனொருவனும் தன் தாய்மொழியை மாற்றிச் சொல்லலாகாது.  ஆனாலும், தன் தாய்மொழியைப் பற்றி உயர்வான எண்ணம் இல்லாதவனுக்கு, வேறு எந்த மொழியின் மீதும் மதிப்போ, அதன் பெருமிதங்களை அறிவது குறித்தோ எந்த பிரக்ஞையும் இருக்க வாய்ப்பு வெகு குறைவு.  ஆனால், என்னை தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுத்துத் திமிறும் ஒருவனாகவே அவன் என்னைப் பார்த்தான்.  அவனைப் போல் என் தாய்மொழி என்ன என்று கேட்டால் ஹிந்தி என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தானா? அல்லது நான், அப்படி அவன் நினைத்ததாக எண்ணிக் கொண்டேனா? இரண்டிலும் உண்மை இருக்கிறது.

இன்னொரு சம்பவம்.  மதுரைக்கு என் அப்பாயியின் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்தேன்.  சென்னையில் மழை வலுக்கத் தொடங்கிய நாளன்று.  டிசம்பர் ஒன்று.  சென்னை - மதுரை அரசுப் பேருந்து.  மழையாகையால் பெரும் கூட்டம் ஒன்றும் இல்லை.  முன்னிருக்கைகளில் சில பதுவைப் பெண்களும், சில அங்கிள்களும்.  வழக்கமாக நான் பின்னிருக்கைகளில் தான் அமர்வேன்.  எந்த இருக்கையில் அமரலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தேன்.  கடைசியில் சென்று பார்த்தால், சற்று முன்னர் போடப்பட்டிருந்த வாந்தியில் செம்மண்ணை அள்ளிப் போட்டுக் கழுவி விட்டதன் வடு இருந்தது.  எனவே, எனக்கு அங்கே அமர ஒப்பவில்லை.  மூன்று இருக்கைகள் தள்ளி வந்தமர்ந்தேன்.  எனக்கு முன் 5-6 வடஇந்திய இளைஞர்கள்.  பொருள் வேண்டி இடம்பெயரும் சமுத்திரம் ஒன்றின் சில துளிகள் அவர்கள்.  அப்போது எனக்கு திடீரென்று அவர்கள் மேல் பேரிரக்கம் வந்தது.  எனக்கு இது பொன்ற பயணப் பொழுதகள் இளகிய மனம் படைத்தவனாகிப் போகிறேன்.  பேச மறுத்துப் போய், என் மனத்தின் ஈரப் பகுதிகளில் மோப்பம் பிடித்துப் பார்த்த வண்ணம் இருக்கிறேன்.  அப்படியான பொழுதுகளை பெரும் ஆசையுடன் எதிர் பார்க்கிறேன்.  ஆனால், அதன்பின் என்னைப் பீடிக்கப் போகும் வெறுமை குறித்தும் பயம் கொள்கிறேன்.  அதனால் தானோ என்னவோ, இதுபோன்ற சந்தர்ப்பங்களை நான் ஒருசேர ஏக்கத்தோடும் வெறுப்போடும் எதிர்பார்க்கிறேன்.

புத்தகம் ஒன்றை எடுத்துப் போயிருந்தேன்.  ஜெயமோகனின் ‘நினைவின் நதியில் - சுந்தர ராமசாமி’.  படித்துக் கொண்டிருந்தேன்.  வடஇந்தியர்கள் தான் எப்போதும் பான்பராக் மென்று கொண்டு இருப்பார்களே.  என் முன்னால் அமர்ந்திருந்த ஒருவன், மழை பெய்து கொண்டிருந்த சமயத்திலும் அடிக்கடி ஜன்னலை திறந்து திறந்து எச்சிலைத் துப்பிக் கொண்டிருந்தான்.  எனக்கு நேரம் ஆக ஆக கோபம் ஏறிக் கொண்டே இருந்தது.  வழக்கமாக பயணங்களில் நான் தான் பக்கத்திலிருப்போரை வெறுப்பேற்றுவேன், தூங்கி விழுந்து.  இது புதிதாக இருந்தது.   ஒருமுறை அவன் ஜன்னலைத் திறந்து எச்சிலைத் துப்பிய போது, ஒரு துளி திரவம் என் கைகளில் வந்து பட்டது.  அது எச்சலா, தண்ணீரா என்றெல்லாம் எனக்கு அக்கறை இல்லை.    எழுந்து அவன் முதுகில் பலத்த அறை ஒன்றை வைத்தேன்.  பெரும் சத்தம்.  என்னை விட பெரிய உடலும் வலுவும் கொண்டிருந்த அவன், என்னை நோக்கி அதிர்ச்சயும் கருணையை எதிர்பார்க்கும் கண்களையும் என்னிடம் காட்டினான். ‘கியா பய்யா?’ என்றான், மெல்லிய குரலில்.  ‘எச்சி துப்பறதா இருந்தா வெளிய போய் துப்புடா’ என்று கத்தினேன்.  அக்கத்தல் வெறுப்பில் உச்சத்தில் இருந்ததை நான் உணர்ந்தேன்.  திடீரென்று ஒரு பதட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது.  அவன் திருப்பி அடித்தால்?  அதை வெளிக்காட்டாமல் இருக்க, சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னேன்.  அவனுக்கு முதலில் புரியவில்லை.  பின் அவர்களோடு இருந்த தமிழ்க்காரன் ஒருவன், அவனை சைகையால் விளக்க, அவன் லேசாக நகர்ந்து அடுத்த இருக்கையில் அமர்ந்தான்.

சில கணங்களுக்குப் பின் யோசித்துப் பார்த்தேன்.  அவன் ஏன் அவன் சொந்த ஊரை விட்டு விட்டு இங்கு வந்தான்?  அவன் ஊரில் மிக மதிக்கத்தக்க ஒருவனாக இருப்பானோ?  அப்படி என்றால் இந்த அவமானத்தை அவன் எங்ஙனம் எடுத்துக் கொள்வான்?  சொந்த ஊரில் இருந்திருந்தால் இப்படி எல்லாம் அவமானப்படத் தேவையில்லையே என்று நினைத்திருப்பானோ? 
இன்னும் நினைத்துப் பார்த்துக் கொண்டேன்,  அவன் நிலையில் நானும் என் நிலையில் அவனும் இருந்தால் என்ன ஆகும் என்று.  நான் எதுவும் செய்திருக்க மாட்டேன். அவனைப் போலவே அமைதியாய் நகர்ந்து சென்றிருப்பேன்.  ஆனால், என்னால் திருப்பி என்ன என்று கூட கேட்க முடியவில்லையே என்று, என் இயலாமையை எண்ணி நொந்திருப்பேன்.  கண்கள் கட்டாயம் சில துளிகளையாவது சிந்தியிருக்கும்.
ஏன் அப்படி ஒரு கோபம் கொண்டேன் என்று எனக்கே, என் மேல் கடுப்பு.  அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் ஒன்று, நம் ஈகோவைக் கொல்வது ஒன்றும் அவ்வளவு எளிதில்லை.  மூன்று இருக்கைகள் தள்ளித் தான் அமர்ந்திருந்தான்.  கடைசிவரை அவன் கண்களைக் கூட சந்திக்க முடியவில்லை.  குற்றவுணர்வுள்ள எனக்கே இப்படி என்றால், அடிபட்ட அவன் எப்படி இருந்திருப்பான்.



மேற்கண்ட இரு சந்தர்ப்பங்களிலும், என் பிழை மிக மிக வெளிப்படையானது.  என் தரப்பை இன்னும் என் மென்மையாகச் சொல்லியிருக்க வேண்டும்.  சொல்லப் போனால் இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும்.  இந்நேரம் அவர்கள் இருவருக்கும் நம் சூழலைப் பற்றி என்னால் ஒரு எதிர்மறையான உண்டாகியிருக்கும்.  இது உண்மையோ இல்லையோ? ஆனால், என்னால் அவர்கள் சங்கடப் பட்டிருப்பார்கள்.  இனி நான் எப்போதும் இப்படித் தவறியேனும் செய்வதில்லை.

Friday, 11 December 2015

அட்ரிலினும் - அன்பும்

என் அலுவலகத்தில் பிராமணர்கள் அதிகம்.  இதைக் கண்டறிய தனியாக மெனக்கெட வேண்டியதில்லை. எப்போதும் போல அவர்கள் தங்கள் தனித்துவத்தை அடையாளம் காட்டும் விதமாக, தனித்துவமான மொழியைப் பேசுவதாகட்டும், ‘அய்யோ, நான்-வெஜ்ஜா’ என்பதாகட்டும், இப்படி வெளிப்படுத்திய வண்ணம் இருப்பர்.  எல்லோரையும் போல் எனக்கும் அது அசூயையாகவே இருக்கும்.  இன்னொன்றையும் சொல்லியே ஆக வேண்டும்.  ஒருபோதும் துவேஷத்தைக் காட்டுவதில்லை.

தங்களின் உணவுப் பழக்கத்தை அதிகமும் சிலாகித்துப் பேசிய வண்ணம் இருப்பர்.  எங்களிடம் ஒரு புராஜக்ட் ஒன்று உண்டு, ஆன்லைன் கறிக்கடை.  அதன் மேலாளர் அய்யர் பெண்மணி.  கேட்கவும் வேண்டுமோ?  கிடைக்கிற இடைவெளியிலெல்லாம் தன் ஒவ்வாமையை, மாமிச உணவின் மீதான தன் ‘உவ்வே’யை காட்டுவார்.  எனக்காகட்டும், அதில் வேலை செய்யும் என் நண்பனாகட்டும் சடாரென வெறுப்பு ஒன்று வந்து தொலைக்கும்.  நியாயம்தானே? இப்போதெல்லாம் அது கொஞ்சம் கொஞ்சமாக சரியில்லையோ என்று தோன்றியவாறு உள்ளது.  காரணம் இருக்கிறது.  

இடையில் ஒருநாள், அலுவலகத்திலிருந்து சாப்பிட வெளியே ஒரு ஜப்பானிய கடைக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள்.  கடையின் பெயர் - மொமோ யொமா.  உள்ளே நுழைந்ததும் ஒரு வாசம்.  அது உணவுப் பொருள்களின் வாசம் என்பதை சாப்பிட ஆரம்பித்தபின் தான் தெரிய வந்தது.  நான், கிடைத்த எல்லா அசைவத்தையும் ஆர்ட்ர் செய்தேன், பன்றி, மாடு, மீன்(சுசி, டூனா) மற்றும் சிக்கன்.  அங்கு எனக்கு சில ஆச்சரியங்கள் இருந்தன.  தேநீர் குளர்ந்திருந்தது. அதுவும் துளி கூட இனிப்பின்றி, வெளிர் பச்சை வண்ணத்தோடு, சுவையும் மிக மிக மென்மையான கசப்பு.  அசைவ உணவுப் பதார்த்தங்கள் எல்லாம் அரைவேக்காடுதான். மாட்டுக்கறி நன்றாக இருந்தது.  பன்றிக்கறி இதுவரை நான் சாப்பிட்டதில் மிக மிக மென்மையான பன்றிக்கறி.  செம்பருத்தி இதழ்களைத் தின்பதைப் போல இருந்தது.  மீனை சமைக்கக் கூடாதாம், பச்சை மீனை இரண்டு விரல் அளவு  பிரட் துண்டின் இடையில் வைத்து இருந்தனர்.  வேகவைக்காதது என்று சொல்லியிருந்தனர். ஆனாலும் எனக்கு ஒரு நம்பிக்கை, மாடு மற்றும் பன்றிக்கறையைப் போல, அரைகுறையாக வேகவைத்திருப்பார்கள் என்று.  பிறகுதான் தெரிந்தது, சுத்தமாக வேகவைக்கப் படவில்லை.  பச்சை மீன் அப்படி இருக்கும் என்று நான் நினைத்ததே இல்லை.  கவிச்சை அடித்தது.  ஆனாலும் அதெல்லாம் அப்படியொன்றும் பெரிய விஷயமில்லை. சாப்பிடும் போது என் நாக்கை நானே சாப்பிடுவது போல ஒரு ருசி.  உப்பின் சுவை சமைக்கப் படாத இறைச்சியில் அதிகம் இருக்கும் போல.  மொத்தம் ஆறு மீன் துண்டுகள்.  இரண்டுக்கு மேல் என்னால் சாப்பிட முடியவில்லை.  மூன்றாவது துண்டை வாயில் வைத்தபோது, குமட்டிவிட்டது.  கவிச்சையெல்லாம் ஒரு பொருட்டல்ல, ஆனால் பச்சைக் கறியின் சுவையை என்னால் ஏற்கமுடியவில்லை.  எனக்கெல்லாம் உணவுப் பொருளும் குமட்டும் என்று கண்டுகொண்டேன்.  ‘நானெல்லாம் சாக்கடைக்குள்ளேயே கூடுகட்டி வாழ்ந்தவன்’ என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு பெரிய இடிதான்.

இதன்பின் ஒன்றை யோசிக்க ஆரம்பித்தேன், என் அருகே அமர்ந்திருந்த நான்கு சைவ பக்கிங்களின் நிலையை. ரொம்பக் கஷ்டம் தான்.  பாவம்.  அன்று முதல், அவர்களுடைய மாமிச உணவின் ஒவ்வாமையை என்னால் உணர முடிகிறது.  ஆனால், இன்னொரு முக்கியமான விஷயம், தமிழ்த் திரைப்படங்களில் அய்யர்களை துக்கடாக்களாக, No: 1 காமெடிப் பீஸுகளாகக் காட்டியபடி தான் இருக்கிறோம்.  அது ஒரு பெரிய விஷயமாக தெரிந்ததில்லை.  ஆனால் இப்போது அதே போல மாமிசம் உண்பவர்களை, அவர்களின் கூட்டத்தில் இருந்து என்னைச் சொல்லும் போது புரிகிறது.  அன்றுமுதல் நான் வெறுமனே அவர்களை எள்ளல் செய்வதை விட்டொழித்துவிட்டேன்.  ஆனாலும் அவர்கள் தங்கள் தனித்துவத்தை பேணும் பொருட்டு அதை விடுத்த பாடும் இல்லை, சீண்டலின் போது நானும் மடக்குவதற்கான பேச்சுக்களைப் பேசியிருக்கிறேன்.  பிழைதான்.  செய்வதற்கு ஒன்றும் இல்லை.

நிற்க.

மாமழை ஒன்று எம்மைச் தழுவிச் சென்றிருக்கிறது.  அது ஏற்படுத்திய விளைவுகள் பலவேறு மனக்குழப்பங்களையும் மனத்தெளிவுகளையும் எல்லோரிடத்திலும் உண்டாக்கியிருக்கிறது.  குழப்பங்களாக சொல்வதென்றால், அரசியல் நடவடிக்கைகளும், மீடியா குவிந்ததும், வட இந்திய ஊடகங்களின் செயல்பாடுகளும், நம்முடைய நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளும், அதனால் நாம் அடைந்த விளைவுகளும், வெள்ளத்தின் முதல் இரண்டு நாட்களில் சில கடைக்காரர்கள் கொள்ளை விலைக்கு விற்றதும் மற்றும் இன்னபிற.

இதுபோன்ற இக்கட்டான சூழல்களினால் தான் நம் கீழ்மைகளும் மேன்மைகளும் ஒருசேர வெளிப்படும்.  அனைவரின் மனச்சாட்சியோடும் இம்மழை ஒரு மாபெரும் உரையாடல் நிகழ்த்தியிருக்கிறது.  அதை தினந்தோறும் வந்து கொண்டிருக்கும் செய்திகளும், களப்பணியார்களின் பேட்டிகளும் காட்டிய வண்ணம் உள்ளது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல்லா மக்களும் இருந்திருப்பார்கள் தானே?  வீட்டில் சமைக்க இயலாத பல ஏரியாக்களில் முதலில் வீதியில் அடுப்பை ஏற்றியது அய்யர்கள் தானாம்.  கேள்விப்பட்ட போது ஒருவகை நெகிழ்ச்சி ஏற்பட்டது.  பொதுவாக பொதுப் பிரச்சினைகளுக்கு தெருவிலிறங்கிச் செயல்படுவது ஒருவகை பொறுக்கித் தனம் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு என்பது என் கணிப்பு.  

நாய் விரட்டம் போது, தாண்ட முடியாத பள்ளத்தையும் தாண்டி விடுவோம்.  அதுபோன்ற அசாதாரண சம்பவங்களின் போது நம்முடைய சுரப்பிகளில் ஒன்றான ‘அட்ரலின்’ சுரந்து அப்படி ஒரு வேகத்தையும் ஒரு  உச்சகட்ட விழிப்புத் தன்மையையும் நமக்குள் உண்டாக்கிவிடும்.  அப்படி ஒரு விழிப்புத் தன்மையை கடந்த சில வாரங்களாக நம்மில் பலர் இருந்து கொண்டு, மீட்புப் பணிகளேயும் நிவாரணப் பணிகளையும் மேற்கொள்வதைப் பார்க்கையில் சிறு நெருப்பும் ஒளியும் தென்படுகிறது. பாரதி பிறந்தநாளான இன்று, அந்நெருப்பை அணையாமல் காத்து, சுயநலக் காட்டில் வைப்போம். வெந்து தணியட்டும் அக்காடு.  இப்பதிவை ஆரம்பித்த போது, இன்று பாரதியின் பிறந்தநாள் என்பதே என் நினைவில் இல்லை.  ஆகவே யாரும் இப்பதிவின் தொடக்கத்தைக் கொண்டு பாரதியை இணைப்பதாக எண்ண வேண்டாம்.  அவர் அமைப்புகளுக்குள்ளும் வீண் ஜம்பத்துக்குள்ளும் அடங்காதவர்.


வாழ்க பாரதி.