Pages

Tuesday, 4 October 2016

எல்லை கடத்தல்

காவேரிப் பிரச்சினைக்குப் பின்னால், நான் பெங்களூரை விட்டு வெளியே செல்லவில்லை.  கிட்டத்தட்ட ஒரு மாதம்.  அதற்கு முன் ஒரு மாதமாக வீட்டில் அடுத்த மாதம் வருகிறேன் என்று சொல்லிவந்தேன்.  எனவே நான் வீட்டிற்கு அல்லது தமிழ்நாட்டிற்குச் சென்று இரண்டு மாதங்களாகிவிட்டன.   குறைந்தபட்சம் சேலம் வரையாவது சென்று வருவது, பெங்களூர் வந்தபின் வழக்கமாகிவிட்டது.   தனித்திருத்தல் என்பது இவ்வளவு சுமை என்பதால் நிகழ்ந்த மாற்றம் இது.  பள்ளிமுதல் கல்லூரி, இப்போது வேலைக்குச் செல்லும் போதும் அறையில் குறைந்தது மூன்று பேருடனாவது இருந்து, நான் இன்னும் விடுதியில் கூட்டமாக இருக்கும் மனநிலையிலேயே இருந்து வருகிறேன்.  போகட்டும்.

பெங்களூர் வந்ததிலிருந்து செய்திகள் எனப்படுவது ஃபேஸ்புக்கில் வருவதுதான், புரளிகள் மற்றும் லைக்குகளுக்காக செறிவூட்டப்பட்ட செய்திகளும்தான்.  இவை கிட்டத்தட்ட புனைவுகளுக்கே சவால் விடக் கூடியவை.  எனவே அவற்றை ஒரு பொருட்டாக இப்போதெல்லாம் கவனிப்பதில்லை.  மேலோட்டமாக மேய்வதோடு சரி.  இதனால் 'கர்நாடகா-தமிழ்நாட்டு எல்லையில் பதட்டம்', 'மணப்பெண் நடந்து வந்து மணம்புரிந்தார்' இதையெல்லாம் செறிவூட்டப்பட்ட செய்திகள் என்று விடுத்திருந்தேன்.  நம் ஆட்களுக்கு இப்போதெல்லாம் தமிழ் இலக்கணத்தில் மேல் பெரும் காதல் வந்துவிட்டது போலும்.  அதிலும் 'உயர்வுநவிற்சி' அணியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

வழக்கமாக, பெங்களூர் - சேலம், சேலம் - திண்டுக்கல் என்று முன்பதிவு செய்யாமல் செல்வது எனக்கு விருப்பமானது.  சென்னையிலிருந்து என் ஊருக்குச் செல்வதைப் போலல்லாமல் இங்கு எப்படியாவது பேருந்தைப் பிடித்துவிடலாம்.  அதுவுமில்லாமல் முன்பதிவு செய்தால் பயணச் செலவும் இருமடங்குக்கு மேல்.  முன்பதிவு செய்யாமல் சென்றால் 286 ரூபாயில் என் வீட்டைச் சென்றடைய முடியும்.  தனியார் பேருந்துகளில் முன்பதிவுக் கட்டணத்தைப் பார்த்தால், குறைந்த பட்சக் கட்டணம் 650 ரூபாய்.  இது குளிரூட்டப்படாத, பின்னால் இழுத்துவிட்டுக் கொள்ளும் இருக்கை கொண்ட பேருந்தில்.  படுக்கை, குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.  அரசுப் பேருந்தில் நான் முன்பதிவு செய்ய முயலுவதில்லை.  ஏனெனில் எந்த முன்னறிவுப்புகளையும் பெறுவது அவ்வளவு எளிதில்லை.  தனியார் பேருந்துகளில் தனியாக பேருந்து நடத்துநர் எண்ணைக் கொடுத்திருப்பார்கள்.  எளிதில் தொடர்புகொள்ள முடியும்.

வெள்ளிக்கிழமை இரவு நான் கிளம்ப வேண்டும்.  காலை அலுவலகம் வந்தேன்.
என் அலுவலகத்திற்கு கணசமான நபர்கள் ஓசூரிலிந்து வருகின்றனர்.  'சும்மா கேட்டுத்தான் பார்ப்போமே' என்று அவர்களிடம் கேட்டால், செய்திகளில் வருவது போல், இன்னும் பேருந்துகள் இருமாநிலங்களுக்கும் இடையில் இயல்பான நிலையில் இயக்கப்படவில்லை.  எல்லை வரை இரு மாநிலப் பேருந்துகளும் வந்து தத்தம் எல்லையிலிருந்து ஆட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தனர் என்று அவர்கள் சொன்னதும், எனக்கு அப்படிச் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் வந்தது.  ஆனால், நான் அடுத்தநாள் காலையிலேயே என் அம்மாவை 10-11 மணிக்குள்ளாக மதுரைக்கு சிகிச்சை ஒன்றுக்காக அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.  தனியார் பேருந்து வலைத்தளத்தில் 'பைசா'வை நோட்டம் விட்டேன்.  650 ரூபாய்க்கு பெங்களூர் - திண்டுக்கல் பேருந்து சிக்கியது.  ஒரே ஒரு இருக்கை மட்டுமே மீதமிருந்தது.  முன்பதிவிட்டுவிட்டேன்.  இரவு 9:30 க்கு பேருந்து.

குறித்த நேரத்திற்கு, மடிவாலாவில் இருக்கும் அந்த பேருந்தின் அலுவலகத்திற்குச் சென்றால், பேருந்து தயாராக இருந்தது.  திருப்தியுடன் ஏறி அமர்ந்தேன்.  உள்ளே ஆறேழு பேர் தான் இருந்தோம்.  என் இருக்கையில் அமர முற்பட்டபோது,  'டேய், அலோசியஸ் டேய்' என்று மைனர் செயின் போட்ட, கருத்த வட்ட முகம் கொண்ட ஒருவன் என்னை அழைத்தான், கடைசி இருக்கைக்கு முந்தின இருக்கையிலிருந்து.   யாரென்று தெரியாமல், அருகில் சென்றேன்.  கிட்டத்தில் பார்க்கும் போது தான் அவன் என்னோடு இளங்கலையில் படித்தவன், அர்ஜூன் (எ) அருண்பாண்டியன் என்று கண்டேன்.  கிட்டத்தட்ட ஐந்நாண்டுகளுக்குப் பின் சந்திக்கிறோம்.  இரவு முழுவதும் கதை பேசிக்கொண்டே சென்றோம். 

வெள்ளிக்கிழமைகளில் சாலை மற்றும் சுங்கச் சாவடிகளில் நெரிசல் அதிகமாக இருக்கும்.  இன்று அப்படி இல்லை.  எல்லையை அடைந்ததும், எல்லோரும் வெளியே எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள்.  நானும் தமிழன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டேன்.  எட்டிப் பார்த்தால், கர்நாடக எல்லையில் கர்நாடகப் பேருந்துகளும், தமிழ்நாட்டு எல்லையில் தமிழ்நாட்டுப் பேருந்துகளும் நின்றிருந்தன.  மக்கள் இரு எல்லைகளிலிருந்தும் நடந்து வந்து கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.  அப்போதே முடிவு செய்திருந்தேன்.  திரும்பி வரும்போது இப்படித்தான் வந்தாக வேண்டும் என்று.  இடையில் தேநீருக்காக பேருந்து நின்றது.  அப்போது கவனித்தேன், அங்கு நின்றிருந்த பேருந்துகள் எல்லாம் தமிழ்நாட்டுக்குள் கர்நாடகாவிலிருந்து வந்தவை.  ஆனால், ஒரே ஒரு பேருந்து மட்டுமே KA என்று இருந்தது.  மீதமுள்ள அத்தனை பேருந்துகளும் வேறு மாநிலத்தின் பெயர்ப்பலகைகளையே கொண்டிருந்தன, பாண்டிச்சேரி, கேரளா என்று.  நான் வந்த பேருந்து கேரளப் பதிவெண்.  CD என்று கூட ஒன்று பார்த்தேன்.  இது எந்த மாநிலம் என்று யாராவது தெரிந்தால் தெரியப்படுத்தவும். 

வீட்டற்குச் சென்று, ஞாயிறு மாலை சேலம் பேருந்த ஏற வந்திருந்தேன்.  பெங்களூரில் இருந்த என் அண்ணன் வீட்டிற்கு, என் சித்தி கோழிக்குழம்பு வைத்து என்னிடம் கொடுத்து விட்டிருந்தனர்.  அதையும் எடுத்துக் கொண்டு, சேலம் வந்தேன்.  நள்ளிரவு 12 மணிக்கும் நிறைய பேருந்துகள் ஓசூருக்கு ஓடிக் கொண்டிருந்தன.  பெங்களூர் பலகையிட்ட பேருந்துகளும் ஓசூர் வரைதான் செல்லும் என்று நடத்துநரால் அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.  அப்படி ஒரு பேருந்தில் ஏறி, அதிகாலை 3:30 மணியளவில் ஓசூர் வந்தடைந்தேன்.

என்னைப் போல, அங்கே கிட்டத்தட்ட 300 பேர் அங்கிருந்து எல்லையை அடைய பேருந்துக்காக காத்திருந்தனர்.  நானும் ஐக்கியமானேன்.  அங்கிருந்த டேக்ஸியில் 150 ரூபாய் கேட்டார்கள் தலை ஒன்றுக்கு, பெங்களூர் வரை.  கொள்ளை விலை.  நான் அமைதியாக நகர்ந்து வந்து கூட்டத்தோடு கூட்டமாக வந்து நின்று கொண்டேன்.  முதலில் இரு பேருந்துகள் வந்தன.  பிலாச்சுளையை மொய்க்கும் ஈக்கள் போல மொத்தப் பேரும் ஓடினர்.  நானும், ஜோடியாக வந்திருந்த இளைஞர்களும், இன்னும் சிலரும் மட்டும் ஓடாமல் காத்திருந்தோம்.  பின் இன்னும் ஒரு பேருந்து வந்ததும், கூட்டம் வற்றியிருந்தது.  அடுத்த பேருந்தில் நானும் ஏறி இடம் பிடித்து அமர்ந்துவிட்டேன்.  நடத்துநர் சீட்டுக் கேட்டு வந்து கொண்டிருந்தார்.  எவ்வளவு என்று விசாரித்ததில் 16 ரூபாய் என்று சொன்னார்.  சமர்த்தான பிள்ளையாக சில்லரை கொடுத்து சீட்டு வாங்கிக் கொண்டேன்.  எனக்குப் பின்னிருக்கையில் பெரியவர் ஒருவர் 'எட்டு ரூபாய் தானப்பா?' என்றார்.  'இல்லீங்கய்யா... 16 ரூபாய்... அதான் வாங்க எங்களுக்கு சட்டம்' என்றார், நடத்துநர்.  அவர் வழக்கமாக வந்து செல்பவர் போலிருக்கிறது.  'என்னதாய்யா... நடக்குது.. எட்டு ரூவா டிக்கெட்ட பதினாரு ரூவான்னு குடுக்குறாங்க... கொள்ள.. கொள்ள... எல்லா கொள்ள '  இன்னும் என்ன என்னவோ சொல்லி திட்டிக் கொண்டிருந்தார்.  நான் என் தலையைத் திருப்பாமல், என் மொத்த கவனமும் அவர் பேச்சையே கவனித்துக் கொண்டிருந்தேன்.  பிறகு தான் இன்னொன்றையும் கவனித்தேன்.  எங்களின் அருகில் இருந்த அத்தனை இளைஞர் கூட்டம் அப்படித்தான் இருந்தது.  தலையைத் திருப்பவில்லையே தவிர, எல்லோரின் கவனமும் அவர் பேச்சில் இருந்தது.  அது முகங்களில் தெரிந்தது.  இதுதான் இன்று பெருநகரில் பணிபுரியும் இளவயதினர் பெரும்பலோனோரின் எண்ணம்.  நான் கூட நடத்துநரிடம் இதைப் பற்றிப் பேசலாமா என்று நினைத்தேன்.  யாராவது தொடங்கினால், எல்லோரும் கூடுவர் என்ற நம்பிக்கை.  கடைசிவரை இப்படியே கற்பனையிலேயே நிறுத்தம் வந்துவிட்டது.


எல்லை வந்தது.  இறங்கினேன்.  இருநூறு முதல் முந்நூறு மீட்டர் தொலைவில் தான் கர்நாடகப் பேருந்துகள் நின்றிருந்தன.  இடையில் எல்லையாக குறிக்க, 'வரவேற்பு, நன்றி' சொற்கள் பொறித்த வளைவு.  பெயர் தான் வளைவு, செவ்வக வடிவில் இருக்கும்.  நான் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.  'எல்லையைக் கடக்கப் போகிறேன்' என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.  அப்படிச் சொல்லுவதே ஒரு மெல்லிய கிளர்ச்சியை உண்டாக்கியது.  எல்லையை மீறுவதுதான் எல்லாவற்றிலும் ஒரு பரபரப்பையும் ஒரு விதமான திகிலையும் அளிக்கக் கூடியது.  இரு எல்லைகளிலும் இரு மாநிலக் காவலர்களும் நின்றிருந்தனர்.  தூக்கம் அப்பிய, ஆர்வமற்ற, சலிப்பு நிரம்பிய முகங்கள் அவை.  மின் விளக்குகளால் அப்பகுதி முழுக்க ஒளி படர்ந்திருந்தது.  இதற்கு முன் நான் இப்பகுதியைக் கடக்கும் போது எனக்கு எதுவும் தோன்றியதில்லை.  இப்போது இந்த காவேரிப் பிரச்சினையில் இப்படியான பதட்டம் உருவான அல்லது உருவாக்கப்பட்ட பின் இந்தச் சூழலில் நடப்பதை எண்ணி நானே சாகசம் செய்வதைப் போன்ற கற்பிதம் செய்து கொண்டேன்.

நடக்கும் போது, ஏதாவது பிரச்சினை வந்தால் ஓடி ஒளிந்து கொள்ளலாம்.  ஒருநாளுக்குத் தேவையான உணவாக, கையில் இருக்கும் கோழிக்கறியைத் தின்று கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன்.  அங்கு நடந்த ஒரு உரையாடலைக் கவனித்தேன்.  இரு இளைஞர்களை டிக்கெட் பரிசோதகர் திட்டிக் கொண்டிருந்தார்.  அவர்கள் ஏதும் பேசவில்லை.  'இத்தன பேரு பேசாம டிக்கெட் வாங்கிட்டு போறேங்க.  ஒங்களுக்கு என்ன சார்?  பதினாறு ரூவானா பதினாறு ரூவாதான்.  அவர் போடுறது தான் டிக்கெட்.  நாங்க போடுறதுதான் ஃபைன்.  முன்னூரு ரூவா எடுங்க' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அந்த இரு பையன்களும் டிக்கெட் எடுக்காமல் வந்திருக்கலாம்.  அல்லது  ஏன் இவ்வளவு விலை என்று நடத்துநரிடம் வினவியிருக்கலாம், அதனால் நடத்துநர் சண்டை பிடித்துக் கொண்டே கடைசி நிறுத்தம் வரை வந்திருக்கலாம்.  எது எப்படியானாலும் கொஞ்சம் பொறுப்போடு அவர் பேசியிருக்கலாம் என்று தோன்றியது.  சென்னையில் இரவு நேரப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.  அதுபோலத் தான் இதுவும் இருந்திருக்க வேண்டும்.  ஆனால் அவர் அதை தெளிவாகச் சொல்லியிருக்கலாம். 

தமிழ்நாட்டு எல்லைக்குள் கர்நாடக தனியார் பேருந்துகள் பெங்களூரு செல்ல, சாமிபாடல் உரக்க ஒலிக்க நின்றிருந்தன.  எல்லாப் பேருந்துகளும் படியில் பிதுங்கும் அளவுக்கு நிறைந்திருந்தன.  கடைசிப் பேருந்தில் நிற்பதற்கு இடம் இருந்தது.  ஓடி ஏறிக்கொண்டேன்.  விலை என்ன என்று கேட்டவில்லை என்பது மேலே ஏறிய பின் தான் உறைத்தது.  வேறு வழியுமில்லை.  இன்னும் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகம் தான் ஆகும்.  நான் ஏறியது தான் அப்போது கடைசிப் பேருந்து, இதைவிட்டால் அடுத்த பேருந்து எப்போதென்று தெரியாது.  மடிவாலாவுக்கு எவ்வளவு என்று கேட்டபோது, அவன் 50 ரூபாய் என்றான்.  மெல்லிய ஆச்சரியத்துடன் காசு கொடுத்தேன்.  பின் இறங்கும் வரை, அரசுப் பேருந்தில் பணிபுரிபவர் பேசியதையும், தனியார் பேருந்துக் காரன் பேசியதையும் நினைத்துக் கொண்டே வந்து சேர்ந்தேன்.

Monday, 3 October 2016

சிறுகதை : ஏன் அழுதேன்?

திருவான்மியூர் கடற்கரையில், 'ஜூலி, நில்லு', இப்படி நான் கத்திக் கொண்டு ஓடவும்,  ஜூலிக்கும் குஷி தாங்கமுடியவில்லை.  ஒரே ஓட்டம் தான். என்னிடம் சிக்காமல் ஓடுவது எப்படி என ஜூலிக்கு நன்கு தெரியும்.  ஓடி நான் பிடிக்கும் போது எப்படியும் மண்ணில் புரண்டுவிட வேண்டியிருக்கும். கடற்கரை மணல் எவ்வளவு நெருடும் என டிஷர்ட்டுக்குள்ளும் 3/4-க்குள்ளும் சென்ற பின் தான் தெரியும்.  ஆனாலும் நாங்கள் இருவரும் மண்ணில் புரண்டு விடாமல் விளையாடவே முடியவில்லை.  ஜூலிக்கும் என் மேல் மணலள்ளிப் போடுவதில் அலாதிப் ப்ரியம்.  மண்ணள்ளிப் போட்டபின், ஜூலியின் முகத்தில் அதை என்னால் பார்க்க முடியும்.  வீட்டுக்குப் போனதும் இருவருக்கம் என்னுடைய குளியலறையில் ஒன்றாகத்தான் குளியல்.  மாறி மாறி இருவரும் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்துக் கொள்வோம்.  இல்லை இல்லை.  நான் ஜூலி மேல் தெளிப்பேன்.  ஜூலி தன் முதுகின் மேல் உள்ள நீரை உடலைக் குலுக்கி, என்மேல் இறைப்பான். அவன் அல்ஷேஷன் வகை.  அதனால் குலுக்கலில் தண்ணீர் நிறையவே இறைக்கப்படும். தினமும் காலை நாங்கள் இருவரும் அங்கு போவது வழக்கம்.  அதானாலேயே சில நாட்கள் அலுவலகத்திற்குத் தாமதமாகச் செல்ல நேர்ந்ததும் உண்டு.

என்னால் தான் அவனுக்கு என் பெற்றோர் அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்.
பிரசவம் தாமதமான படியால், நான் பெண்ணாகத்தான் இருப்பேன் என முடிவுகட்டி, என் அம்மாவும் அப்பாவும் எனக்கு சூட்டத் தேர்ந்தெடுத்த பெயர்தான் 'ஜீலி'.  இருவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக,  பையன் பிறந்தான், அது நான்.  பையனுக்கு பெயர் என்ன வைக்கலாம் என்றெல்லாம் அவர்கள் யோசித்திருக்கவில்லை.  ஆதலால், தன் அப்பாவின் பெயரை வைக்கலாம் என்று என் அப்பா சொல்லியிருக்கிறார்.  என் அம்மா, தன் அப்பாவின் பெயரை வைக்கலாம் என அடம் பிடிக்க, இருவரின் பெயரையும் சேர்த்து, எனக்கு வைத்து, பீட்டர் சவரிமுத்து என் அழைக்கப்படலானேன்.  அப்பா வீட்டில் இருக்கும் போது சவரிமுத்து என்று என் அம்மாவின் அப்பாவுடைய பெயரைச் சொல்லித் தான் அம்மா அழைப்பாள்.  அப்பா மெல்லிய முறைப்பைக் காட்டுவார்.  அதில் ஒரு மெல்லிய சந்தோஷம் என் அம்மாவுக்கு.  ஆனால் யாராவது என்னை சவரிமுத்து எனக் கூப்பிட்டால், 'பீட்டர்னு கூப்டுங்கங்க, அதான நல்லா இருக்கு.  நாங்க அப்டித்தான் கூப்டுறது' என்பாள்.  சவரிமுத்து என்பது தன் தகப்பன் பெயரானாலும், மாடர்னாக இல்லை என்ற மனக்குறையை அப்படி வெளிப்படுத்துவாள்.

பெசண்ட் நகர் கடற்ரகரையும், திருவான்மியூர் கடற்கரையும் எனக்கு மிகவும் பிடித்த கடற்கரைகள்.  நான் மனம் செயலற்று இருக்கும் நேரங்களில் எல்லாம் அங்குதான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். கட்டாயம் ஜூலியும் உடன் இருப்பான்.  சூரியன், நிலா எதன் ஒளியின் மீதும் கடற்பரப்பைக் காண்பதில் எனக்கு உவப்பில்லை.  கரிய இருட்டில் உள்ள அந்த வெளிச்சத்தில் பார்ப்பதுதான் பிடிக்கும்.  பெரும் கோப்பையில் நிரப்பப்பட்ட மதுவைப் போன்ற தோற்றத்தைத் தரும்.  குடிப்பதற்கு முன் தட்டிக் கொள்ளும், கோப்பையைப் போல அலை நுரை தள்ளி கரையில் முட்டிச் செல்லும்.  இங்கு சுமியுடன் நான் வரும் போதெல்லாம், நான் காதலர்களை ஓரக்கண்ணில் பார்த்து, மனதுக்குள் சிரிப்பதைக் கண்டு என்னையே பார்த்துக் கொண்டிருப்பாள்.  'போடி, கருப்பி' என்பேன்.  உடனே கோபித்துக் கொள்வாள்.  எனக்குக் கருமைதான் கவர்ச்சி.  அதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளமாட்டாள்.  அப்படியான நாள் இன்று.

'அது எப்டிடா கருப்பு கலரு பிடிச்சிருக்கு? பொய் சொல்ற'

'இல்லடி, அது அப்படித்தான். நா பாத்த எல்லா அழகான பொண்ணுங்க எல்லா கருப்பாத்தான் இருந்தாங்க'

மற்ற நாட்களில், இந்நேரம் அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு, தன்னை என்மேல் உரசிக் கொண்டிருந்திருப்பாள்.  அந்த வெப்ப மூச்சுக் காற்றை, மூன்று நான்கு முறையாவது நான் சுவாசித்திருந்திருப்பேன்.   நான் சிகிரெட் இப்போதுதான் குடித்து வந்திருப்பதைக் கண்டுபிடித்து, செல்லக் கடி ஒன்றை என் தோளில் பதிந்திருப்பாள்.  இது எதுவும் நடக்காததாலும், நடப்பதற்கான முகாந்திரம் தெரியாததாலும்,  என்னவோ தவறாக இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.

'உங்க அம்மா ரொம்ப ஃபேர் தானடா.  அப்ப அவுங்க அழகா இல்லையா'

இப்படியான கேள்வியை அவளைத் தவிர யாரும் கேட்க முடியாது என்று தோன்றும்.  

'அவுங்க அழகுதான்டி.  ஆனா எனக்கு கருப்புதான் ரொம்ப பிடிக்கும்'

'பொய் சொல்ற.  ஜாக்கி ஷோரூம்-க்கு போனப்ப, நீ அங்கிருந்த வடஇந்தியப் பொண்ண நீ பாத்த.  நா உன் மோதிர விரல்ல மோதிரத்த சுத்திக்கிட்டிருந்தேன்.  வருடிக்கிட்டும் இருந்தேன்.  நீ கண்டுக்கவே இல்ல'

கிடிக்குப்பிடி போட்டுவிட்டாள்.  ஆமாம், நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.  நானே மறந்துவிட்டேன்.  அவள் துல்லியமாக ஞாபகம் வைத்திருந்தாள்.  

'சிகப்பா இருந்தா சட்டுனு பார்க்கத் தோணும்டி ஆனா சலிச்சிரும்.'

'ஆனா நீ அன்னக்கி நா உன்னத் தொட்டுட்டு இருக்கது கூடத் தெரியாம அவளயே பாத்துக்கிட்டிருந்த.  அவளும் அவ சப்ப மூக்கும்.  லோ நெக் வேற'

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.  என்ன சொன்னாலும் ஒரு பிடி பிடித்து விடுவாள் என்று எனக்குத் தெரியும்.  நான் அவள் மார்பகத்தை என் கவனம் தவறிப் பார்த்திருந்தேன்.  அதைத் சொல்லிக் காட்ட வருகிறாள்.  நான் இல்லை என்று சொன்னால், குதறி விடுவாள்.  ஆமாம் என்று சொன்னால், 'சரி நான் போறேன்' என்று நடையைக் கட்டிவிடுவாள்.  அதுவும் இல்லாமல், நான் கடையிலிருந்து கிளம்பும் வரை வேறு விற்பனைப் பெண்கள் வரவிடாமல் அவளே என்னிடம் பேசிக் கொண்டேயிருந்தாள்.  நானும் வழிந்திருந்தேன்.  வெளியே வரும்போது சுமி என் தொடையில் கிள்ளினாள்.  செல்லமாகத்தான் கிள்ளினாள் என்று நினைத்துக் கொண்டேன்.  இப்போதுதான் ஏன் என்று புரிகிறது.  கடையிலிருந்து வந்தபின், ஓரிரு நாட்களில் என் வாட்ஸ்-அப்பிற்கு ஒரு புதிய எண்ணிலிருந்து செய்தி வந்திருந்தது.  யாரென்று அந்த எண்ணின் புரொபைல்-பிக்சரை பார்த்தும் தெரிந்துபோனது, அந்த கடையிருந்த பெண்.  சிறிதுநேரம் ஏதேதோ கேட்டாள்.  பின் சந்திக்கலாமா என்று கேட்டாள்.  நானும் சரி என்று சொல்லியிருந்தேன்.  அந்த தகவல்களை என் அலைபேசியிருந்து அழிக்காமல் வைத்திருந்தேன், அதுவே என் வழக்கமும் கூட.  சுமி என் அலைபேசியை எடுத்துப் பார்ப்பாள் அது அவள் வழக்கமும் கூட.  அதைப் பார்த்திருப்பாள் என்று புரிந்து கொண்டேன்.

'சிகப்பும் அழகுதான்டி' என்றேன், பேச்சை மாற்றும் விதமாக.

'அப்போ நான் அழகா இல்ல தான'

ஆண்டவா, எப்படியாவது இந்த பேச்சை விட்டு காப்பாத்து என்று நினைத்துக் கொண்டு அவளைப் பார்க்காமல், நேராக அமர்ந்திருந்தேன்.  என் அகக்கண்கள் அனைத்தும் அவளது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தன.  அவளும் அப்படித்தான் அமர்ந்திருந்தாள்.    கனமான மௌனம் தான் நம்மை முட்டாள் தனமாக பேச வைக்கும்.

'சரிடீ, அப்டியே வச்சுக்க.'

சுமி என்னைத் திரும்பிப் பார்க்கவேயில்லை.  லேசாகச் சிரித்தாள்.  நான் எரிச்சலுற்றேன்.  என்னால் தான் இந்த பிரச்சினை என்று நான் நினைக்க நினைக்க, வெறுப்பு வந்தது.  அதை எப்படிக் கையாள்தவது என்ற புரிதல் இன்றி திடீரென கடும் கோபத்தில் அவளைச் சீண்ட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்.  

'எதாவது பேசுடி', அவள் நான் சிகிரெட் பிடித்திருப்பதைக் கண்டுபிடித்து கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

'என்னடா, அதான் சப்ப மூக்கிய பாக்கப் போறியே'

'சும்மாதான்டி'

'அத ஏன் என்ட்ட சொல்லல'

இதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கிறாள்.  நானும் என்னதான் சொல்லுவது.  அவள் நண்பன் எவனையாவது இழுத்துப் பேசி, சப்பைக் கட்டுக் கட்டலாமா என்று நினைத்தேன். அது சூழலை இன்னும் மோசமாக்கும்.  வீம்புக்கு பேச விரும்பவில்லை.  ஏற்கனவே இதுபோல ஒருமுறை அவள் தோழன் ரஞ்சித்தைப் பற்றிப் பேசி, அவள் என்னை அறைந்ததோடு மட்டும் அல்லாமல், சாப்பிடாமலும் இரண்டு நாள் திரிந்து என்னைப் பைத்தியம் பிடிக்க வைத்துவிட்டாள்.

'மொத மொத ஒரு பொண்ணு எனக்கு பிங் பண்ணுனா அதனால தான்டி ரிப்ளை பண்ணுனேன்'

'அத என்ட்ட சொல்ல வேண்டாம்னு ஏன் வச்சிருந்த.  அவ மெசேஜ் பண்ணி மூணுநாள் ஆச்சு.  டெய்லி என்னப் பாக்குறீல.  தப்பா எதும் யோசிக்கலன்னா, சொல்ல ஏன் தயங்குன?'

இதற்கான பதிலாக எந்தப் பையனும் எதைச் சொல்லியும் தாம் விரும்புகிற பெண்ணைச் சமாதானம் செய்யமுடியாது.  சபலம் தான் என்பது எனக்கும் தெரியும்.  அவளும் அறிவாள்.  அதை நானும் அறிவேன்.  ஆனால் பெண்கள் தாங்கள் விரும்புவது பொய் வடிவத்திலாவது அவர்களை வந்து அடைய வேண்டும் என்று விரும்புவார்கள்.  அது உண்மையில்லை என்று அவர்களின் ஆழ்மனதிற்குத் தெரிந்தாலும், அதை மழுப்பும் அளவுக்கான பொய்யை எதிர்பார்ப்பது இயல்பு.  'அனல்காற்று' என்ற நாவலில் வந்த, பெண் கதாப்பாத்திரங்களின் மெய் வடிவின் அருகில் அமர்ந்து, அதை உணர்வது வெம்மை பொன்ற உணர்வைக் கொடுத்தது.

நான் எதுவும் சொல்லவில்லை.  அவள் என் பொய்க்காகக் காத்திருந்து, நடவாது என்று புரிந்து, சொல்லிக் கொள்ளாமல் விடை பெற்றாள்.  நான் கூடவே ஓடிச் சென்று, எப்படியாவது சமாதானம் செய்துவிட நினைத்தேன்.  ஆனால் செய்யவில்லை.  என் பக்கத்து வீடுதான் அவள் வீடும்.  பைக்கில் வரும் போது, அவள் நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்து, அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன்.  உருண்டையான பளபளக்கும் கருப்புக் கண்ணம் எப்போதும் போல பளபளத்துக் கொண்டிருந்தது.  மிதந்து கொண்டிருக்கும் கண்கள், துளிர்க்கத் தயாராய் இருந்த கண்ணிரினால் மிளிரிக் கொண்டிருந்தது.  ஜீன்ஸும் மெல்லிய வெள்ளை டாப்ஸும் அணிந்திருந்தாள்.  தோளில் புரளும் குட்டைக் கூந்தலும், சோடியம் விளக்கொளியில் நெருப்புக் 'கங்'கைப் போல தோற்றம் தரும் கருப்பு முகமும் முன் கழுத்துப் பள்ளமும்,  வெண்ணிற டாப்ஸில் அசைந்து கொண்டிருக்கும் அவள் மார்புகளும் மற்ற நாளாய் இருந்திருந்தால், என்னை கிளர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கும்.  அந்த வேகத்தில் அவளை எப்படியாவது, வெடித்துக் கிளம்பும் உற்சாகத்துடன் இறுக்கி அணைத்துக் கொள்ளத் துடித்திருப்பேன்.   இப்போது, முற்றிலும் காமம் வறண்டு போன பிண்டம் போல அவளைப் பார்த்துக் கொண்டே சென்றேன்.

வீட்டிற்குச் சென்று குளித்து, உடைமாற்றி என் அறைக்கு வந்தேன்.  ஜூலி என் அருகிலேயே வரவில்லை.  நான் பைக்கை நிறுத்துவதைப் பொறுத்து என் மனநிலை எப்படி என்று கணிப்பதில் அவன் கில்லாடி.  வழக்கமாக நான் வந்ததும் ஓடி வந்து, முன்னிரண்டு கால்களையும் என்மேல் இட்டு குதூகலித்துக் கொண்டிருப்பான்.

'என்னடா ஒருமாதிரி இருக்க?' என்று என் அம்மா கத்தினாள்.  அவள் பேசினாலேயே உச்ச குரலில் தான் பேசுவாள்.  கண்டுகொள்ளவில்லை.  நான் என்ன நினைத்தாலும் என் முகத்தைப் பார்த்தே கண்டுபிடித்து விடுகிறாள்.  ஆனாலும், அதை என் வாயால் கேட்பதில் அவளுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.  அம்மா மட்டுமா?  கிட்டத்தட்ட பெண்களின் மனமே அப்படி ஒரு பாதையில் இயங்கத்தான் இயற்கையால் படைக்கப்பட்டிருக்குமோ என்னவோ?  'நம்ப பேசுறதக் கேக்கத் தான் ஒரு நாதியில்ல' எனத் தானாகப் புலம்புவது போல் எனக்குக் கேட்கும் படி சமையலறை வாசல் வரை வந்து என் அறையின் வாசலைப் பார்த்து சொல்லிவிட்டு, தன் வேலைக்குள் தன்னை அமிழ்த்திக் கொண்டாள்.

சுமியை எனக்கு இருபத்திரண்டு ஆண்டுகளாகத் தெரியும், அவளுக்கு என்னை இருபத்திமூன்று ஆண்டுகள் மூன்று மாதங்களாகவும் தெரியும்.  அண்டை வீடு.  பெற்றோர்களுக்கும் பல வருடங்களாக ஒருவருக்கொருவர் தெரியும்.  சென்னைதான் என் ஊர் ஆனாலும் திருச்சியில் என்னைப் படிக்க வைத்தனர்.  இளம் அறிவியல், கணிப்பொறியியல் படிப்பை வளனார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.  அப்போது அவளைப் பார்க்க இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் வாய்ப்பு கிடைக்கும்,  அதாவது விடுதியிலிருந்து விடுப்பு கிடைக்கும்.  தனியாகச் சந்தித்து பார்க்க வேண்டும் என நான் எண்ணிக் கொண்டேயிருப்பேன்.  அவள் தங்கை பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.  அவளும் எந்நேரமும் அவளோடே ஒட்டிக் கொண்டிருப்பாள்.   மென்புன்னகையோடும் சாதாரண பேச்சோடும் எங்கள் சந்திப்புகளை வைத்துக் கொள்வது வழக்கம்.  விடுதியில் அவள் ஞாபகம் வரும் போதெல்லாம்  முதல்முறை இருவரும் ஒருவர் ஒருவரின் எப்படி எப்போது விருப்பத்தை புரிந்து கொண்டோம் என்று நினைத்துப் பார்த்து பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பேன்.

சுமி என் வீட்டில் சுற்றிக் கொண்டிருப்பதும், நான் அவள் வீட்டில் சுற்றிக் கொண்டிருப்பதும் வழக்கம் தான்.  அவளிடம் பேசிப் பேசித்தான் நான் பேச்சையே கற்றுக் கொண்டேன் என்று என் அம்மா சொல்லிக் கொண்டிருப்பாள்.  நான் பிறந்தபோது அவள் நடக்கப் பழகியிருந்திருப்பாள்.  அவள் பார்க்கக் கிடைத்த முதல் குட்டிப் குழந்தை நான்தான், நான் பார்க்கக் கிடைத்த முதல் விளையாட்டுக் கூட்டாளியும் அவள்தான்.  என்னை தொட்டுத் தொட்டு பார்த்துக் கொண்டிருப்பாளாம்.  'என் பிள்ள கலர உரசிப் பாக்குறியா?  அவன் தங்கம்டி' என்று என் அம்மா சொல்லிக் கொண்டிருப்பாளாம்.  அவளுக்கு அப்போது என்ன புரிந்ததோ?  வெட்கப்பட்டு சிரித்து என் அம்மாவுக்கு முத்தமிட்டு,  ஓடுவாளாம், ஓடும் போது எனக்கும் ஒன்று உண்டாம்.  அவள் இப்போது இருப்பதை விட அதிக கருப்பாக இருந்திருக்கிறாள் குழந்தையில்.  நாளாக நாளாக இளமையின் பளபளப்போடு, மிளிரும் கருப்பாக மாறியிருக்கிறாள்.  நான் மாநிறம்.  ஒப்பீட்டளவில் நான் நல்ல நிறம் போல தோற்றம் கொடுக்கும்.

என் அம்மா அவளைக் கிண்டல் அடிப்பதை விட, அவள் அம்மாதான் அவளை அதிகம் கிண்டல் அடிப்பாள்.  இருவரும் சில நேரம் தோழிகள் போல் தோற்றம் தருவார்கள்.  அதுபோன்ற நேரங்களில் நான் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன்.  வயதில் மூத்த பெண்களுக்குள் இருக்கும் பதின்வயதுக் குறும்பு கொப்பளிக்கும்.  பதின்ம வயதில் கூட அப்படி கொக்கரிப்பான சிரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருப்பார்களா என்று கூட எனக்கு சந்தேகம் வரும்.  அப்படி அவளது அம்மா பேசிக் கொண்டிருக்கும் போது, அடிக்கடி அவளைச் சீண்டுவதற்கென்றே ஒரு நிகழ்வை அடிக்கடி சொல்லிக் காட்டுவாள்.  அவளுக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும் போது ஒருமுறை, அவள் எப்படியோ கீழே விழுந்து, வயிற்றின் வலது பக்கத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது.  அரை அங்குலத்திற்கும் குறைவான அகலம் இருந்த காயம், காயம் என்று கூடச் சொல்ல முடியாதாம், மெல்லிய சிராய்ப்பு.  ஆனால் ரத்தம் கசிய ஆரம்பித்திருந்திருக்கிறது.  அழவுமில்லாமல், ஆனால் மெல்லிய சிணுங்கலோடு குண்டுக் கீழுதடு பிதுங்க, என் வீட்டில் அமர்ந்திருந்திருக்கிறாள்.  என் அம்மா ஏதோ வேலையாக அடுப்படியில் இருந்து கொண்டே, சரியாக கவனிக்காமல், 'என்னடி வாயாடி ஒண்ணும் பேசாம வார?' என்றிருக்கிறாள்.  சுமி வெளியே கேட்கா வண்ணம் தேம்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.  வழக்கமாக,  சுமி வந்ததும், என்னை ஒழுங்காகத் தூக்கமுடியாவிட்டாலும், தூக்குவது போல் ஒரு பாவலாவிற்காக ஏதாவது செய்து பின் என்னை முத்தமிடுவது வழக்கம்.  அன்று அவள் காயம் பட்டதால், அமைதியாக அமர்ந்திருந்தாள்.  நானும் அவள் இப்போது வருவாள் அப்போது வருவாள் என்று பார்த்து, அவள் நகராமல் அமர்ந்திருந்தைப் பார்த்து, நானாவே சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று கால்களைத் தேய்த்து தேய்த்து, ரொம்பவும் பிகு பண்ணிக் கொண்டே அவளை நோக்கிச் சென்றிருந்திருக்கிறேன்.  அவள் அப்போதும் என்னைக் கொண்டு கொள்ளவில்லை.  ஒரு ஏக்கம் என்னைச் சூழ்ந்தது.  அன்புக்கான ஏக்கம் இருந்து, அவர்கள் கண்டு கொள்ளாதபோது, இது வெறும் ஏக்கமாகவே இருந்த பருவம் குழந்தைப் பருவம்.  அதன்பின்னான பருவங்களில், அது கொஞ்சநேரமே தாக்குப் பிடிக்கும்.  பின் அது நம் அகங்காரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கொள்ளப்பட்டு, வன்மமாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்கும்.  அப்படி மாறினால் மட்டும் நாம் வளர்ந்துவிட்டோம் என்றும் ஏற்றுக்கொள்ளப்படும்.  அப்போது அவளின் வவது வயிற்றுப் பகுதியைப் பார்த்தேன்.  என்ன தோன்றியது என்று தெரியவில்லை. எனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று நினைவில்லை.  காயம்பட்டால் எச்சில் வைக்க வேண்டும் என்று தோன்றி, எச்சிலின் ஊற்றுக் கண்ணை அவளது காயத்தில் வைத்தேன்.  இதுவரை சிணுங்கிக் கொண்டிருந்தவள்,  பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.  ஐந்து வயதுக்காரிக்கு என்ன தோன்றியது அப்படி அழுதாள்.  நானும் அவளுக்காக அழுதேன்.  என் அம்மாவும் அவள் அம்மாவும் ஒருசேர பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.   இருவரையும் சோதனை செய்தனர்.  அவளுக்கு காயத்தைக் கண்டுபிடித்தாயிற்று,  நான் எதற்கு அழுகிறேன் என்று தெரியாமல் சிறிது தவித்தனர்.  பின் சுமி, 'அவன் சும்மா அழுறான், என் புண்ணுல முத்தம் குடுத்துட்டான், பாப்பா அதுக்குத்தான் அழுது' என்று அவள் அழுத காரணத்தைச் சொன்னாள்.  நான் என்ன காரணத்தைச் சொல்வேன்.  இருவர் அம்மாக்களும் சிரித்து, அவளுக்கு மருந்திட்டனர்.  அப்போதும் நான் என் அம்மாவின் இடுப்பில் இருந்தேன்.  சுமி என்னைப் பார்க்கவேயில்லை.  அவள் அம்மா அவளின் இச்செய்கையைக் கண்டுபிடித்து, ஓரக்கண் காட்டிச் சிரிக்கிறாள்.  என் அம்மா கமுக்கமான புன்னகையில் பதிலளிக்கிறாள்.  அப்போது எனக்கு ஏன் சிரித்துக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை.  இப்போது புரிகிறது.


அதன் அடுத்த இரண்டுநாளில், மீண்டும் சகஜமானோம்.  பின் வளர்ந்து பெரிய பிள்ளைகள் ஆனபோதும் கூட அவள் அவ்விஷயத்தில் மட்டும் அப்படியே இருந்தாள்.  ஆனாலும் அவள் அம்மா அவளைச் சீண்ட எண்ணி எதையாவது பேசி, அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தாளெனில், இதைப் பற்றிப் பேசுவாள்.  உடனே சீறிக்கொண்டு கோபம் வரும். வெறும் முறைப்பைக் காட்டுவாள்.  அவள் கோபம் கொண்டால், வெளியே காட்டமாட்டாள்.  அவள் வலது காலின் பெருவிரலில் தரையை நிமிண்டிக் கொண்டிருப்பாள்.  அப்போதும் அப்படி நிமிண்டி நிமிண்டி, காலில் நகக் கண்ணில் ரத்தம் வந்துகொண்டிருந்தது.  அதைப்பார்த்ததும் நான் மருண்டு போயிருந்தேன்.  நான் அவ்விடத்தை விட்டுச் செல்ல எத்தனித்து, விரைந்து நான் வெளியேறும் முன் அவள் வெளியேறினாள்.  அவள் அம்மா அவளுக்கு ரத்தம் வந்ததைப் பார்க்கவில்லை.  அவள் அம்மா உள்ளே, என் அம்மாவுடம் பெரிய சத்தத்துடன் சிரித்துக் கொண்டிருந்தாள்.  அவள் மேல் எனக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.  மாலை வீட்டுக்குப் போனதும், என் அம்மாவிடம், 'சுமி அத்த ஏம்மா, இப்டி அவள இவ்ளோ வெறுப்பேத்துறாங்க' என்றதற்கு, 'விடுடா, அவள்ளாம் அம்மா பொண்ணுமாரியா இருக்காங்க.  நல்லா பள்ளீயோடத்துல சோடிபோட்டு சுத்துற ஆளுகளாட்டம்.  நல்லாத்தான இருக்கு. அப்புறம் என்ன?' என்றாள்.  என் அம்மாவுக்கு எவ்வளவுநாள் எந்த ஊரில் இருந்தாலும், திண்டுக்கலை ஒட்டிய கும்மம்பட்டியின் பேச்சை மாற்றவே முடியாது.  அப்படித்தான் சுமியும் சென்னையின் உடையையும் வாசனையையும் தன்னகத்தே கொண்டிருந்தாள்.   அம்மா சொல்லிவிட்டு, அவள்பாட்டுக்கு அவள் வேலையைப் பார்க்கப் போய்விட்டாள்.

சுமி அதன் பின் இரண்டு நாள் என் வீட்டுப் பக்கம் வரமாட்டாள்.  வெட்கமாம்.  பின் மிகச் சாதாரணமாய், 'என்னடா ஆளயே பாக்க முடில' என்றபடி வீடுட்புகுவாள்.  நான் வெறுமனே சிரித்து வைப்பேன்.  பள்ளியில் நடந்தது, அது, இது என்று அளந்து கொண்டே இருப்பாள்.  அவள் பூப்பெய்தியபின், இடைவெளி விழும் என்று எதிர்பார்த்தேன்.  இல்லை. அவள் எப்போதும் போலவே இருந்தாள்.  பள்ளியில் நான் எந்நேரமும் பெண்களைப் பற்றியே சிந்தித்தும் நண்பர்களுடன் பேசியும் சிரித்திருந்தேன்.  அப்படியான நேரங்களில் ஒருபோதும் சுமி என் நினைவில் இருந்ததேயில்லை என்பதை இப்போது நினைத்து வியக்கிறேன்.  நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது, அவள் கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.  வழக்கம்போல், ஒருநாள் அவள் அம்மா அவளைக் கிண்டல் செய்கிறேன் என்று அந்த பழைய நிகழ்வை, எந்த சுவாரசியமும் இல்லாத வண்ணம் சொன்னாள்.  அவளுக்கு மட்டும் ஒரே விஷயத்தை எத்தனை முறை சொன்னாலும், முதல்முறை கொண்ட அதே உணர்வை வெளிப்படுத்திக் கொண்டு இருப்பாள்.  என் அம்மாவும் சேர்ந்து கொள்வாள்.   அப்போது நான் என்ன செய்வது என்று தெரியாமல், தலையைக் கீழே குவித்த வண்ணம், அறிவியல் செய்முறைக்கான படத்தை வரைந்து கொண்டிருந்தேன்.  என் கண்கள் ஏட்டையும், என் மீதிப் புலன்கள் மொத்தமும் உச்சகட்ட விழிப்போடு சுமியைக் கவனித்துக் கொண்டிருந்தன.  மெல்ல என் பார்வை அவள் காலைத் தேடிக் கண்டபோது, அது தரையை நிமிண்டிக் கொண்டிருக்கவில்லை என்று கண்டேன்.  பின் என் வேலைக்குள் மூழ்குவது போல திரும்பிக்கொண்டேன்.  என் பின்னால் யாரோ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது.  அது கடித்துத் துப்பிய நகத்தின் நுனியில் வருடுவதைப் போல இருந்தது.  நான் திரும்பிய போது, சுமி என்னை தன் குமிழ் விழிகளால், பனிக்கட்டியால் செய்த ஊசியில் என் முதுகுத்தண்டில் குத்துவது போல், பார்த்துக் கொண்டிருந்தாள்.   உள்ளுக்குள் நான் ஒரே நேரத்தில், சுருண்டதைப் போலும், அளவு தெரியாமல் உண்டுவிட்ட குழந்தைபோலும் செய்வதறியாது அமர்ந்திருந்தேன்.  மெல்லிய நகை ஒன்றை உதிர்த்தாள், அது நான் பார்த்திராத சுமி.  மெல்லிய வெட்கமும், செல்லக் கோபமும் கொண்ட பார்வை.  அவள் புன்னகைப்பதை நிறுத்திவிட்டாள், ஆனாலும் எனக்கு புன்னகைப்பதைப் போலவே தோன்றியது.  கன்னம் சிவப்பதாகக் கூடத்தோன்றியது.  அவள் அம்மா சிரிப்பின்ஊடே இவளைப் பார்க்க, என்ன நடக்கிறதென்று கண்டுவிட்டாள்.  பெண்களுக்கேயுள்ள நுண்ணுணர்வு அது.  சுமியும் அதைப் பார்த்திருந்தாள்.  அவள் அம்மா கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துவிட்டு, ஏதோ வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு, கிளம்பினாள்.  அதன்பின் அவள் ஒருபோதும் இந்தச் சம்பவத்தைச் சொல்லி அவளை வம்புக்கிழுப்பத்தில்லை.  வீட்டுக்குச் சென்றபின், 'சுமி, இங்கவாடி' என்று கத்தி, இவளையும் அங்கிருந்தபடி இழுத்துக் கொண்டாள்.


அதன்பின்னான ஒருவாரம் அவளைச் சந்திக்கும்படி அமையாமல் பார்த்துக் கொண்டேன்.    மீதிநாட்களில் எப்படியோ தப்பிவிட்டேன்.  ஏனெனில்,  என்னைப் பெரும் குழப்பத்திலாழ்த்தும் வண்ணம் ஒரு புன்னகையைச் சிந்தியிருந்தாள்.  எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்ததுமாறு அவள் தோன்றியதே இல்லை.  இப்போது திடீரென அவளின் அந்த சிரிப்பாலும், மென்னசைவாலும் சலனப்படுகிறேன் என்றால், நானும் உள்ளூர அதை நினைத்திருந்தேனா?  அப்படி நினைக்கவில்லை என்றால், இப்போது ஈர்ப்பு உண்டானது போல நினைத்தால் அது தவறல்லவே.  இல்லை, அப்படி நினைத்திருப்பேனாயின், அது ஏன் வெளியில் தெரியவேயில்லை?  அல்லது தெரியவில்லை என்று நானே என்னை ஏமாற்றிக் கொண்டேனா?  அவளின் அசைவுகள் ஒவ்வொன்றும் துல்லியமாக எனக்கு நினைவில் இருப்பதன் காரணம் என்ன?  நான் ஏதோ பெரும் தவறிழைத்ததாகவே கற்பனை செய்து கொண்டிருந்தேன்.  மாலைவேளையில், குப்பையைப் கொட்ட என் அம்மாவுடன் சண்டையிட்டு, இறுதியில் நானே கொட்ட வேண்டி, குப்பைக் கூடையுடன் வெளியே வரும்போது, சுமி என் வீட்டினுள் வந்து கொண்டிருந்தாள்.  அவள் என்னைப் பார்க்கிறாள்.  இடது புருவம் மட்டும் 'என்ன?' அல்லது 'எப்டி?' அல்லது 'எங்கே?' என்று கேட்கிறது.  புடைத்த கன்னங்களும் கண்களும் ஒன்றும் சொல்லவில்லை.  நான் கண்ணைக் கீழே போட்டு விட்டு வெளியே போய்விட்டேன்.

இரவு, மொபைலில் 'ஹாய்' என்று மட்டும் அனுப்பினேன்.

'என்னடா' என்றாள்.

 அதற்கு நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தாள் என்று தெரியாமல், 'சாப்டியா' என்றேன்.

'ம்... இன்னும் 3 மணிநேரம் ஆனா அது வெளிய போகும்.   அத கேக்கத்தான் டெக்ஸ்ட் பண்ணியா' என்றாள்

'சும்மாதான்'

'ஓகே. பாய்'

'இல்ல இல்ல. இரு. ஒண்ணு கேக்கணும்'

'என்னடா'

'இல்ல. நேத்து, வீட்ல ... உங்கம்மா உன்ன வெறுப்பேத்துனப்ப.... நீ கோவப்படல... அப்புறம்.... ... ... ... சிரிச்ச'

இதை ஒரு பத்து மெசேஜாக அனுப்பியிருந்தேன்.  கடைசியாக அவள் ஒரு ஸ்மைலி போட்டு முடித்து விட்டாள்.  என் அவஸ்தைகளை அது ஆரம்பித்து விட்டது.


இப்படி நான் பழையனவற்றை யோசித்துக் கொண்டிருந்தபோது, என் அம்மா வந்தாள்.  நான் உம்மென்றிருப்பது பொறுக்காது அவளுக்கு.  இரவில் உறங்கும் முன் ஒரு டம்ளர் குடிப்பது வழக்கம்.  அதைக் கையில் கொண்டு வந்திருந்தாள்.  'குடிப்பா செல்லக் குன்னாரு' என்றாள்.  குடித்தேன்.  குடித்து முடித்தபின், சேலைத்தலைப்பில் வாயைத் துடைப்பேன்.  சிறுவயது முதல் உள்ள பழக்கம்.  உறவினர் வீடுகளுக்குப் போனாலும் இந்த  பழக்கத்தை விடாமல் செய்வதற்கு அப்பாகூடத் திட்டுவார்.   நான் வாயைத் துடைத்துக் கொள்வேன் என்று என் அம்மா சேலைத்தலைப்பை நீட்டிய வண்ணம் இருந்தாள்.  நான் கவனிக்கவில்லை.  என் சட்டையில் துடைத்துக் கொண்டேன்.  அவள் சற்று ஏமாற்றமடைந்திருந்தாள்.  'என்னப்பா, முகம் வாடியிருக்கு', என்றாள் வாட்டத்தோடும் வாஞ்சையோடும்.  நான் சுமி கடற்கரையிலிருந்து பேசாமல் எழுந்து போனதையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

'ஒண்ணுமில்லன்னா விடுவே, ஏன் சொம்மா நய்யி நய்யின்னு சாவடிக்கிற', என்றேன்.

சாவு-சாகடிக்கிறாய் போன்றவற்றை பெற்றவளிடம் சொல்லக் கூடாது என்று அப்போது தான் புரிந்து கொண்டேன்.  அம்மாவுக்கு நொடி நேரத்தாமதமின்றி கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தது.  எனக்கு மேலும் கோபம் வந்ததேயன்றி, குறையவில்லை.  விருட்டென என் அறையை விட்டு அவள் உறங்கச் சென்று விட்டாள்.  நிச்சமாக அவள் இன்றிரவு உறங்கப் போவதில்லை.  நான் மீண்டும் சுமியுடனான நினைவுகளுக்குள் போனேன்.

குறுஞ்செய்தி வழியான அந்த உரையாடலுக்குப் பின், நாங்கள் அதைப் பற்றிப் பேசவேயில்லை.  வழக்கம் போல இருவரும் பேசிக் கொண்டிருந்தோம் அல்லது பேச முயன்று கொண்டிருந்தோம்.  ஆனால், அந்த நாட்களிலான தீண்டல்களில் இருவரும் வெட்கியும், கொணற்றியும் தீர்த்தோம்.  இப்போது நினைத்தால் அதெல்லாம் அதீதமோ என்று தோன்றுகிறது.  ஆனால், அது மிகவும் உற்சாகத்தையும், அடுத்த நிமிட ஆச்சரியத்தையும் ஒளித்து வைத்திருந்தது.  கல்லூரியில் சேர்ந்த பின், அவளைப் பார்க்கமல் இருப்பது வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்குச் செல்லும் குழந்தையைப் போல், மனம் சுற்றிக் கொண்டிருந்தது.  இடையில் ஒரு விடுப்பில் ஊருக்கு வந்திறங்கியபோது, பேருந்து நிலையத்தில் அவளைச் சந்தித்த போது சுற்றம் மறந்து இளித்துக் கொண்டிருந்தேன்.  அவள் அங்கிருந்து வெட்கத்தை அடக்கமாட்டாமல்,  தன் இடக்கையால், சிப்பி திறந்து மூடுவது போல 'வாயை மூடு' என்று சைகை செய்தபின், தன்னக்கான பேருந்தில் ஏறிவிட்டாள்.  அதன்பின் தான் நான் தன்னிலை உணர்ந்தேன்.  மாலை வீட்டுக்கு வந்தவள், அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.  என் அம்மா நான் வந்திருப்பதைச் சொன்னபோதும், ஆர்வம் காட்டாமல், 'அப்டியா' என்றுவிட்டு, மீண்டும் அவளுடன் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.  என்னைச் சீண்டிப் பார்க்கிறாள் என்று புரிந்தது.  நானும் காத்திருக்க முடிவெடுத்தேன்.  இருபது நிமிடம் போனது, என் பொறுமையும்.  எப்படியாவது அவளை அங்கிருந்து நகர்த்த நினைத்த போது, பக்கத்து தெருவில் சமையல் எரிவாயுக்காரன் வந்தது என் அம்மாவுக்குத் தெரிந்தது.  அவன் போன முறை வந்தபோது, அம்மா இல்லாத நேரமாதலால் அப்பாவிடம் ஏதோ கதை சொல்லி அதிகப் பணம் வாங்கிச் சென்று விட்டான்.  அவனைப் பிடித்துச் சத்தம் போட என் அம்மா, 'இருடீ வரேன்' என்று விரைந்தாள்.  அப்போது, அவள் சந்தோஷமான மெல்லிய பதைபதைப்போடு இருந்ததை, மொபைலைச் சுழற்றுவதன் மூலமும், மார்பின் அசைவின் மூலமும் பார்த்தேன்.

மெல்லிய சீட்டி இரண்டு அடித்தேன்.  திமிருடன் பார்க்கும் தோரணையுடன், 'என்னடா' என்றாள்.  இது அவள் வெட்கப்படுவதன் வெளிப்பாடுகளில் ஒன்று.  'இங்க வாடி, கார்த்திகைச் செல்வி என்கிற கார்த்தி' என்றேன்.  'செருப்பு பிஞ்சிரும்டா நாயே' என்றாள் குழைதலோடு.   கார்த்திகைச் செல்விதான் அவளது பெயர்.  சின்ன வயதில் கார்த்தி என்ற ஆண்பாலின் பெயரோடு அவளை எல்லோரும் கிண்டல் செய்ததால், அவளின் அடத்தால் சுமி என்றே அழைக்க அவள் அம்மா ஆரம்பித்தாள்.  இப்போது அவள் சுமி தான் எல்லோருக்கும்.

'இங்க வாவே'

'எதுக்கு' என்றபடி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.  நான் நுழைவாயிலை ஒட்டி, தையல் மிசின் இருக்கும் இடத்தை ஒட்டி நின்று கொண்டிருந்தேன்.  குழந்தையில் அங்குதான் ஒளிந்து விளையாடுவது.  மூன்றடி இடைவெளியில் நின்று கொண்டிருந்தவளின் வலது கையைப் பிடித்து முறுக்கினேன்.  கொஞ்சம் பலமாகவே முறுக்கிவிட்டேன்.  அந்த கொஞ்சம் புஷ்டியான கருப்புக் கையில், வெள்ளையாக வரிவரியாக தடம் கூட விழுந்துவிட்டது.  'சாரிடீ' என்றேன்.  'வலிக்குதுடா' என்றவாறு என் வயிற்றில் கிள்ளினாள்.  நானும் வலிப்பதைப் போலவே நடித்தேன்.  எனக்கு அவள் கன்னமும் பூனை முடிகொண்ட கழுத்தின் பக்கவாடுகளும் ஈர்ப்பை அளித்தன.  நாய்க்குட்டி தன் நாவால் நம்மை நக்கியபின் வரும் குளிர்ச்சியை அது என் கண்களுக்கு அளித்தது.  முட்டைக் கண்ணால் முறைத்தாள்.  புருவத்தால், 'என்ன?' என்றாள்.
'இல்ல, உன் கன்னத்த ஒரு தடவ தொட்டுப் பாக்கனும் போல இருக்கு.'

'ஹூகும்..', இந்த அசைச் சொல்லின் பொருள் இல்லை என்றாலும், அது ஆம் என்று வழுவமைதியாக மாறிவிட்டதை நானும் அறிவேன்.

மெல்ல, அவளது கன்னத்தை என் வலது கையால் இருவிரல் கொண்டு வருடிக் கொண்டிருந்தேன்.  அப்போது மயிர்கூர்ச்செரிந்த அவளது கழுத்தின் பக்கவாட்டுப் பூனைமுடி, என்னைக் கிளர்ந்தெழ வைத்தது.  சட்டென அவள் உதட்டில் முத்தமிட்டேன்.  அதிர்ச்சியானாலும் அவள் சிரித்ததை உணர்ந்தேன்.  அவ்வளவு மிருதுவான, வழவழப்பான ஒன்று இருக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவேயில்லை.  ஜிகிர்தண்டாவில் இருக்கும் கடற்பாசியைப் போல வழவழப்பு.  சுவையற்றிருப்பதன் சுவை.  சொற்ப நொடிகள்தான், கிறுகிறுத்து இருந்தேன்.  விலக்கிக் கொண்டு சிரித்தபடி, நகர்ந்து நின்றபடி, என் தொடையில் கிள்ளினாள்.  கிள்ளுவது கொஞ்சல் வகையில் சேர்த்தி.  'கள் குடித்த குரங்கு இப்படித்தான் இருந்திருக்கும் போல' எனச் சொல்லிச் சிரித்தேன்.  அவளும் சிரித்தாள்.  பின் அதுவே முத்ததிற்கான சங்கேதச் சொல்லாகவும் மாறியது.

நான் சிகிரெட் புகைப்பது அவளுக்குத் தெரியும்.  அம்மாவிடம் போட்டுக் கொடுக்கவா என்றெல்லாம் இரண்டு முறை மிரட்டியிருக்கிறாள்.  இப்போதெல்லாம் கள் குடிப்பதற்கு முன் கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏதாவது செய்துவிடுகிறேன்.  கடற்கரையில் முத்தம் கொடுத்துக் கொள்வதில் எங்கள் இருவருக்குமே உடன்பாடு இல்லை.  அது நம் அந்தரங்கம், அதை போர்ன் வீடியோக்களைப் போல கடற்கரையில் நிகழ்த்துவது பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள்.  இப்போது முத்தமிடுகையில், நான் நெருங்கி என் ஹார்மோன்களுக்கேற்ப நகர, அவள் சற்று நேரம் அருகே வந்த பின் காத்திருப்பாள்.  இரண்டொருமுறைக்குப் பின் தான் புரிந்தது, நான் சிகிரெட் புகைத்திருக்கிறேனா என்று முகர்ந்து பார்க்கிறாள்.  ஆனாலும் முத்தம் ஒருபோதும் தடைபட்டதில்லை.  ஆரம்பநாட்களில் சிகிரெட்டெல்லாம் பரவாயில்லை என்றாள்.  பின் குறைத்துக் கொள் என்றாள்.  அதற்காகத்தான் இந்த நடவடிக்கை போல இருக்கிறது.

இப்போதெல்லாம் அடிக்கடி சண்டை வந்து விடுகிறது.  சண்டை கடைசியில் சமாதானமாவது ஒரு முத்தத்திலோ அல்லது ஒரு இறுக்கமான அணைப்பிலோதான்.  கதைகளில் காமத்தினால் தான் சண்டையே உருவாகும், ஆனால் நம் இயல்பு வாழ்க்கை கதை அல்லவே.  எனவே காமமே சமாதானம் செய்து வைக்கிறது.  கொஞ்சம் திமிறி பின், நானும் அவளும் சமாதானமாவது வழமை.  சமாதானம் என்பது பேச்சுவார்த்தை மூலம் காண்பது என்று நாடுகள் தீர்மானிக்கின்றன.  ஆனால், தனிமனித வாழ்க்கையில் பேச்சுவார்த்தையில் தானே சண்டைகள் உற்பத்தியாகின்றன.  காமம் தீயாக எல்லா நேரங்களிலும் ஒப்பிடப்படுகிறது, சொல்லப் போனால் எனக்கு அது அப்படி இல்லை, அது நீர்.  கசப்பில் எரிந்து கொண்டிருக்கும் போது, அந்த தேவை எங்களை இணைத்துவிடுகிறது.  ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொண்டு போகச் சொல்லிவிடுகிறது.  இன்னும் சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பேன், அணைத்திருக்கும் நேரங்களில் பேசுவதேயில்லை.  ஆனால், நான் முறுக்கும் போது அவள் நெகிழ்வதும், அவள் முறுக்கும் போதும் நான் நெகிழ்வதும் ஒருசேர, நல்ல இசைக் கச்சேரியைப் போல இயைந்து இருக்கும்.  அதனால் பிறிதொரு அணைப்பில் சமாதானமாகிவிடுவாள்.  இப்படியே எண்ணங்கள் ஓட எப்போது தூங்கிப் போனேன் என்று தெரியாமல் தூங்கிப் போனேன். 

காலை எழுந்தேன்.  இப்போது மனம் கொஞ்சம் தெளிவாக இருப்பதைப் போல் தோன்றியது.  இரவு அம்மாவிடம் மூர்க்கமாக பேசியிருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.  போய் அவளிடம் இப்போது பேசினாலும், இயல்பாகப் பேசுவாள்.  ஆனால் நேற்று அதிக மனஸ்தாபமாகிவிட்டபடியால், இன்று ஞாயிறுக் கிழமை பெசண்ட் நகர் ஆரோக்கிய மாதா கோயிலுக்குச் சென்று வந்தேன் என்றால், விரைவில் ராசியாகிவிடுவாள்.  ஏனெனில் நான் ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குச் சென்று நீண்ட நாட்களாகின்றன்.  என் அம்மாவும் சொல்லிச் சொல்லிச் சலித்துப் போய்விட்டாள்.  நான் குளித்துக் கிளம்புவதைப் பார்த்தாள்.  நான் வேண்டுமென்றே சிரிக்காமலேயே கிளம்பிவிட்டேன்.  அவள் காலை ஆறு மணிக்கெல்லாம் சென்று வந்துவிட்டாள்.  நான் எட்டு மணிக்கு நடக்கும் பூசைக்குப் போகிறேன்.  கோவிலில் நல்ல கூட்டம்.  பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்கள் அதாவது, அன்று மட்டும் கோயிலுக்கு வருவதோடு சரி.  நான் எந்தக் கூட்டம் என்று தெரியவில்லை.  ஆனால் இன்று வந்திருப்பது, சும்மா மன திருப்திக்கு.  சும்மா அமர்ந்திருந்தேன்.  பங்குத்தந்தை பிரசங்கத்தில் சொல்வதையெல்லாம் நான் கவனிப்பதேயில்லை.  சுற்றிலும் இருக்கும் படங்களையும், எழுத்துக்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.  நான் என் சிறு வயது முதலே பார்த்த இடமாதலால், பெரிய சுவாரசியமெல்லாம் இருக்காது.  சும்மா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஓரத்தில் ஒரு ஆரோக்கியமாதா சுரூபம், கையில் குழந்தையுடன்.  அந்தப் பெண்ணும் குழந்தையும் நல்ல லட்சணமாய் இருந்தார்கள்.  நல்ல சிவந்த நிறம்.  யூத லட்சணம்.  நெற்றிக்கும் மூக்குக்கும் இடையில் உள்ள மூக்குத் தண்டு பள்ளமாக இரவே இராது.  நீள்வட்டத்துக்கும் வட்டத்துக்கும் இடைப்பட முகம்.   தலையில் கிரீடம்.  பளபளக்கும் அங்கி பொன்ற ஆடை.  கையிலிருக்கும் குழந்தையும் அதற்கு ஏற்றாற்போல் இருந்தது.  அந்த சுரூபத்திற்கு மேல் ஒரு வாசகம் 'இதோ உன் தாய்'.  இதை வாசித்ததும், சொற்சுழலுக்குள் வழுக்குவது போல் இருந்தது.  இந்த வார்த்தைக்கும் அந்த சுரூபத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.  அந்த சிவந்த, உருவம் கொண்ட லட்சணமான பெண் என் தாயாக இருக்க வாய்ப்பு இல்லை.   வெளிநாட்டுப் பெண் ஒருத்தியை வைத்து எப்படி இவளை என் தாயாக எடுத்துக் கொள்வது?  இல்லை இல்லை.  இவள் என் தாய் இல்லை.  காலையில் நான் இங்கு வந்திருக்கவே கூடாது.  என்னைக் குழப்பத்திலாழ்த்தி விட்டது.  சின்னவயதில்  சைக்கிள் ஓட்டிப் பழகும் போது ரோட்டில் ஒருத்தன் மோட்டார் சைக்கிளில் தட்டிவிட்டுச் சென்றுவிட்டான்.  முழங்கால் சிராய்ப்புடன் அழுத என்னை, தான் வைத்திருந்த மீன் கூடையை மேலே இருக்கும் இறால்கள் இரண்டு சிதறுமளவு வேகமாக வைத்துவிட்டு, 'அந்த பாடு பய கிடக்குறான்ப்பா. எந்திரி எந்திரி'  என்று என்னைத் தூக்கிவிட்டு, என்னோடு வீட்டுவரை வந்து விட்டுவந்த அந்த, வெற்றிலை குதப்பிய, பெரிய பொட்டு வைத்த, அந்த கரிய பெண்தான் தாய் போல தோற்றமளிக்கிறாள்.  இதையெல்லாம் நான் ஏன் யோசிக்கிறேன்? மூளை குழம்பிவிட்டதா?

இனி நான் இங்கே இருத்தல் ஆகாது, திடுதிப்பென்று வெளியே ஓடி வந்தேன்.  நேற்று சுமி கோபித்ததால், என் அம்மாவிடம் எரிந்து விழுந்தேன்.  அதனால் அவள் மனம் சங்கடப்பட்டு இருந்தாள்.  அவளைச் சமாதானப்படுத்த கோவிலுக்கு வந்து, இப்போது குழம்பிவிட்டேன்.  அம்மா ஒன்றும் சொல்ல மாட்டாள் என்று எனக்குத் தெரியும்.  என் மனதிருப்திக்காகவே இங்கு வந்தேன்.  பிள்ளை என்ன தவறிழைத்தாலும், தாய்க்கு அது ஒரு பொருட்டல்லவே.  வெளியே வந்தால், சுமி நிற்கிறாள்.  காலையில் அவளை முற்றிலும் மறந்திருந்திருக்கிறேன்.  அவளும் இதை அறிந்திருக்கிறாள்.  நான் அவள் கோபித்துக் கொண்டதை இன்னும் நினைப்பில் வைத்திருந்தால், காலையிலேயே அவளை தேற்ற முயன்றிருந்திருப்பேன். அது நடக்கவில்லையாதலால்,  நான் வேறு ஏதோ குழப்பத்தில் வந்திருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறாள்.  அதனால்தான் வெறும் சிரிப்போடு என்னைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டு நிற்கிறாள்.  என் கண் வெறுமனே பொங்கி நிற்க, அவள் தரையிலிருக்கும் இரும்புத் துகளை ஈர்க்கும் காந்தம் போல , என்னை இழுக்கிறாள்.  நான் ஓடிச் சென்று, சாலை ஓரத்தில நிற்கும் அவளிடம் ஏதோ சொல்ல வந்து, தேம்புகிறேன்.  வார்த்தை கடைசிவரை வரவேயில்லை.  ஏதும் பேசாமல், கடற்கரை ஓரத்திலிருக்கும் சிமெண்ட் இருக்கையில் உட்காருகிறோம்.  என் முகத்தை தன் தோளில் வைத்துக் கொள்கிறாள்.  என் கண்ணீர் மயிர்க்கூர்ச்செரியாத அந்த பக்கவாட்டுக் கழுத்துப் பூனை மயிர்களை நனைத்துக் கொண்டிருக்கிறது.