Pages

Tuesday, 4 October 2016

எல்லை கடத்தல்

காவேரிப் பிரச்சினைக்குப் பின்னால், நான் பெங்களூரை விட்டு வெளியே செல்லவில்லை.  கிட்டத்தட்ட ஒரு மாதம்.  அதற்கு முன் ஒரு மாதமாக வீட்டில் அடுத்த மாதம் வருகிறேன் என்று சொல்லிவந்தேன்.  எனவே நான் வீட்டிற்கு அல்லது தமிழ்நாட்டிற்குச் சென்று இரண்டு மாதங்களாகிவிட்டன.   குறைந்தபட்சம் சேலம் வரையாவது சென்று வருவது, பெங்களூர் வந்தபின் வழக்கமாகிவிட்டது.   தனித்திருத்தல் என்பது இவ்வளவு சுமை என்பதால் நிகழ்ந்த மாற்றம் இது.  பள்ளிமுதல் கல்லூரி, இப்போது வேலைக்குச் செல்லும் போதும் அறையில் குறைந்தது மூன்று பேருடனாவது இருந்து, நான் இன்னும் விடுதியில் கூட்டமாக இருக்கும் மனநிலையிலேயே இருந்து வருகிறேன்.  போகட்டும்.

பெங்களூர் வந்ததிலிருந்து செய்திகள் எனப்படுவது ஃபேஸ்புக்கில் வருவதுதான், புரளிகள் மற்றும் லைக்குகளுக்காக செறிவூட்டப்பட்ட செய்திகளும்தான்.  இவை கிட்டத்தட்ட புனைவுகளுக்கே சவால் விடக் கூடியவை.  எனவே அவற்றை ஒரு பொருட்டாக இப்போதெல்லாம் கவனிப்பதில்லை.  மேலோட்டமாக மேய்வதோடு சரி.  இதனால் 'கர்நாடகா-தமிழ்நாட்டு எல்லையில் பதட்டம்', 'மணப்பெண் நடந்து வந்து மணம்புரிந்தார்' இதையெல்லாம் செறிவூட்டப்பட்ட செய்திகள் என்று விடுத்திருந்தேன்.  நம் ஆட்களுக்கு இப்போதெல்லாம் தமிழ் இலக்கணத்தில் மேல் பெரும் காதல் வந்துவிட்டது போலும்.  அதிலும் 'உயர்வுநவிற்சி' அணியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

வழக்கமாக, பெங்களூர் - சேலம், சேலம் - திண்டுக்கல் என்று முன்பதிவு செய்யாமல் செல்வது எனக்கு விருப்பமானது.  சென்னையிலிருந்து என் ஊருக்குச் செல்வதைப் போலல்லாமல் இங்கு எப்படியாவது பேருந்தைப் பிடித்துவிடலாம்.  அதுவுமில்லாமல் முன்பதிவு செய்தால் பயணச் செலவும் இருமடங்குக்கு மேல்.  முன்பதிவு செய்யாமல் சென்றால் 286 ரூபாயில் என் வீட்டைச் சென்றடைய முடியும்.  தனியார் பேருந்துகளில் முன்பதிவுக் கட்டணத்தைப் பார்த்தால், குறைந்த பட்சக் கட்டணம் 650 ரூபாய்.  இது குளிரூட்டப்படாத, பின்னால் இழுத்துவிட்டுக் கொள்ளும் இருக்கை கொண்ட பேருந்தில்.  படுக்கை, குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.  அரசுப் பேருந்தில் நான் முன்பதிவு செய்ய முயலுவதில்லை.  ஏனெனில் எந்த முன்னறிவுப்புகளையும் பெறுவது அவ்வளவு எளிதில்லை.  தனியார் பேருந்துகளில் தனியாக பேருந்து நடத்துநர் எண்ணைக் கொடுத்திருப்பார்கள்.  எளிதில் தொடர்புகொள்ள முடியும்.

வெள்ளிக்கிழமை இரவு நான் கிளம்ப வேண்டும்.  காலை அலுவலகம் வந்தேன்.
என் அலுவலகத்திற்கு கணசமான நபர்கள் ஓசூரிலிந்து வருகின்றனர்.  'சும்மா கேட்டுத்தான் பார்ப்போமே' என்று அவர்களிடம் கேட்டால், செய்திகளில் வருவது போல், இன்னும் பேருந்துகள் இருமாநிலங்களுக்கும் இடையில் இயல்பான நிலையில் இயக்கப்படவில்லை.  எல்லை வரை இரு மாநிலப் பேருந்துகளும் வந்து தத்தம் எல்லையிலிருந்து ஆட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தனர் என்று அவர்கள் சொன்னதும், எனக்கு அப்படிச் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் வந்தது.  ஆனால், நான் அடுத்தநாள் காலையிலேயே என் அம்மாவை 10-11 மணிக்குள்ளாக மதுரைக்கு சிகிச்சை ஒன்றுக்காக அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.  தனியார் பேருந்து வலைத்தளத்தில் 'பைசா'வை நோட்டம் விட்டேன்.  650 ரூபாய்க்கு பெங்களூர் - திண்டுக்கல் பேருந்து சிக்கியது.  ஒரே ஒரு இருக்கை மட்டுமே மீதமிருந்தது.  முன்பதிவிட்டுவிட்டேன்.  இரவு 9:30 க்கு பேருந்து.

குறித்த நேரத்திற்கு, மடிவாலாவில் இருக்கும் அந்த பேருந்தின் அலுவலகத்திற்குச் சென்றால், பேருந்து தயாராக இருந்தது.  திருப்தியுடன் ஏறி அமர்ந்தேன்.  உள்ளே ஆறேழு பேர் தான் இருந்தோம்.  என் இருக்கையில் அமர முற்பட்டபோது,  'டேய், அலோசியஸ் டேய்' என்று மைனர் செயின் போட்ட, கருத்த வட்ட முகம் கொண்ட ஒருவன் என்னை அழைத்தான், கடைசி இருக்கைக்கு முந்தின இருக்கையிலிருந்து.   யாரென்று தெரியாமல், அருகில் சென்றேன்.  கிட்டத்தில் பார்க்கும் போது தான் அவன் என்னோடு இளங்கலையில் படித்தவன், அர்ஜூன் (எ) அருண்பாண்டியன் என்று கண்டேன்.  கிட்டத்தட்ட ஐந்நாண்டுகளுக்குப் பின் சந்திக்கிறோம்.  இரவு முழுவதும் கதை பேசிக்கொண்டே சென்றோம். 

வெள்ளிக்கிழமைகளில் சாலை மற்றும் சுங்கச் சாவடிகளில் நெரிசல் அதிகமாக இருக்கும்.  இன்று அப்படி இல்லை.  எல்லையை அடைந்ததும், எல்லோரும் வெளியே எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள்.  நானும் தமிழன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டேன்.  எட்டிப் பார்த்தால், கர்நாடக எல்லையில் கர்நாடகப் பேருந்துகளும், தமிழ்நாட்டு எல்லையில் தமிழ்நாட்டுப் பேருந்துகளும் நின்றிருந்தன.  மக்கள் இரு எல்லைகளிலிருந்தும் நடந்து வந்து கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.  அப்போதே முடிவு செய்திருந்தேன்.  திரும்பி வரும்போது இப்படித்தான் வந்தாக வேண்டும் என்று.  இடையில் தேநீருக்காக பேருந்து நின்றது.  அப்போது கவனித்தேன், அங்கு நின்றிருந்த பேருந்துகள் எல்லாம் தமிழ்நாட்டுக்குள் கர்நாடகாவிலிருந்து வந்தவை.  ஆனால், ஒரே ஒரு பேருந்து மட்டுமே KA என்று இருந்தது.  மீதமுள்ள அத்தனை பேருந்துகளும் வேறு மாநிலத்தின் பெயர்ப்பலகைகளையே கொண்டிருந்தன, பாண்டிச்சேரி, கேரளா என்று.  நான் வந்த பேருந்து கேரளப் பதிவெண்.  CD என்று கூட ஒன்று பார்த்தேன்.  இது எந்த மாநிலம் என்று யாராவது தெரிந்தால் தெரியப்படுத்தவும். 

வீட்டற்குச் சென்று, ஞாயிறு மாலை சேலம் பேருந்த ஏற வந்திருந்தேன்.  பெங்களூரில் இருந்த என் அண்ணன் வீட்டிற்கு, என் சித்தி கோழிக்குழம்பு வைத்து என்னிடம் கொடுத்து விட்டிருந்தனர்.  அதையும் எடுத்துக் கொண்டு, சேலம் வந்தேன்.  நள்ளிரவு 12 மணிக்கும் நிறைய பேருந்துகள் ஓசூருக்கு ஓடிக் கொண்டிருந்தன.  பெங்களூர் பலகையிட்ட பேருந்துகளும் ஓசூர் வரைதான் செல்லும் என்று நடத்துநரால் அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.  அப்படி ஒரு பேருந்தில் ஏறி, அதிகாலை 3:30 மணியளவில் ஓசூர் வந்தடைந்தேன்.

என்னைப் போல, அங்கே கிட்டத்தட்ட 300 பேர் அங்கிருந்து எல்லையை அடைய பேருந்துக்காக காத்திருந்தனர்.  நானும் ஐக்கியமானேன்.  அங்கிருந்த டேக்ஸியில் 150 ரூபாய் கேட்டார்கள் தலை ஒன்றுக்கு, பெங்களூர் வரை.  கொள்ளை விலை.  நான் அமைதியாக நகர்ந்து வந்து கூட்டத்தோடு கூட்டமாக வந்து நின்று கொண்டேன்.  முதலில் இரு பேருந்துகள் வந்தன.  பிலாச்சுளையை மொய்க்கும் ஈக்கள் போல மொத்தப் பேரும் ஓடினர்.  நானும், ஜோடியாக வந்திருந்த இளைஞர்களும், இன்னும் சிலரும் மட்டும் ஓடாமல் காத்திருந்தோம்.  பின் இன்னும் ஒரு பேருந்து வந்ததும், கூட்டம் வற்றியிருந்தது.  அடுத்த பேருந்தில் நானும் ஏறி இடம் பிடித்து அமர்ந்துவிட்டேன்.  நடத்துநர் சீட்டுக் கேட்டு வந்து கொண்டிருந்தார்.  எவ்வளவு என்று விசாரித்ததில் 16 ரூபாய் என்று சொன்னார்.  சமர்த்தான பிள்ளையாக சில்லரை கொடுத்து சீட்டு வாங்கிக் கொண்டேன்.  எனக்குப் பின்னிருக்கையில் பெரியவர் ஒருவர் 'எட்டு ரூபாய் தானப்பா?' என்றார்.  'இல்லீங்கய்யா... 16 ரூபாய்... அதான் வாங்க எங்களுக்கு சட்டம்' என்றார், நடத்துநர்.  அவர் வழக்கமாக வந்து செல்பவர் போலிருக்கிறது.  'என்னதாய்யா... நடக்குது.. எட்டு ரூவா டிக்கெட்ட பதினாரு ரூவான்னு குடுக்குறாங்க... கொள்ள.. கொள்ள... எல்லா கொள்ள '  இன்னும் என்ன என்னவோ சொல்லி திட்டிக் கொண்டிருந்தார்.  நான் என் தலையைத் திருப்பாமல், என் மொத்த கவனமும் அவர் பேச்சையே கவனித்துக் கொண்டிருந்தேன்.  பிறகு தான் இன்னொன்றையும் கவனித்தேன்.  எங்களின் அருகில் இருந்த அத்தனை இளைஞர் கூட்டம் அப்படித்தான் இருந்தது.  தலையைத் திருப்பவில்லையே தவிர, எல்லோரின் கவனமும் அவர் பேச்சில் இருந்தது.  அது முகங்களில் தெரிந்தது.  இதுதான் இன்று பெருநகரில் பணிபுரியும் இளவயதினர் பெரும்பலோனோரின் எண்ணம்.  நான் கூட நடத்துநரிடம் இதைப் பற்றிப் பேசலாமா என்று நினைத்தேன்.  யாராவது தொடங்கினால், எல்லோரும் கூடுவர் என்ற நம்பிக்கை.  கடைசிவரை இப்படியே கற்பனையிலேயே நிறுத்தம் வந்துவிட்டது.


எல்லை வந்தது.  இறங்கினேன்.  இருநூறு முதல் முந்நூறு மீட்டர் தொலைவில் தான் கர்நாடகப் பேருந்துகள் நின்றிருந்தன.  இடையில் எல்லையாக குறிக்க, 'வரவேற்பு, நன்றி' சொற்கள் பொறித்த வளைவு.  பெயர் தான் வளைவு, செவ்வக வடிவில் இருக்கும்.  நான் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.  'எல்லையைக் கடக்கப் போகிறேன்' என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.  அப்படிச் சொல்லுவதே ஒரு மெல்லிய கிளர்ச்சியை உண்டாக்கியது.  எல்லையை மீறுவதுதான் எல்லாவற்றிலும் ஒரு பரபரப்பையும் ஒரு விதமான திகிலையும் அளிக்கக் கூடியது.  இரு எல்லைகளிலும் இரு மாநிலக் காவலர்களும் நின்றிருந்தனர்.  தூக்கம் அப்பிய, ஆர்வமற்ற, சலிப்பு நிரம்பிய முகங்கள் அவை.  மின் விளக்குகளால் அப்பகுதி முழுக்க ஒளி படர்ந்திருந்தது.  இதற்கு முன் நான் இப்பகுதியைக் கடக்கும் போது எனக்கு எதுவும் தோன்றியதில்லை.  இப்போது இந்த காவேரிப் பிரச்சினையில் இப்படியான பதட்டம் உருவான அல்லது உருவாக்கப்பட்ட பின் இந்தச் சூழலில் நடப்பதை எண்ணி நானே சாகசம் செய்வதைப் போன்ற கற்பிதம் செய்து கொண்டேன்.

நடக்கும் போது, ஏதாவது பிரச்சினை வந்தால் ஓடி ஒளிந்து கொள்ளலாம்.  ஒருநாளுக்குத் தேவையான உணவாக, கையில் இருக்கும் கோழிக்கறியைத் தின்று கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன்.  அங்கு நடந்த ஒரு உரையாடலைக் கவனித்தேன்.  இரு இளைஞர்களை டிக்கெட் பரிசோதகர் திட்டிக் கொண்டிருந்தார்.  அவர்கள் ஏதும் பேசவில்லை.  'இத்தன பேரு பேசாம டிக்கெட் வாங்கிட்டு போறேங்க.  ஒங்களுக்கு என்ன சார்?  பதினாறு ரூவானா பதினாறு ரூவாதான்.  அவர் போடுறது தான் டிக்கெட்.  நாங்க போடுறதுதான் ஃபைன்.  முன்னூரு ரூவா எடுங்க' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அந்த இரு பையன்களும் டிக்கெட் எடுக்காமல் வந்திருக்கலாம்.  அல்லது  ஏன் இவ்வளவு விலை என்று நடத்துநரிடம் வினவியிருக்கலாம், அதனால் நடத்துநர் சண்டை பிடித்துக் கொண்டே கடைசி நிறுத்தம் வரை வந்திருக்கலாம்.  எது எப்படியானாலும் கொஞ்சம் பொறுப்போடு அவர் பேசியிருக்கலாம் என்று தோன்றியது.  சென்னையில் இரவு நேரப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.  அதுபோலத் தான் இதுவும் இருந்திருக்க வேண்டும்.  ஆனால் அவர் அதை தெளிவாகச் சொல்லியிருக்கலாம். 

தமிழ்நாட்டு எல்லைக்குள் கர்நாடக தனியார் பேருந்துகள் பெங்களூரு செல்ல, சாமிபாடல் உரக்க ஒலிக்க நின்றிருந்தன.  எல்லாப் பேருந்துகளும் படியில் பிதுங்கும் அளவுக்கு நிறைந்திருந்தன.  கடைசிப் பேருந்தில் நிற்பதற்கு இடம் இருந்தது.  ஓடி ஏறிக்கொண்டேன்.  விலை என்ன என்று கேட்டவில்லை என்பது மேலே ஏறிய பின் தான் உறைத்தது.  வேறு வழியுமில்லை.  இன்னும் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகம் தான் ஆகும்.  நான் ஏறியது தான் அப்போது கடைசிப் பேருந்து, இதைவிட்டால் அடுத்த பேருந்து எப்போதென்று தெரியாது.  மடிவாலாவுக்கு எவ்வளவு என்று கேட்டபோது, அவன் 50 ரூபாய் என்றான்.  மெல்லிய ஆச்சரியத்துடன் காசு கொடுத்தேன்.  பின் இறங்கும் வரை, அரசுப் பேருந்தில் பணிபுரிபவர் பேசியதையும், தனியார் பேருந்துக் காரன் பேசியதையும் நினைத்துக் கொண்டே வந்து சேர்ந்தேன்.

No comments:

Post a Comment