Pages

Wednesday, 3 August 2016

சென்னை - முன்பு புதிய இடம்

பெங்களூருக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.  என் அலுவலகத்தில் திடுதிப்பென முடிவு எடுக்கப்பட்டு, ஆறுமாதங்களுக்கு முன், 'மூன்று வாரம் மட்டும் இருந்துவிட்டு வா' என்ற உத்திரவாதத்தின் படி பெங்களூரில் உள்ள கிளையண்ட் அலுவலகத்திற்கு வந்தேன்.  முற்றிலும் புதிய அனுபவங்களின் இடமாக இந்த இடம் மாறிப்போனது.  இதுவரை தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்ததே இல்லை.  சென்றிருந்தாலும், கேரளா தான் சென்றிருக்கிறேன், நண்பர்களுடன்.  அது ஒரு பெரும் மகிழ்ச்சியான அனுபவம்.  அனுமோன் வீட்டுற்குச் சென்றிருந்தோம்.  அவன் அம்மா அவ்வளவு அன்போடும் பாசத்தோடும் எல்லோரையும் கவனித்தார்.  அறுவருக்கும் சமைத்து, கேரள விருந்தோம்பலில் எங்களை மிரட்டி வைத்தார்.  அப்படியான சொகுசான இடங்களுக்குத்தான் சென்று வந்திருக்கிறேன்.  சென்னை வந்ததும் கூட அப்படித்தான். அற்புதராஐ் வீடு மட்டும் அங்கு இல்லை என்றால், நான் ஏதாவது ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியர் என்ற பட்டத்துடன், பெஞ்சைத் தேய்த்துக் கொண்டிருந்திருப்பேன்.




வெளியிடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் என் தன்னம்பிக்கை அதிகரிப்பதை உணர்கிறேன்.   
பெங்களூர் வந்த நாளை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.  புதிய இடம் பாரக்கப் போகும் உற்சாகம் சிறிதும் இன்றி, பயத்துடன் தான் வந்தேன்.  கன்னடம் தெரியாது.  ஹிந்தி -  சுத்தம்.  நம் தின இதழ்களும், ஊடகங்களும் காட்டிய கர்நாடகாவால் உண்டான காழ்ப்புண்ரச்சியும் பயமும் பெரும் பீதியைத்தான் கிளப்பியிருந்தன எனக்கு.  வந்தபின்பு தான் ஒன்று தெரிந்தது, இங்கு இருப்பவர்களில், அதாவது பெங்களூரில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசுகின்றனர்.  அதிலும் நான் இப்போது இருக்கும் மடிவாலாவையெல்லாம் கேட்கவே தேவையில்லை.  கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத தமிழ்ப்பிரதேசம்.  இந்தமாதிரி நம் ஊரில் ஆட்கள் இருக்க விடுவார்களா என்றெல்லாம் தெரியவேயில்லை.  ஆனாலும் இது தெரிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது, கிட்டத்தட்ட முதல் இரண்டு மூன்று வாரங்கள்.  

கடையில் ஏதேனும் பொருள்களைக் கேட்க வேண்டும் என்றால் கூட திக்கித் திக்கிக் கேட்டுக் கொண்டு(கனடாவில் பேச முயன்று) திரிந்தேன்.  ஒருமுறை என் அண்ணி வெள்ளைப் பூண்டு வேண்டும் என்று கேட்க, அதைக் கடைக்காரனிடம் எப்படிக் கேட்பது என்று கடைக்காரனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்.  'யாராவது வெள்ளைப் பூண்டு வாங்க வர மாட்டார்களா? அப்படி வந்தால் தெரிந்து கொண்டு கேட்டு விடலாமே' என்று வருவோர் எல்லோரின் வாயையும் என்ன வாங்குகிறார்ளகள் என்றும் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்போது தான் ஒரு அழகுத் தமிழ்க் கருப்பி வந்தாள்.  கருப்பின் பளபளப்புக்கென்று ஒரு போதை உண்டு, ஆப்பிரிக்கக் கருப்பைக் காட்டிலும் தமிழ், மலையாளப் பெண்களுக்கென்று தனிப்பட்ட பளபளப்பு உண்டு.    போகட்டும். வந்து அவள் என்ன வாங்கினாள் என்றெல்லாம் நான் கவனிக்கவில்லை. கவனிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை தானே?.  ஏதோ கேட்டாள், வாங்கினாள், சென்றாள்.  அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.  நான் வைத்த கண் வாங்காமல் பெண்களைப் பார்க்க, என் பிரக்ஞை தவறினால் தான் உண்டு.   பெண்களைப் பார்க்கும் எந்நேரமும் ஒரு வித பயம் இருந்து கொண்டேயிருக்கும், பார்வை தப்பிவிடுமோ என்று.  அவள் சென்றபின் தான், எனக்கு உரைத்தது, அவள் தமிழில் பேசித் தான் ஏதோ வாங்கிச் சென்றாள்.  அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்வத்தில் அவள் என்ன பேசினாள் என்பதைக் கவனிக்கத் தவறியிருந்தேன்.  அதுவரை என்னைக் கண்டுகொள்ளமல் இருந்த கடைக்காரன், என்னைப் பார்த்து 'என்னப்பா வேணும்?' என்றான்.    நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை, அவன் கவனித்திருக்க வேண்டும்.   பாவிப்பயல், இத்தனை நாட்களும் என்னை உளறவிட்டு வேடிக்கை பார்த்திருந்திருக்கிறான்.  பின் வெள்ளைப் பூண்டை வெள்ளைப் பூண்டு என்றே தமிழில் அவனிடம் கேட்டுப் பெற்றேன்.  அதன்பின் நான் எங்கு சென்றாலும், முதலில் தமிழில் பேசுவேன்.  புரியவில்லை என்றால் மட்டுமே உடைந்த கன்னடத்தில் பேச முயற்சிப்பேன்.  இப்படியாக பெங்களூருக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன்.




சென்னை - புராஜெக்ட் என்ற உன்னதமான ஒன்றுக்காக, சென்னை வந்தோம்.  நானும் வினோத்தும் திருச்சியிலிருந்து மலைக்கோட்டை தொடரூர்தியைப் பிடித்து வந்தோம்.  இதற்கு முன் ஒரே ஒரு முறை மட்டுமே தொடரூர்தியில் சென்ற அனுபவம் உண்டு, அதுவும் திருச்சி-திண்டுக்கல்.   ஆகவே, இது புதிய அனுபவமாக இருக்கும் என்று போன எனக்கு, அது ஒரு தாறுமாறான அனுபவமாகிப்போனது.  உட்கார இடம் இல்லை. தரையில் கூட.  'மூங்கில் காடுகளே...' பாடலில் வரும் விக்ரமைப் போல வந்தோம்.   வந்ததும் அற்புதராஜ் எங்களை வந்து கூட்டிச் சென்றான்.  அவன் வீட்டில் நல்ல சோறோடு, நான்கு நாட்கள் ஊர் சுற்றினோம்.   தினமும் 50 ரூபாய் சீட்டோடு நாட்கள் கழிந்தன். பின்,  2011 டிசம்பர் மாத இறுதி, 27 என்று நினைக்கிறேன். முதன் முதலில் திண்டுக்கல் மற்றும் திருச்சியை விட்டு நான் தங்கப்போகும் இடம்.  ரூபன் - அண்ணன், ஆதம்பாக்கத்தில் வாடகை வீடு பிடித்து வந்தான்.  நான் அவனுடன் சென்று தங்கினேன்.  வீட்டை விட்டு இருப்பது பிரச்சினையில்லை.  பள்ளி, கல்லூரி விடுதிகள் - என்னைப் பழக்கிவிட்டன.  இன்னும் சொல்லப் போனால் என்னால் இப்போதெல்லாம் சேர்ந்தாற்போல் வீட்டில் 2-3 நாட்கள் இருக்க முடியவில்லை.  நிலைகொள்ள மாட்டேன் என்கிறது.  சென்னையின் அறைதான் எனக்கான் இடமாகக் கூடத் தோன்றிவிட்டது. சென்னை வரும்போது தயக்கம் மிகுதியான ஒரு ஆளாக இருந்தேன்.  ஒன்றிரண்டு முறைகள் தவிர்த்து, மீதி நாட்களிலும் சென்னை வந்த தொடக்க நாட்ளகளில், இடம் தெரியாமல் அலையும் போதெல்லாம், யாரிடமும் பாதை கேட்காமல், நானே தேடிக் கண்டுபிடிக்க முயற்சிப்பேன்.  2-3 மணி நேரமாவது நடந்து திரிந்து, கால்கள் சோர்ந்து, திருப்பி செல்ல எத்தனித்து, 'சும்மா, கேட்டுப் பார்ப்போமே?' என்று கேட்டால், கிட்டத் தட்ட முதல் நபரே பாதையைச் சரியாகக் காட்டி விடுவார்.   ஆனாலும், 'நல்ல மாட்டுக்குத் தானே ஒரு சூடு' நமக்கு இல்லையல்லவா? அடுத்தமுறையும் நான் கேட்டதில்லை.  கிட்டத்தட்ட 10 முறையாவது இதே தவறைச் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக, தயக்கம் குறைந்தது.  சுத்தமாகப் போனது என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன்.  வெகுவாகக் குறைந்திருக்கிறது. சென்னை தான் காரணம்.  அதன் ஜனசந்தடி வெகு இலகுவாக்குகிறது.  எது எப்படியோ ஆறுமாதங்களுக்கு முன் பெங்களூர் வரும் போது, எனக்கு உண்டான மனநிலையை எண்ணிப் பார்த்தால், ஏதேதோ தோன்றுகிறது.  கிட்டத்தட்ட பிரேக்கப் ஆன மனநிலைக்கு ஒத்தது.

இன்றும் என்னால் சென்னையில் தூங்குவதைப் போல் பிற இடங்களில் தூங்க முடிவதில்லை.  திருச்சி எனக்கு மிகப் பிடித்த, மனதுக்கு நெருக்கமான ஊர்.  அங்கு கூட மீண்டும் செல்ல வேண்டும் என்று பெரிதாகத் தோன்றவில்லை.  ஆனால், சென்னையின் வெப்பம், கசகசப்பு, வீச்சமும் என்னை இழுத்த வண்ணம் உள்ளன.  இன்னொரு முக்கியமான காரணம், அங்குதான் நானே சம்பாரித்த ஆட்கள் உள்ளனர்.  வீடு திருப்புதல் எப்போது? 

No comments:

Post a Comment